நொய்டா மற்றும் மும்பை: 2020-21 ஆம் ஆண்டில், பிப்ரவரி 1, 2020 அன்று மத்திய அரசு ரூ.30.4 லட்சம் கோடி பட்ஜெட் மதிப்பிட்டது. ஆனால் பிப்ரவரி 1, 2021 அன்று அது திருத்தப்பட்ட பட்ஜெட்டை அறிவித்தபோது, அந்தத் தொகை 13.4% அதிகமாக இருந்தது, அதாவது ரூ.34.5 லட்சம் கோடி என்று பட்ஜெட் ஆவணங்கள் காட்டுகின்றன.

சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி போன்ற சில அமைச்சகங்களுக்கு, இந்த திருத்தத்தில் அதிக பணம் ஒதுக்கப்பட்டது. அதேசமயம், வீட்டு விவகாரங்கள் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் போன்றவை குறைவாகவே பெற்றன.

இந்த பிப்ரவரியில் வெளியிடப்படும் புதிய பட்ஜெட் ஆவணங்களைப் பார்க்கும்போது, ​​மூன்று எண்ணிக்கைகளை கவனிக்க வேண்டும்: பட்ஜெட் மதிப்பீடுகள் (BE), இது ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் அரசாங்கம் என்ன திட்டமிடுகிறது அல்லது ஒதுக்க திட்டமிட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும், திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (RE), இது பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்து, பட்ஜெட் எவ்வளவு திருத்தப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். மூன்றாவதாக, 2020-21 வரை மட்டுமே கிடைக்கும் உண்மையான தொகை, அல்லது செலவினம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையான செலவினங்கள் வெளியிடப்படும்.

பட்ஜெட் மதிப்பீடு (BE), திருத்தப்பட்ட மதிப்பீடு ( RE) மற்றும் யதார்த்த நிலவரத்துக்கு இடையே சில மாறுபாடுகள் தவிர்க்க முடியாதவை, ஏனெனில் செலவுகள் ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்ட கணிப்புகளாகும். இருப்பினும், பரந்த வேறுபாடுகள் மற்றும் திருத்தங்கள் இருந்தால், அது எண்ணிக்கைகளின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது என்று, அமெரிக்காவின் ஆம்ஹெர்ஸ்டில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரும், புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதார பேராசிரியருமான ஜெயதி கோஷ் கூறினார்.

பட்ஜெட் எண்ணிக்கைகளின் திருத்தங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்துவதையும் பாதிக்கிறது. உதாரணமாக, திட்டங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் செலவினங்களைக் குறைக்கலாம் அல்லது, வரவு செலவுத் திட்டம் கீழ்நோக்கி திருத்தப்பட்டால், பயனாளிகள் குறைந்த பலனைப் பெறலாம் அல்லது குறைவான பலனைப் பெறலாம் என்று, புதுடெல்லியில் உள்ள பட்ஜெட் மற்றும் ஆளுகை பொறுப்புக்கூறல் மையத்தின் பொருளாதார நிபுணர் புரோட்டிவா குந்து, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

அமைச்சகத்தின் பட்ஜெட் திட்டத்திற்கான மூன்று வெவ்வேறு விதிமுறைகள் எதைக் குறிக்கின்றன மற்றும் அவை களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய நாங்கள் விளக்குகிறோம்.

பட்ஜெ மதிப்பீடு, திருத்தப்பட்ட மதிப்பீடு மற்றும் யதார்த்தங்கள்

ஒவ்வொரு ஆண்டும், நிதி அமைச்சகம் அடுத்த ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவுகளை மதிப்பிடுகிறது. மதிப்பிடப்பட்ட வரி வசூல் மற்றும் சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் (பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை) ஆகியவற்றின் அடிப்படையில் வருவாய் கணிக்கப்படுகிறது. வருவாய் அடிப்படையில், சுகாதாரம், கல்வி, போலீஸ் என பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் நிர்ணயிக்கப்படுகிறது.

செலவினங்கள் வருவாயை விட அதிகமாக இருக்கலாம், செலவுக்கும் வருவாய்க்கும் உள்ள வித்தியாசம் வருவாய் பற்றாக்குறை என அழைக்கப்படுகிறது, இது இந்திய ரிசர்வ் வங்கி, வருங்கால வைப்பு நிதி அல்லது உலக வங்கி போன்ற வெளி நிறுவனங்களில் கடன் வாங்குவதன் மூலம் சமாளிக்க முடியும். மார்ச் 31, 2021 நிலவரப்படி, இந்தியா ரூ.121.2 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளது.

நிதி அமைச்சகம் அடுத்த நிதியாண்டில் ஒவ்வொரு அமைச்சகம், திட்டம் மற்றும் துறைக்கு ஒரு தொகையை ஒதுக்குகிறது. இது பட்ஜெட் மதிப்பீடு (BE). இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி, தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அடுத்த நிதியாண்டு, அதாவது 2022-23-க்கான மதிப்பீடுகள் இருக்கும்.

நிதி போதுமானதாக இல்லாவிட்டால் அல்லது அமைச்சகம் அல்லது திட்டத்தின் தேவைகளை விட அதிகமாக இருந்தால், பட்ஜெட் மதிப்பீடுகள் மாற்றப்படலாம். துறை/அமைச்சகம் தங்களுக்கு மேலும் தேவைப்பட்டால் கூடுதல் மானியத்தை நவம்பரில் கேட்க வேண்டும், அதன் அடிப்படையில் நிதி அமைச்சகம் அதிக பணத்தை ஒதுக்குகிறது.

