மும்பை: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கடுமையான பாதிப்பை தனது பட்ஜெட் உரையில் எடுத்துரைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவிட் நெருக்கடி மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேறியவர்கள் / குடியேறிய இந்தியர்கள் (NRIs) ஆகியோரின் துயரத்தை குறைக்க பல்வேறு ஒதுக்கீடுகளை அறிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் மலிவு வீடுகள் இவற்றில் மிக முக்கியமானவை.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் பெரும்பாலானவை புதியவை அல்ல என்பதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது - சில சிறிது காலமாக இருந்தன, மற்றவை குறைந்தபட்ச ஊதிய தளம் மற்றும் காப்பீடு போன்ற நிறுவப்பட்ட நடைமுறைகளின் விரிவாக்கமாகும். ஆயினும்கூட, புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் தனித்துவமான சிக்கல்களை ஒப்புக்கொள்வது மிகவும் முக்கியமானது, ஏனெனில் பாதிக்கப்படக்கூடிய இந்த குழுவை இலக்காகக் கொண்ட பிரதான கொள்கைகளுக்கு, இது வழி வகுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த ஊரடங்கு, உலகெங்கிலும் உள்ள நாடுகளை பாதித்துள்ளது: இந்திய பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் 8% சுருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் 2021 ஆம் ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை (11.5%) பதிவு செய்யக்கூடிய ஒரேநாடு இது என்று கணிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்பு நெருக்கடியின் மத்தியில் பட்ஜெட் 2021-22 வந்துள்ளது - ஊரடங்கால் கட்டுமானம் மற்றும் ஜவுளி உள்ளிட்ட முறைசாரா துறை தொழில்கள், அத்துடன் தோட்டக்காரர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வழங்கிய முறைசாரா சேவைகள் முடங்கின. இதனால் பல லட்சக்கணக்கான உள்நாட்டு புலம்பெயர்ந்தவர்கள் நகரங்களில் சிக்கித் தவித்தனர். திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆரம்ப தரவுத்தளத்தின்படி, ஆறு மாநிலங்களில் 116 மாவட்டங்களுக்கு, 67 லட்சம் புலம்பெயர்ந்தோர் திரும்பி வந்தனர்.

இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான உள்நாட்டு புலம்பெயர்ந்தவர்கள் உள்ளனர், அவர்களில் சுமார் 5.4 கோடி பேர் (12%) மாநில எல்லைகளை தாண்டி இருப்பதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தரவுகள் கூறுகின்றன. இந்த இயக்கம், புலம்பெயர்ந்தோரை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மானிய விலையில் உள்ள உணவு தானியங்களுக்கான பொது விநியோக முறை (PDS) உள்ளிட்ட முக்கியமான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான அணுகலை தடுப்பதாக, இடம்பெயர்வு ஆராய்ச்சி இலாப நோக்கற்ற இந்தியா மிக்ரேஷன் நவ் அமைப்பின், நவம்பர் 2020 கொள்கை பகுப்பாய்வு காட்ட்கிறது; இது, இன்டர்ஸ்டேட் மைக்ரண்ட் பாலிசி இன்டெக்ஸ் (IMPEX) அடிப்படையிலானது.

இந்நேரத்தில் இந்தியாவின் புலம்பெயர்ந்த மக்களும் -- (18 மில்லியன், ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை (UN-DESA) சமீபத்திய மதிப்பீடுகளின்படி -- பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தனர், அரசின் திருப்பி அழைத்து வரும் பணியால் பல்வேறு நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் தாயகத்திற்கு வந்தனர்.

இக்கட்டுரையில், புலம்பெயர்ந்தோர் மீது தாக்கத்தை தரக்கூடிய பட்ஜெட் அறிவிப்புகளை மதிப்பிடுகிறோம் - கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கான பொதுத் திட்டங்கள் புலம்பெயர்ந்தோரை மூலத்திலும் இலக்கிலும் பாதிக்கும், முக்கிய புலம்பெயர்ந்த முதலாளிகளாக இருக்கும் தொழில்களுக்கான ஊக்கமும், இறுதியாக, அதற்கான ஒதுக்கீடுகளும் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் இவை புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குடும்பங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை காணவுள்ளோம்.


