நொய்டா: பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள வீட்டுப் பணியாளர்கள், மாநில அரசுக நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற, குறைந்த ஊதியத்தில் ஆறு வீடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று, டிசம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பெங்களூரில் கணக்கெடுக்கப்பட்ட முதலாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (55%) தங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கு "தாராளமாக" ஊதியம் வழங்குவதாக கருதி வருகின்றனர். அதே நேரத்தில் சென்னையில் 51% பேர் சேவைகளுக்கு "போதுமான" ஊதியம் வழங்குவதாக நம்பினர் என்று, இந்திய குடியேற்றங்களை சமமான, நிலையான மற்றும் திறமையான மாற்றத்தை ஆய்வு செய்யும் பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மென்ட் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் செய்யும் பணிகளின் எண்ணிக்கை, அதாவது –சுத்தம் செய்தல், உணவு தயாரித்தல் மற்றும் பராமரிப்பு- போன்றவை மற்றும் இந்த பணிகளுக்கு செலவிடும் நேரம் ஆகியவை, தொழிலாளர்களின் ஊதியத்தை தீர்மானிக்கின்றன. ஊதியத்தை நிர்ணயிக்கும் போது திறமை, நற்பெயர் மற்றும் அனுபவம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு நம்பகத்தன்மை, கடின உழைப்பு மற்றும் நேரமின்மை ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது, அதே நேரத்தில் இரு நகரங்களிலும் வீட்டுப் பணியாளர்களை நியமிக்கும் பெரும்பான்மையான குடும்பங்களுக்கு மதம், சாதி மற்றும் பிறப்பிடம் போன்றவை "முக்கியமாக இல்லை" என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மூன்று பகுதி ஆய்வு, பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள 9,636 குறைந்த, நடுத்தர மற்றும் அதிக வருமானம் கொண்ட குடும்பங்களை ஆய்வு செய்தது. அவர்களில் 54% பேர் பெங்களூரில் வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர், அதே சமயம் சென்னையில் 32% பேர் வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரு இடங்களிலும் வீட்டுப் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான மிகவும் குறிப்பிடப்பட்ட காரணம், பராமரிப்பு / உணர்வுபூர்வ வேலைக்கான நேரத்தை ஒதுக்குவதாகும், அதே சமயம் "கூலி வேலைக்கான நேரத்தை விடுவித்தல்/நான் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்" என்பது மூன்றாவது அதிகம் குறிப்பிடப்பட்ட காரணம் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

வீட்டு வேலை "முறைசாரா" என குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பு மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 4.75 மில்லியன் வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 மட்டுமே வீட்டுப் பணியாளர்களை குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் அட்டவணையில் சேர்த்துள்ளன.

ஊதியம் போதுமானது என்று கூடும் வீட்டு உரிமையாளர்கள்

ஒரு வீட்டில் வீட்டுப் பணியாளர்களுக்கு சென்னையில் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையிலும், பெங்களூருவில் ரூ.2,000 முதல் ரூ.13,000 வரையிலும் ஊதியம் வழங்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,241 முதல் ரூ.14,711 வரை உள்ளது, அதாவது குறைந்தபட்ச ஊதியத்தை பெற, பெங்களூருவில் உள்ள குறைந்த ஊதியம் தரும் ஆறு குடும்பங்களில் ஒரு தொழிலாளி வேலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,005 முதல் ரூ.9,418 வரை உள்ளது, அதாவது குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற ஒரு வீட்டுப் பணியாளர் குறைந்தது எட்டு வீடுகளில் வேலை செய்ய வேண்டும்.

வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கும் பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மாநிலம் தழுவிய குறைந்தபட்ச ஊதியம் ஏற்புடையதல்ல என்று அறிக்கை கூறுகிறது. எனவே டெல்லி போன்ற நகரம், மாநிலத்துடன் ஒப்பிடுவது மிகவும் பொருத்தமானது. பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள தொழிலாளர்கள் டெல்லியில் உள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு இணையான ஊதியம் பெற 7 - 14 வீடுகளில் வேலை செய்ய வேண்டும்.

ஆய்வறிக்கையானது முதலாளிகளின் பதில்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற, ஒரு வீட்டுப் பணியாளர் எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று அது கூறவில்லை.

சென்னையில் பதிலளித்தவர்களில் 51% பேர், தாங்கள் போதுமான ஊதியம் வழங்குவதாக நம்பினாலும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்கள் தங்களை "தாராள மனப்பான்மை உடையவர்கள்" என்று நம்பினர். இந்த அறிக்கையின்படி, ஊதிய உயர்வுக்கு வாதிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அர்த்தம்.

வேலை செய்யும் மணிநேரங்களின் எண்ணிக்கை, செய்யப்படும் பணிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் நிலவும் விகிதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களால் வீட்டு வேலை என்பது "திறனற்றதாக" கருதப்படுவதாக அறிக்கை கண்டறிந்தது, மேலும் அவர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும் போது ஒரு தொழிலாளியின் திறன்கள் முக்கியமில்லை. "இருப்பினும், குழந்தை காப்பகம் அல்லது முதியோர் பராமரிப்பு போன்ற பராமரிப்பு பணிகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஒரு தொழிலாளிக்கு திறன்கள் மிகவும் முக்கியமானதாக இருந்தது, ஏனெனில் அவர்கள் ஒரு நபருடன் தொடர்பு கொள்கிறார்கள்," என்று அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான அந்தரா ராய் சவுத்ரி விளக்கினார்.