இந்தத் தொகை, திருத்தப்பட்ட மதிப்பீடு (RE) என்று அழைக்கப்படுகிறது. வழங்கப்பட்ட திருத்தப்பட்ட மதிப்பீடு எண்ணிக்கைகள், நடப்பு ஆண்டிற்கானவை. எனவே, இந்த பட்ஜெட்டில் 2021-22 இன் திருத்தப்பட்ட மதிப்பீடு இருக்கும்.

பட்ஜெட் மதிப்பீடு என்பது அரசின் "செலவு நோக்கத்தை" பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என்று, குந்து விளக்கினார்.

பெயர் குறிப்பிடுவது போல உண்மையான செலவு என்பது அமைச்சகம்/துறை/திட்டம் உண்மையில் செலவழித்த தொகை. இது தணிக்கை ரசீதுகளுக்குப் பிறகு பெறப்பட்டதால், பணம் செலவழிக்கப்பட்ட பின்னரே அவை கிடைக்கும். இந்த ஆண்டு, பட்ஜெட் ஆவணங்களில் உண்மையான செலவுகள் 2020-21 முதல் இருக்கும்.

கடந்த 2019-20க்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட, உண்மையான செலவு 3.5% குறைவாக இருந்தது, இந்த மூன்று எண்ணிக்கைகளும் தற்போது கிடைக்கும் சமீபத்திய ஆண்டு, பட்ஜெட் ஆவணங்கள் காட்டுகின்றன. பட்ஜெட் மதிப்பீட்டை விட திருத்தப்பட்ட மதிப்பீடு 3.1% குறைவாக இருந்தது என்று, தரவு காட்டுகிறது.

கோஷின் கூற்றுப்படி, ஒரு அமைச்சகம் அல்லது துறையால் குறைவான செலவினங்களை சரிபார்க்க முடியாது.

உதாரணமாக, 2020-21 ஆம் ஆண்டில் போஷன் அபியானுக்கான நிதி பயன்படுத்தப்படாமல் இருந்தபோதிலும், ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் ஒரு நாள்பட்ட பிரச்சனையாக தொடர்கிறது என்பதை, கல்வி, பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு கவனித்தது.


விவசாயம், தொழிலாளர், பெண்கள் & குழந்தை அமைச்சகங்கள், திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன

பாராளுமன்ற விவகார அமைச்சகம், திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்ட தொகையில் 67% மட்டுமே பயன்படுத்தியது, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 74% பயன்படுத்தியது, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் 88% பயன்படுத்தியது என்பது, பொதுக் கணக்குகள் தணிக்கை (CGA) இணையதளத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான தற்காலிக புள்ளிவிவரங்களின்படி தெரிய வருகிறது.

கடந்த 2021 இல் எங்கள் கட்டுரை குறிப்பிட்டது போல், இந்தியாவின் வளர்ச்சி குறைபாடு மற்றும் எடை குறைபாடு விகிதம் உலகிலேயே மிக அதிகமாக இருக்கும் நேரத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 92% மட்டுமே பயன்படுத்தியது. ஆறு வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளின் சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்கான அரசின் முதன்மைத் திட்டமான ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், இந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது.


போதிய நிதியின்மை, முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதை பாதிக்கிறது

அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீடுகள், நடப்பு ஆண்டு முடிவடைவதற்கு முன்பே செய்யப்படுவதால், பட்ஜெட்டைத் தயாரிக்கும் நிதி அமைச்சகம், ஆண்டின் முதல் பாதிக்கான உண்மையான செலவினங்களையும், மீதமுள்ள செலவினங்களின் கணிப்பையும் அதாவது திருத்தப்பட்ட மதிப்பீட்டை ஒருங்கிணைக்க வேண்டும், அடுத்த ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு வருவதற்கு பொருத்தமான அதிகரிப்பு சேர்க்கப்படுகிறது.

ஒரு அமைச்சகத்திற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு என்பது, பட்ஜெட் மதிப்பீட்டை விட குறைவாக இருந்தால், அடுத்த ஆண்டில் அதற்கு குறைவான நிதி ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், குந்துவின் கூற்றுப்படி, அமைச்சகம் ஒரு நேர்மறையான தொடக்க இருப்பைக் கொண்டிருக்கும் (முந்தைய ஆண்டு பட்ஜெட்டில் இருந்து மீதியான பணம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) போன்ற திட்டங்களும் உள்ளன, இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் ஊதிய வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது, இது ஒரு வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், திருத்தப்பட்ட மதிப்பிட்டில் ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதியைப் பயன்படுத்துகிறது.

"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு, உறுதி அளிக்கப்பட்ட 100 நாட்களுக்குப் பதிலாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 40-45 நாட்கள் வேலை கிடைக்கும் என்று அரசு கருதுகிறது மற்றும் அதற்கேற்ப ஒதுக்குகிறது" என்று கோஷ் விளக்கினார்.

இதற்கிடையில், சத்துணவு திட்டங்களுக்கான நிதி, பணவீக்கத்தின் வேகத்தால் அதிகரிக்கவில்லை.

பல திட்டங்களுக்கு பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் தேவையானதை விட குறைவான ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன என்று குந்து கூறினார். ஒட்டுமொத்தமாக, "சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்து வரும் போது, நிதி சுருங்கி வருகிறது" என்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.