வீட்டுவசதி தவிர, பெரும்பாலானவை ஏற்கனவே இருக்கும் திட்டங்கள்

பட்ஜெட் உரையில் விவரிக்கப்பட்டுள்ள ஆறு பரந்த பிரிவுகளில், குறிப்பாக இரண்டு, புலம்பெயர்ந்தோர் பிரச்சினைகளைக் கையாண்டன- "விரும்பும் இந்தியாவை உள்ளடக்கிய வளர்ச்சி" மற்றும் "மனித மூலதனத்தை மீண்டும் ஊக்குவித்தல்". இதில் முதலாவற்றில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் (ONORC) - இது, ரேஷன் கார்டை எங்கும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டம். ஏழை புலம்பெயர்ந்தோருக்கு நாட்டில் எங்கும் பி.டி.எஸ் திட்டம் மூலம் மானிய விலையில் உணவு தானியங்களை பெற அனுமதிக்கும். தொலைதூர பிராந்தியங்களில் (ரேஷன் கார்டுகள் வழக்கமாக மூலத்தில் பெறப்பட்டு, அங்குள்ள நியாயமான விலைக் கடைகளுடன் இணைக்கப்படுவதால்) பி.டி.எஸ் திட்டத்தில் அணுக முடியாத சூழல், புலம்பெயர்ந்தோரது உணவுப் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்துகிறது என்று இந்தியாஸ்பெண்ட் 2020 நவம்பர் கட்டுரை தெரிவித்தது.

ஊரடங்கின் போது, ​​கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய பல நுண் ஆய்வுகள், புலம்பெயர்ந்தோரது பி.டி.எஸ் உணவு அணுகல் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தன. இதில் 36,000 தொழிலாளர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்திய ஸ்ட்ராண்டட் வொர்க்கர்ஸ் ஆக்சன் நெட்வொர்க் (SWAN) அடங்கும், துவாரா ரிசர்ச்சின், 'தினசரி வாழ்க்கை கணக்கெடுப்பில் கோவிட்19 தாக்கம்' மற்றும் மனிதநேயத்திற்கான வாழ்விடம் என்ற ஆய்வு, புனே மற்றும் உல்ஹாஸ்நகரில் குடியேறிய தொழிலாளர்களை ஆய்வு செய்தது.


பட்ஜெட்டில், மலிவு வாடகை வீட்டுத் திட்டங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு வரிச்சலுகை, மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டது - இது பொதுவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர். மலிவு வாடகை வீட்டுத் திட்டங்களும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா- (பிரதமரின் நகர்ப்புற வீட்டுத் திட்டம்) நகர்ப்புற திட்டத்தின் ஒரு பகுதியாகும், முன்னதாக 2020 ஜூன் மாதத்தில், நகர்ப்புற குடியேறியவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகள் உட்பட சுமார் 300,000 பயனாளிகளை குறிவைக்கும் வகையில் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் ஒரு கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீடமைப்பு வளாக திட்டத்தை அறிவித்தது.

"வாடகை வீட்டுவசதி திட்டம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாக இல்லை, ஆனால் வரி ஊக்கத்தொகை நிச்சயமாக நகரங்களில் இடம் பெயரக்கூடிய / தற்காலிக மக்களின் தேவைகளைச் சுற்றியுள்ள அரசின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது," என்று, டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான கொள்கை ஆராய்ச்சி மையத்தின் முக்த நாயக் கூறுகையில், "இது இந்திய நகரங்கள் கருத்தியல் செய்யப்படும் வழியில் ஒரு முக்கியமான மாற்றமாகும்" என்றார்.

தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்ட மற்றொரு நடவடிக்கை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் சுகாதார, வீட்டுவசதி, திறன், காப்பீடு, கடன் மற்றும் உணவு தொடர்பான கொள்கைகளை வகுக்க உதவும் வகையில் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்கள் பற்றிய தரவுகளை சேகரிக்க ஒரு தகவல் போர்ட்டலை அமைப்பது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான செலவினங்களில் சுமார் 10% உயர்வு, இது பூர்த்தி செய்கிறது. ஆனால் அமைச்சகத்தால் வழங்கப்படும் மானியங்களுக்கான கோரிக்கையில், தகவல் போர்ட்டலுக்கு குறிப்பிட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை.