ஊதியங்கள் குறித்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு இந்தியா ஸ்பெண்ட், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அவர்கள் பதில் அளிக்கும்போது இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

ஆய்வின்படி, கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டான 2019 இல் இரு நகரங்களிலும் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், பணிப்பெண்களுக்கு போனஸ் வழங்கவில்லை. இரு நகரங்களிலும் பணிகள் அல்லது மணிநேரம் அதிகரிப்பதற்கு ஈடாக ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்பட்டன, மேலும் அந்தத் தொகையானது முதலாளிகளால் தீர்மானிக்கப்பட்டது.

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு முதலாளிகள் மத்தியில் பிரபலமாக இல்லை

சென்னையில் உள்ள 62% குடும்பங்களும், பெங்களூரில் 32% குடும்பங்களும், தங்களது வீட்டுப் பணிப்பெண் கர்ப்பமாகிவிட்டால், மொத்தத் தொகையை வழங்குவதை நிறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளனர். பெங்களூரில், 68% குடும்பங்கள் தங்களின் உதவிக்கு வாராந்திர விடுப்பு தருவதாகவும், சென்னையில் 80% குடும்பங்கள் அதையே செய்வதாகவும் கூறியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள 41% குடும்பங்களும், சென்னையில் 37% குடும்பங்களும் தங்கள் பணியாள் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், சிகிச்சைக்கான செலவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர். இருப்பினும், சென்னையில் உள்ள அதிகமான குடும்பங்கள் நோய்வாய்ப்பட்டால் அதற்கான விடுப்புகளை தொகை செலுத்தியதை விட (44%) செலுத்தப்படாமல் (55%) இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பெங்களூரில், ஊதியத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்புகளுக்கு அதிக ஆதரவு இருந்தது: 59% குடும்பங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை ஆதரித்தன, 36% பேர் விடுமுறைக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஓய்வுபெற்ற வீட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்து ஆய்வு வீடுகளிடம் கேட்கவில்லை. சமூகப் பாதுகாப்பிற்கான அணுகல் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியன, 2019 ஆம் ஆண்டின் வீட்டுப் பணியாளர்களுக்கான தேசியக் கொள்கை வரைவின் முன்மொழிவுகளில் அடங்கும்.

நவம்பர் 2021 இல் அறிவிக்கப்பட்ட வீட்டுத் தொழிலாளர்களுக்கான தேசியக் கொள்கை மற்றும் அகில இந்திய வீட்டுப் பணியாளர்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றின் நிலை குறித்து கருத்து தெரிவிக்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு இந்தியாஸ்பெண்ட் கடிதம் எழுதியுள்ளது. அவர்கள் பதிலளிக்கும்போது இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.

ஆட்சேர்ப்புக்கு திறன்கள் எவ்வளவு முக்கியமோ, ஊதியம் அவ்வாறு நிர்ணயிக்கப்படுவதில்லை

பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் தொழிலாளர்களை பணியமர்த்தும்போது வாய்ப்பு விருப்பங்களில் வேறுபாடுகளைக் காட்டியது. சென்னையில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு வீட்டுப் பணியாளரை பணியமர்த்தும்போது சாதி, மதம் மற்றும் பிறப்பிடம் (ஆசிரியர்களின் மொழியின் ப்ராக்ஸி) முக்கியமில்லை. பெங்களூரில், 12-14% குடும்பங்கள் வீட்டு வேலை செய்பவரின் சாதி முக்கியமில்லை என்று கூறியுள்ளனர். சென்னையில் இருந்ததை விட பெங்களூருவில் உள்ள வீடுகளுக்கு தொழிலாளியின் மதம் மிக முக்கியமானது.

"உங்கள் வீட்டு இடத்தை தொழிலாளியுடன் பகிர்ந்து கொள்வதால் வீட்டு வேலை என்பது நெருக்கமான வேலை. எனவே சாதி நடைமுறைக்கு வருகிறது, மேலும் முதலாளிகள் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன் அவர்களின் முழுப்பெயர் அல்லது குடும்பப் பெயரைக் கேட்பதை நீங்கள் காண்பீர்கள் என்று, பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்பு மையத்தின் பொருளாதார நிபுணர் ரோசா ஆபிரகாம் கூறினார்.

சென்னையில் பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் (77%), பெங்களூரில் பதிலளித்தவர்களில் 39% மட்டுமே பெண்கள். இருப்பினும், குடும்பங்களின் பதில்களில் உள்ள வேறுபாடுகள் பதிலளித்தவரின் பாலினத்தால் தீர்மானிக்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.

"நாங்கள் ஒரு நகரத்தில் பதில்களைச் சரிபார்த்தோம், ஒரு நகரத்திற்குள், ஆண் மற்றும் பெண் பதிலளித்தவர்கள் ஒரே மாதிரியான பதில்களை வழங்குவதைக் கண்டறிந்தோம், இந்த வேறுபாடுகள் பதிலளித்தவர்களின் பாலினத்தால் உத்தரவிடப்படவில்லை என்பதைக் குறிக்கிறது" என்று சவுத்ரி கூறினார்.

இரு நகரங்களிலும் உள்ள குடும்பங்களால் நம்பகத்தன்மை மிக முக்கியமானதாக வரிசைப்படுத்தப்பட்டது, மேலும் திறமை மற்றும் விரைவாகக் கற்றுக்கொள்வதற்கு சென்னையை விட பெங்களூரில் உள்ள குடும்பங்களால் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும் போது எந்த நகரமும் திறன்கள் அல்லது "வேலையின் தரம்" ஒரு முக்கிய காரணியாக கருதப்படவில்லை.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.