நொய்டா மற்றும் மும்பை: ஷாஜி ஷபிக் (35) தனது மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்காக, ஒவ்வொரு வாரமும் மளிகைப் பொருட்களுக்கு ரூ. 4,000 செலவழிக்கிறார், இது 2012 இல் அவர் முதலில் திருமணம் செய்தபோது செலவழித்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.

"எங்களது மகள் பிறந்த பிறகு நிச்சயமாக செலவுகள் சேர்ந்தன; மேலும் வீட்டில் இருந்து வேலை செய்வது கணக்கீடுகளை சற்று திசைதிருப்பிவிட்டது, ஆனால் மொத்தத்தில், நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவழிக்கிறோம்," என்று அவர், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

நாங்கள் கணக்கீடு செய்தோம்: மூன்று பேர் கொண்ட அவரது குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கான அடிப்படை மளிகைச் செலவு (5 லிட்டர் பால், 2 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை மாவு, 1 லிட்டர் எண்ணெய், பருப்பு வகைகள், ஒரு டஜன் வாழைப்பழங்கள், 1 கிலோ ஆப்பிள்கள் மற்றும் தலா 2 கிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி) மார்ச் 2012 மற்றும் மார்ச் 2022 க்கு இடையில், 68% அதிகரித்துள்ளது என்று, மொத்த மற்றும் சில்லறை விலை தகவல் அமைப்பால் வெளியிடப்பட்ட விலை தரவுகள் காட்டுகின்றன.

ஜனவரி 2014 முதல் கிடைக்கும் நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் (CPI) – இந்தியாவில் ஒரு பொதுவான குடும்பம் உட்கொள்ளும் உணவுகளின் விலையில் ஏற்படும் மாற்றத்தின் அளவீடு– ஒப்பீட்டுத் தரவு, இதே போன்ற முடிவுகளைத் தருகிறது: ஜனவரி 2014 முதல் மார்ச் 2022 வரை விலை 70% அதிகரித்துள்ளது.

"உலகளாவிய காரணிகளான பொருட்களின் (விவசாய பொருட்கள் போன்றவை) விலை உயர்வு, எரிசக்தி விலை உயர்வு மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வுகள் மற்றும் கோவிட் தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக வினியோக பாதிப்பு போன்ற காரணங்களால் பணவீக்கம் ஏற்பட்டது" என்று, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியர் லேகா சக்ரவர்த்தி விளக்கினார்.

பணவீக்கம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது

பணவீக்கம் என்பது சரக்குகள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பின் வீதமாகும். இந்தியாவில், இது ஆண்டுக்கு ஆண்டு அளவிடப்படுகிறது, அதாவது ஒரு மாதத்திற்கான விலைகள், முந்தைய ஆண்டின் அதே மாதத்தின் விலைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இந்த விகிதத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு இடத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதை நாம் அளவிட முடியும்.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, மார்ச் 2021 உடன் ஒப்பிடும்போது, ​​மார்ச் 2022 இல் உணவுப் பொருட்களின் விலை 7.68% அதிகமாக இருந்தது. நவம்பர் 2020க்குப் பிறகு, இது இரண்டாவது மிக உயர்ந்த உணவுப் பணவீக்கம் ஆகும், நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (CPI) - இந்தியாவில் ஒரு பொதுவான குடும்பம் உட்கொள்ளும் உணவுகளின் விலையில் ஏற்படும் மாற்றத்தின் அளவீடு– 2019 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 9.5% அதிகமாக இருந்தது.

சராசரியாக, ஜனவரி 2014 முதல் மார்ச் 2022 வரை ஒவ்வொரு மாதமும் உணவுப் பொருட்களின் விலைகள் 4.483% அதிகரித்தன. அதாவது 2013 ஜனவரியில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட உணவுப் பொருளின் விலை, இப்போது கிட்டத்தட்ட 170 ரூபாய். நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டில் இருந்து, உணவுப் பணவீக்கத்திற்கான ஒப்பிடக்கூடிய தரவு, ஜனவரி 2014 முதல் கிடைக்கிறது.