பெரும் தொழில் மற்றும் நடைபாதை சார்ந்த தொழில்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கட்டுமானம் போன்ற பாரம்பரியமான தொழிலாளர்கள் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிதியமைச்சர் தற்போதுள்ள சில பாதுகாப்புகளை வழங்கி இருக்கிறார். இந்த பாதுகாப்புகளில் சமூக பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) கீழ் பாதுகாப்பு ஆகியன அடங்கும். புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் இரவுப்பணியில் இருக்கும்போது போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

குடியேறியவர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மூன்று இலக்கு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வரி தளர்வு இருக்கும், வெளிநாட்டில் சம்பாதித்த ஓய்வூதிய கணக்குகளில் பலர் எதிர்கொண்ட இரட்டை வரிவிதிப்பு சுமையை சரிசெய்கிறது. இந்தியாவில் தொழில் தொடங்கும் சூழல் அமைப்பைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவில் ஒரு நபர் நிறுவனங்களை (OPC) இணைக்க வெளிநாடுவாழ் இந்தியர்கள் இப்போது அனுமதிக்கப்படுவர், இது முன்னர் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டது. வருங்கால புலம்பெயருவோருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜப்பானுடனான கூட்டாண்மை (அத்துடன் பிற நாடுகளுடனான முன்மொழியப்பட்டவை) திறன் சான்றிதழ், மேம்பாடு மற்றும் புதிய இடம்பெயர்வு பெருவழிப்பாதைகளை வரிசைப்படுத்துதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இவற்றில் பல புதிய திட்டங்கள் அல்ல. பல - குறிப்பாக, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான கூட்டு, மற்றும் ஜப்பானுடனான தொழில்நுட்ப பயிற்சி பயிற்சி திட்டம் (TITP) உள்ளிட்டவை ஏற்கனவே இருக்கும் முன்முயற்சிகள். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், முதன்முதலில் ஜூன் 2019 இல் அறிவிக்கப்பட்டாலும், தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி திட்டம் 2017 ஆம் ஆண்டில் முறைப்படுத்தப்பட்டது, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் "குறிப்பிட்ட திறமையான பணியாளர்" விசா 2021 ஜனவரியில் ஒப்புதல் பெறப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திறன் கூட்டாண்மை 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது என்று, ஆசியாவில் பல்வேறு தொழிலாளர் அனுப்பும் நாடுகளுக்கு இடையே ஒரு ஆலோசனை செயல்முறையான அபுதாபி டயலாக்ஸ் என்ற அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய சலுகைகள், சமூக பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட மற்றவை, புலம்பெயர்ந்த மக்களுக்கு மட்டுமே இருக்கும் நன்மைகளை மட்டுமே விரிவுபடுத்துகின்றன.

நகர்ப்புற வாழ்வாதாரங்களுக்கு மிகக் குறைவு

2021-22 பட்ஜெட் மதிப்பீட்டில் 2020-21 ஆம் ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்திற்கான (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) ஒதுக்கீடு 19% அதிகரித்துள்ளது - இது 61,500 கோடியில் (8.44 பில்லியன் டாலர்) இருந்து, 73,000 கோடி ரூபாய் (10.02 பில்லியன் டாலர்) ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், இது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்ஸிற்கான 2020-21 திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இருந்து (செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தொகை) 35% குறைப்பு -- 1,11,000 கோடி ரூபாய் ( 15.23 பில்லியன் டாலர்) - புலம்பெயர்ந்தோர் பெரும் துன்பத்தைக் கண்ட நேரத்தில், குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2020-21 இல், கிராம அடிப்படையிலான மற்றும் சிறிய அளவிலான தொழில்களுக்கான வருவாய் செலவினங்களில் 89% அதிகரிப்பு உள்ளது. இந்தியாஸ்பெண்ட் தெரிவித்தபடி, தங்கள் கிராமங்களுக்கு வீடு திரும்பிய பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் உள்ளூர் வேலைவாய்ப்பை நாடினர்.

