புதுடெல்லி: கோவிட் -19 கண்டறியும் கருவிகள், தடுப்பூசிகள், மருந்துகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்றவற்றுக்கு அறிவுசார் சொத்துகள் (IP) உரிமத்தில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தற்போது உலக வர்த்தக அமைப்பில் (WTO) முன்னின்று அழைப்பு விடுத்துள்ளன. அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களில் (TRIPS) இருந்து இத்தகைய விலக்கு தருவது, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு கோவிட்-19 மருந்துகள், தடுப்பூசிகள், நோயறிதல் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் பெறவோ அல்லது செயல்படுத்தவோ உரிமம் தேவையில்லை என்பது பொருள்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அரசுகளது சமர்ப்பிப்பின்படி, "உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும் வரை" மற்றும் "உலகளவில் பரவலான தடுப்பூசி நடைமுறையில் இருக்கும் வரை", இத்தகைய சொத்துரிமத்திற்கான தள்ளுபடி தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று பரவியுள்ள சூழலில், வளரும் நாடுகளில் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான எளிதான அணுகலை துண்டிக்க, அறிவுசார் சொத்துரிமை மோசமாகப் பயன்படுத்தப்படலாம் என்று, சவுத் செண்டர் நிர்வாக இயக்குனர் கார்லோஸ் கொரேயா கூறினார். வளரும் நாடுகளை பாதிக்கும் காலநிலை மாற்றம், மருந்துகளுக்கான அணுகல், உணவுப் பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளின் அடிப்படை பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அவர் பணியாற்றுகிறார்.

கொரேயா, 2003ம் ஆண்டில் அறிவுசார் சொத்துரிமை, புதுமை மற்றும் பொது சுகாதாரம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆணையத்திலும் உறுப்பினராக இருந்தார்; மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் நெறிமுறைகள் குறித்த சிறந்த நிபுணர்களின் குழுவில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உறுப்பினராவார். அவர் தனது ஆரம்ப ஆண்டுகளில் அர்ஜென்டினா அரசுடன் அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பணியாற்றி இருக்கிறார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் இத்தகைய கோரிக்கையின்படி, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் மீதான தள்ளுபடி அனைத்து பொருட்களுக்கும் நீட்டிக்கப்படாது, கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடத் தேவையானவற்றுக்கு மட்டும் தான் கோரப்பட்டுள்ளது. இது அனைத்து உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களுக்கும் - வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு ஒரே மாதிரியாக பொருந்தும். இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கும், "உலகளவில் பரவலான தடுப்பூசி நடைமுறையில் இருக்கும் வரையும், உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுக் கொள்ளும் வரை நீடிக்கும்".

அக்டோபரில், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்த யோசனையை வரவேற்பதாக ட்வீட் செய்தார், இது "கோவிட்-19 தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச மற்றும் அறிவுசார் சொத்து ஒப்பந்தங்களை எளிதாக்கும், அவை தேவைப்படும் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கும்" என்பது அந்த யோசனையாகும். மற்ற சர்வதேச அமைப்புகளும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் திட்டத்திற்கு பின்னால் அணிவகுத்து, தங்கள் ஆதரவை தெரிவித்தன. ஆனால் கோவிட்-19 சிகிச்சைகளை அணுகுவதற்கு தடையாக அறிவுசார் சொத்துரிமை நிற்கிறது என்ற கவலையை நிராகரித்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியம்.

இந்த விலக்கில் இருந்து அதிக பயன் பெறப்போவது, வளர்ச்சி குறைந்த நாடுகள் (LDC) தான், ஏனெனில் அவை உள்நாட்டில் கோவிட்-19 தொற்று கண்டறிதல், தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றை உருவாக்க முடியும் என்பதை உறுதி செய்யும், இதனால் விலைகள் குறைவாக இருக்கும்.

இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில், தற்போதைய சூழ்நிலைகளில் ஆபத்தில் இருப்பதை கொரேயா விளக்குகிறார்: தொற்றுநோய் காலத்தில் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களுக்கு (டிரிப்ஸ்) விலக்கு அளிக்க வேண்டுமென்று, வளரும் நாடுகள் ஏன் உலக வர்த்தக அமைப்பிடம் கேட்கின்றன? அத்தகைய நடவடிக்கையின் நன்மைகள் மற்றும் பாதிப்புகள் என்னவாக இருக்கும்? இந்த திட்டத்தை யார் எதிர்க்கிறார்கள்? ஏன் எதிர்க்கிறார்கள்? என்று பதிலளிக்கிறார்.

நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் என்ன கேட்கின்றன, அது எந்த வகையில் உதவும்?