மும்பையில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் டெவலப்மென்ட்டின் பொருளாதார நிபுணர் ராஜேஸ்வரி சென்குப்தாவின் கூற்றுப்படி, அதிக விலைகள் கடையில் இருக்கலாம். மொத்த விலைக் குறியீடு (WPI) –பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருட்களின் சராசரி மொத்த விற்பனை விலையில் ஏற்படும் மாற்றத்தின் அளவீடு– 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக உள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியாளர்களுக்கான உள்ளீடுகளின் விலை அதிகரிக்கும் போது, ​​அவர்கள் அதை அதிக விலை வடிவில் நுகர்வோருக்கு அனுப்புகிறார்கள்.

தொற்றுநோய்க்குப் பிறகு, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைவாக இருந்தாலும், எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக விநியோகம் இன்னும் இறுக்கமாக உள்ளது என்று சென்குப்தா கூறினார்.

எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள், இறைச்சி மற்றும் மீன், ஆயத்த உணவுகள் அதிக விலை: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக தரவு

ஷாஜியின் குடும்பம் இதுவரை தங்கள் உணவுப் பழக்கத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை, ஆனால் அவரது ஏழு வயது மகள் விரும்பும் ஆட்டிறைச்சி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பழங்களின் விலை உயர்வு குறித்து அவர் எச்சரிக்கையாக இருக்கிறார்.

"சேமிப்பதற்கான வழிகளைப் பற்றி நான் யோசித்து வருகிறேன், விலைவாசி உயர்வைத் தக்கவைக்க என்ன உணவுகளை நான் குறைக்க முடியும் என்பது பற்றி, ஆனால் இப்போது எங்கள் உணவில் எந்த மாற்றமும் இல்லை," என்று அவர் கூறினார்.

பணவீக்கமானது, நுகர்வோர் ஒரு வாரத்தில் எத்தனை முறை சாப்பிடலாம் என்பதை மறுபரிசீலனை செய்யும் அதே வேளையில், உணவக உரிமையாளர்கள் லாபம் குறைவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

"தொற்றுநோய் உணவு மற்றும் உணவக வணிகத்திற்கு ஒரு பெரிய அடியாகும்" என்று, ஷாஜியின் கணவர் சைம் ஜாபர் கூறினார், அவர் குர்கானில் உள்ள ஒரு துரித உணவு கூட்டு நிறுவனத்தில், பகுதி உரிமையாளராக உள்ளார், மேலும் குர்கானில் உள்ள மேலாண்மை நிறுவனத்தில் வணிக மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் தலைவராகவும் பணிபுரிகிறார். பர்கர்களில் நிபுணத்துவம் பெற்ற அவரது உணவகத்தில், எண்ணெய், கோழி மற்றும் காய்கறிகள் இன்றியமையாதவை.

"இப்போது, ​​உள்ளீடுகளுக்கான நிலையற்ற விநியோகச் சங்கிலியுடன்–இந்தியாவிலும் உலகெங்கிலும் கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக– மூலப்பொருட்கள், எரிபொருள்கள், நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்து வருவதையும் நாங்கள் சமாளிக்க வேண்டும்," என்று ஜாபர் கூறினார். "கூடுதலாக, நாங்கள் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், ஊரடங்கின் போது திரும்பிச் சென்று விட்டனர், மேலும் சம்பளத்தில் உயர்வை தராமல் அவர்களை மாற்ற முடியாது, இது புரிந்துகொள்ளத்தக்கது, ஏனெனில் அவர்களும் இந்த விலைகளை எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

அனைத்து உணவுக் குழுக்களிலும், சமையல் எண்ணெய்களின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக-18.8% அதிகரித்துள்ளது - அதைத் தொடர்ந்து இறைச்சி மற்றும் மீன் (9.62%).