பட்ஜெட் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதலீட்டை இரட்டிப்பு ஆக்குகிறது, இதில் சுயதொழில் செய்பவர்களும் உள்ளனர். இந்தியாவின் கிராமப்புற-நகர்ப்புற குடியேறியவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் சாதாரண கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள் அல்லது அமைப்புசாரா துறையில் சுயதொழில் செய்கிறார்கள் என்று, 2011 ஆய்வறிக்கை கூறியது. எவ்வாறாயினும், இந்த ஒதுக்கீடு 64% அவசரகால கடன் வரித் திட்டத்திற்கு அனுப்பப்படுவதால் போதுமானதாக இருக்காது - இந்தியாஸ்பெண்டின் சமீபத்திய பட்ஜெட் பகுப்பாய்வின்படி, அமைப்புசாரா துறை நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியையே காணலாம்.

இந்த பட்ஜெட், கிராமப்புற வாழ்வாதாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, ஆனால் நகர்ப்புற வாழ்வாதார பிரச்சினைகள் குறைவாகவே உள்ளன, அவை அனைத்தும் நகர்ப்புற வளர்ச்சியின் பெரிய பிரிவின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.

தொலைதூர நகரங்களில் பணிபுரியும் போது இடைநிலை புலம்பெயர்ந்தோர் சமூக பாதுகாப்பு உரிமைகளை இழக்கிறார்கள் என்ற ஐ.எம்.என் இன் பகுப்பாய்வு அடிப்படையில் அக்டோபர் 2019 இல் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தரவுகளின் முந்தைய பகுப்பாய்வு, இந்தியாவின் மெட்ரோ நகரங்களுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் பொதுவாக புறநகர் சுற்றுவட்டங்களில் குடியேறுகிறார்கள், அங்கு முக்கியமான சேவைகளுக்கான அணுகல் ஏற்கனவே குறைவாகவே உள்ளது என்று, இந்தியாஸ்பெண்ட் 2019 அக்டோபர் கட்டுரை கூறியது.

புலம்பெயர்ந்தோரை மையமாகக் கொண்ட துறைகளுக்கு ஊக்கமளித்தல்

வேளாண்மை, உற்பத்தி, பொதுச்சேவைகள், கட்டுமான மற்றும் பாரம்பரிய சேவைகள், மொத்தம் மற்றும் சில்லறை வர்த்தகம், ஹோட்டல் மற்றும் உணவகங்கள், போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியன புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சார்ந்த துறைகளாகும் என்று, கொள்கை ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வு வரையறுத்துள்ளது.

வரவிருக்கும் ஆண்டிற்கான பட்ஜெட், உற்பத்தியுடன் -இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள் (PLI) மூலம் உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது 13 துறைகளை ரூ .1.97 லட்சம் கோடி (27.03 பில்லியன் டாலர்) செலவில் கொண்டுள்ளது. எந்தத் துறைகள் பயனடைகின்றன என்பதில் தெளிவு இல்லை, ஆனால் இந்த நடவடிக்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட வேலைகளை உருவாக்கக்கூடும்.

ஜவுளி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளும் ஏழு மெகா டெக்ஸ்டைல் ​​பூங்காக்களுடன் -- மெகா இன்வெஸ்ட்மென்ட் டெக்ஸ்டைல் ​​பார்க்ஸ் (MITRAs) என அழைக்கப்படும் -- மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும். டெக்ஸ்டைல்ஸ் இந்தியாவில் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு ஆதாரமாகும், அத்துடன், ஒருசில பெரிய ஆடை உற்பத்தி பகுதிகளில் [தேசிய தலைநகர் பிராந்தியம் டெல்லி, திருப்பூர் மற்றும் பெங்களூரு] 70% தொழிலாளர்கள், சுழற்சி முறை அல்லது தற்காலிகமாக குடியேறியவர்கள் என்று, 2017 அறிக்கை தெரிவித்தது.

ரூ.18,000 கோடி (2.47 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு பொது பஸ் போக்குவரத்திற்கான புதிய பொது-தனியார் கூட்டு திட்டங்களுக்கும், சென்னை, கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.88,059 கோடி ( 12.08 பில்லியன் டாலர்) வழங்கப்படும். ஒரு புதிய மேம்பாட்டு நிதி நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் (68.63 பில்லியன் டாலர்) கடன்களை வழங்கும். இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் குடியேறிய தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பணி வாய்ப்பை வழங்கும் கட்டுமானத்துறைக்கு பயனளிக்கின்றன.