ஷாஜியின் குடும்பம், உள்ளூரில் கிடைக்கும் இறைச்சியை வாங்குகிறது, எனவே சர்வதேச நிகழ்வுகளால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாது. இருப்பினும், 2019-20 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிடைக்கும் எண்ணெயில் 55.78% க்கும் அதிகமாக இந்தியா இறக்குமதி செய்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், இந்தியா உக்ரைனில் இருந்து 1.7 மில்லியன் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்தது, மேலும் அதன் விலை உக்ரைனில் நடந்த போராலும், பெட்ரோலியம் மற்றும் டீசல் விலை அதிகரிப்பாலும், ஊரடங்கு போன்ற விநியோகச் சங்கிலித் தடைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

உயர் பணவீக்கம் பொருளாதார மீட்சியைக் குறைக்கலாம்: நிபுணர்கள்

வரும் 2022-23ல் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் 7.2-7.5% வளர்ச்சி அடைந்தால், 2034-35ல் மட்டுமே தொற்றுநோயின் பாதிப்பில் இருந்து இந்தியா மீளும் என்று, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏப்ரல் 29 அன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. 2020-21 இல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2019-20 ஐ விட 7.3% குறைவாக இருந்தது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (IIP) அனைத்து கூறுகளும், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை அளவிடும் குறியீடு, 2021 இல் இருந்ததை விட பிப்ரவரி 2022 இல் (தரவு கிடைக்கும் கடைசி மாதம்) குறைவாக இருந்தது.

மே 2021 இல் அதிகபட்சமாக 11.84% ஆக இருந்த வேலையின்மை, ஏப்ரல் 2022 இல் 7.83% ஆகக் குறைந்துள்ளது என்று, இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆனால் பிப்ரவரி மற்றும் மார்ச் 2022 க்கு இடையில் தொழிலாளர் எண்ணிக்கை 3.8 மில்லியனாக சுருங்கியது.

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் சீனாவில் ஊரடங்கு ஆகியன மின்சாரத்திற்கான நிலக்கரி பற்றாக்குறை, தொழில்துறைக்கான குறைக்கடத்தி சில்லுகள் பற்றாக்குறை (குறிப்பாக கார்கள்) மற்றும் சர்வதேச பற்றாக்குறை (உணவு, எண்ணெய், சமையல் எண்ணெய், கட்டுமான பொருட்கள்) ஆகியவற்றை விளைவித்துள்ளது. இது தேவை வழங்கலை மீறும் சூழ்நிலையை உருவாக்குகிறது, இதன் விளைவாக விலைகள் உயரும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2004-2007 காலகட்டத்தில், தேவை அதிகரித்ததன் காரணமாக, 2006ல் மொத்தப் பணவீக்கம் உயரத் தொடங்கியபோது, ​​இதற்கு முன்னரும் இது நடந்தது. 2007 ஆம் ஆண்டில், விவசாயப் பொருட்களின் விலைகள் உலகளவில் அதிகரிக்கத் தொடங்கி 2008 இல் உச்சத்தை எட்டியது, இதனால் மொத்த விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டது, இது விரைவில் நுகர்வோர் விலைகளிலும் காட்டப்பட்டது, செங்குபாடா கூறினார். கூடுதலாக, 2009 இல் பருவமழை பற்றாக்குறையால் இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன, இதனால் தேவை அதிகரித்தது.

ரிசர்வ் வங்கி என்பது "பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட" மத்திய வங்கியாகும்

ஏப்ரல் 2021-க்கான பணவியல் கொள்கை அறிக்கையின்படி, மார்ச் 2026 வரை, இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை 4% ஆக வைத்திருக்க வேண்டும், மேலும் 2% அல்லது 6%க்கு மேல் இருக்கக்கூடாது. கடந்த மூன்று மாதங்களாக, பணவீக்கம் 6% க்கு மேல் உள்ளது, மேலும் ரிசர்வ் வங்கி தேவையை மேலும் அதிகரிப்பது ஆபத்தானது என்று சென்குப்தா கூறுகிறார்.

சாதாரணமாக, தேவையை அதிகரிக்க, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கலாம், அது வணிக வங்கிகளுக்கு (வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு கடன் வழங்கும்) நிதி தேவைப்படும்போது கடன் வழங்கும் விகிதத்தை குறைக்கலாம். ரெப்போ விகிதம் அதிகமாக இருக்கும் போது, ​​வங்கிகள் தங்கள் கடனைக் குறைக்கின்றன, இதனால் பொருளாதாரம் மற்றும் தேவையில் கிடைக்கும் பணம் குறைகிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மே 4, 2022 அன்று 4% இல் இருந்து 4.4% ஆக உயர்த்தியது, இது மே 2020 க்குப் பிறகு முதல் முறையாக மாற்றப்பட்டது. வலுவான நிலையான வளர்ச்சிக்கு விலை ஸ்திரத்தன்மை அவசியம் என்று 2022 ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.

ரிசர்வ் வங்கி, "வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், பணவீக்கம் முன்னோக்கி செல்லும் இலக்கிற்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக தங்குமிடங்களை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில் இணக்கமாக இருக்க முடிவு செய்துள்ளது" என்று, மும்பையில் அதன் அறிவிப்பு கூறியது.

சென்குப்தாவின் கூற்றுப்படி, ரிசர்வ் வங்கி விரைவில் செயல்பட்டிருக்கலாம் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்து இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். "அவர்களது அறிக்கையின் வார்த்தைகள் குழப்பமாக இருந்தது: அவர்களால் "இடமளிக்கும் நிலைப்பாட்டை" வைத்திருக்க முடியாது (கடன் வாங்குவதற்கு பணம் இருக்கும் என்று அர்த்தம்) மேலும் ரெப்போ விகிதத்தை உயர்த்தவும் (இது கடன் வாங்குவதற்கு அதிக செலவாகும்)," என்று அவர் மேலும் கூறினார்.

வங்கிகள் தங்கள் அதிகப்படியான நிதியை ரிசர்வ் வங்கியிடம் ரெப்போ விகிதத்தை விட குறைவான விகிதத்தில் வைத்திருக்க அனுமதிப்பதன் மூலம் பணவீக்கத்தை ஆர்பிஐ கட்டுப்படுத்த முடியும். "பொருளாதாரத்தில் அதிகப்படியான பணப்புழக்கத்தை உறிஞ்சுவதற்கு நிலையான வைப்பு வசதி விகிதம் பயன்படுத்தப்படுகிறது" என்று சக்ரவர்த்தி விளக்கினார். அதாவது, பொருளாதாரத்தில் தேவை இல்லாத பணம், ரிசர்வ் வங்கிக்குத் திரும்புகிறது, அதாவது, அதே அளவு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு குறைவான பணம் உள்ளது, இது விலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும்.

எதிர்காலத்தில் விலை உயர வாய்ப்புள்ளது

மார்ச் 2022 இல், மொத்த விலைக் குறியீடு பணவீக்கம் 14.55% ஆக இருந்தது. இது ஏப்ரல் 2012க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்சம் (நவம்பர் 2021க்குப் பிறகு 14.87% ஆக இருந்தது). குறியீட்டில் கால் பகுதி, உணவு மற்றும் உணவுப் பொருட்களால் ஆனது.

செங்குப்தாவின் கூற்றுப்படி, வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள், சிமென்ட், ஆடைகள் போன்ற தொழில்களுக்கான உள்ளீடுகள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது. இது உணவுப் பணவீக்கத்தையும் பாதிக்கும்.

"பணவீக்கம் ஒரு பணவியல் நிகழ்வு அல்ல [இது ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் சீனாவில் ஊரடங்கு போன்ற உலகளாவிய நிகழ்வுகளையும் சார்ந்துள்ளது], ரெப்போ ரேட் மாற்றங்கள் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த அறிவிப்பு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும், மேலும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை பணவீக்கத்தைக் குறைக்கும் என்று மக்கள் நம்புகிறார்களா என்று சக்ரவர்த்தி மேலும் கூறினார்.

நிலைமை மோசமாகும் என்று ஷாஜி எதிர்பார்க்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் பணவீக்கத்தில் இருந்து விடுபடுவதையும் அவர் காணவில்லை. விலை அதிகமாக இருந்தாலோ அல்லது மேலும் அதிகரித்தாலோ, அவள் தன் குடும்பம் செலவழிக்கும் விதத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். "இறைச்சி மற்றும் பழங்களை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன். இது தொடர்ந்தால் பழையபடி வாழ வழியில்லை," என்று அவர் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.