வரும் 2022 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய கட்டுமான சந்தையாக மாறும் நிலையில், பட்ஜெட் பெரிய அளவிலான சாலை மற்றும் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை பெரிய அளவில் ஆதரிக்கிறது: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 91% வரை மூலதனத்துக்கானது, இது அமைச்சகத்திற்கான மிக உயர்ந்த ஒதுக்கீடு. இந்தியாவில் கட்டுமானத் துறையில் 5.1 கோடி தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர், அவர்களில் பாதி பேர் பருவகாலத்தில் குடியேறியவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சுற்றுலா மற்றும் உணவுத்துறை, பட்ஜெட்டில் இருந்து எந்தவொரு நேரடி ஆதரவையும் (உடனடி அல்லது குறுகிய கால) பெறவில்லை. ஆனால் சாலைகள் மற்றும் ரயில்வே மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, இணைப்பை மேம்படுத்தக்கூடும், இது இந்தத் துறைக்கு முக்கியமானது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முக்கிய முதலாளியான இந்திய சில்லறைத் துறையும் ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று, ஜோர்னல் ஆப் ஹெல்த் மேனேஜ்மெண்ட் இதழில் வெளியான 2020 ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது எந்தவொரு நேரடி ஆதரவையும் பெறவில்லை, ஆனால் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சிறு குறு தொழில்களுக்கான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது வேலைகளை உருவாக்குவதன் மூலமும், நுகர்வு மூலமாகவும் இத்துறையை புத்துயிர் பெற உதவும்.

இருப்பினும், வேலைவாய்ப்பு நெருக்கடியை தீர்க்க பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று, இந்தியாஸ்பெண்ட் பட்ஜெட் பகுப்பாய்வு மதிப்பிட்டுள்ளது; இயந்திரமயமாக்கல் மற்றும் பெரிய மூலதன செலவினங்கள் இந்த திட்டங்களில் உழைப்பின் தேவையை குறைத்துள்ளன.

பிற திட்டங்கள்

உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்துக்கான ஒதுக்கீடு இரு பகுதிகளிலும் விலக்குகளை எதிர்கொள்ளும் அனைத்து இந்தியர்களுக்கும் பயனளிக்கும் என்று, இந்தியாஸ்பெண்டில் ஐ.எம்.என் இன் கொள்கை பகுப்பாய்வு காட்டியுள்ளபடி கருதப்படுகிறது. இரு பகுதிகளிலும் விலக்குகளை எதிர்கொள்ளும் அனைத்து இந்தியர்களுக்கும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான ஒதுக்கீடுகள் பயனளிக்கும். கோவிட்-19 தடுப்பூசிக்கு, ரூ .35,000 கோடி (4.8 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் நிதி உறுதிமொழியுடன், புதிய பிரதமர் ஆத்மனிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு, ரூ.64,180 கோடி (8.8 பில்லியன்) செலவினத்துடன் நாடு முழுவதும் 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பொது சுகாதார ஆய்வகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிப்பாக குறிவைக்கவில்லை என்றாலும், நாடு தழுவிய புலம்பெயர்ந்தோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இது பயனளிக்கும். மறுபுறம், குழந்தைகள் உட்பட ஊட்டச்சத்துக்கான குறைக்கப்பட்ட ஒதுக்கீடு புலம்பெயர்ந்தோர் உட்பட அனைத்து ஏழைக் குடும்பங்களையும் பாதிக்கும்.

எவ்வாறாயினும், மத்திய அளவில் திரும்பி வருபவர்களுக்கு பட்ஜெட்டில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை, முக்கிய ஆதார மாநிலங்களான கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்றவை, பிரச்சினைகளை அவர்களாகவே சமாளிக்கும்படி விடப்பட்டன. 2020 ஆம் ஆண்டில் நாடு கொண்டிருந்த 1.8 கோடி புலம்பெயர்ந்த மக்களில் சுமார் 40 லட்சம் பேர், நாங்கள் முன்பு கூறியது போல், கோவிட்-19 நெருக்கடியின் போது மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வருங்கால புலம்பெயர்ந்தோர் என இரு தரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய பட்ஜெட் முன்மொழிந்தாலும், மூல மாநிலங்களில் இருந்து திரும்பி வருபவர்களுக்கு கணிசமான மறுசீரமைப்பு கொள்கை இல்லை.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.