கோவிட்-19 தடுப்பு மருந்து, கட்டுப்படுத்தும் அல்லது சிகிச்சைக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் அல்லது தயாரிப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தக்கூடிய காப்புரிமைகள் அல்லது பிற உரிமைகளை, உலக வர்த்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு வழங்கவோ அல்லது செயல்படுத்தவோ அனுமதிக்காமல் இருக்கும் உரிமத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, இந்த இரு நாடுகளும் கோருகின்றன. இது, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் அச்சுறுத்தல் இல்லாமல் கண்டறியும் கருவிகள், மருந்துகள், தடுப்பூசிகள் அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை வாங்க அல்லது தயாரிக்க நாடுகளை அனுமதிக்கும். முக்கியமாக, அத்தகைய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் திறன் விரிவாக்கப்படலாம். எனவே, தடுப்பூசி விரைவில் கிடைத்தால், தடுப்பூசியின் அறிவுசார் சொத்துரிமையை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வைத்திருந்தால், நிறுவப்பட்ட உற்பத்தி திறன் உலக மக்களுக்கு வழங்குவதற்கு போதுமானதாக இருக்க அனுமதிக்காது. ஆனால் இந்த பொருட்களின் அறிவுசார் பண்புகள் மீதான தள்ளுபடி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டால், இந்த தடுப்பூசிக்கான மலிவு அணுகல் மூலம் பலரை அது சென்றடையக்கூடியதாக இருக்கும்.

அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள்ளை தள்ளுபடி செய்வது உலக சுகாதார அமைப்பிற்கு மகிழ்ச்சியை தரவில்லையே, ஏன்?

முக்கிய மருந்து நிறுவனங்கள் அமைந்துள்ள வளர்ந்த நாடுகள், இத்தகைய விதிகள் தள்ளுபடியை எதிர்க்கின்றன. இது மருந்து நிறுவனங்களில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று, அவர்கள் அஞ்சுகிறார்கள்; வேறு சூழல்களில் ஏழை நாடுகள் இத்தையக அறிவுசார் சொத்துரிமை மீது தள்ளுபடிகளை கேட்கக்கூடிய ஒரு முன்னுதாரணம் அமைந்துவிடக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

மறுபுறம், கோவிட்-19 தடுப்பு மற்றும் சிகிச்சையை அணுக அறிவுசார் சொத்து [உரிமைகள்] நிச்சயமாக ஒரு தடையாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு நிறுவனம் பொருத்தமான மருந்துக்கு காப்புரிமை பெற்றால், மற்ற நிறுவனங்கள் அதை மலிவு விலையில் உற்பத்தி செய்வதையும் விற்பதையும் தடுக்கலாம். கோவிட்-19 இல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களின் வணிக நலன்களை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் கோரிக்கைகள் பாதிக்கும் என்பது எதிர்தரப்பின் பார்வையாகும்.

அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த தொற்றுநோய் விஷயத்தில், தங்கள் நலன்களுக்கே முதலிடம் கொடுத்திருப்பதை நாங்கள் கண்டோம் ... அவர்களது அதிபர் டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையும் போலவே. இந்த தொற்றுநோய்களின் போது அமெரிக்கா சர்வதேச ஒத்துழைப்பில் அக்கறை காட்டவில்லை என்பதற்கான பெரிய அறிகுறிகளில் ஒன்று, உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகிக் கொண்டதை கூறலாம். இப்போது, அதிபர் ​​ஜோ பிடனின் புதிய நிர்வாகத்திலும் கூட, வளர்ந்த நாடுகளில் உள்ள பெரிய மருந்து நிறுவனங்களின் நலன்களை அமெரிக்கா எவ்வாறு கவனிக்கிறது என்பதில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என்றே நினைக்கவில்லை.

அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் தள்ளுபடி, வளர்ந்த நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களையும், இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களையும் எவ்வாறு பாதிக்கும்?

இந்த [பெரிய மருந்து] நிறுவனங்கள் எந்த இழப்பையும் சந்திக்க வாய்ப்பில்லை. கோவிட் -19ல் சில தொழில்நுட்ப முன்னேற்றங்களை செய்த பெரிய நிறுவனங்களுக்கு… உண்மை என்னவென்றால், இந்த முன்னேற்றங்களில் பெரும்பாலானவை பொது பணம் மற்றும் பல்வேறு அரசுகளின் நிதியுதவி மூலம் நிதி அளிக்கப்பட்டன. எனவே, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க இழப்பு எதுவும் இல்லை. இறுதியில் அவர்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் இந்தியா உட்பட [உலகம் முழுவதும்] எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

சந்தையில் தோல்வியை சரி செய்வதற்காக அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) முதலீட்டாளருக்கு அதன் முதலீட்டை திரும்பப் பெற முடியாத சூழ்நிலையைத் தடுக்க, காப்புரிமைகள் கருதப்படுகின்றன; ஏனென்றால் மற்றவர்கள் அவர்களுடன் போட்டியிடுகிறார்கள். ஆனால் இது கோவிட்-19 க்கான சூழ்நிலையாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இங்குள்ள நிறுவனங்கள் பெரும் பொது மற்றும் உதவி நிதியைப் பெற்றுள்ளன, சோதனையின் கீழ் அதிக அளவு தடுப்பூசிகளை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இது தவிர, இந்த பொருட்களுக்கான தேவை, மிகப்பெரிய அளவில் இருக்கும், உண்மையில், இந்த நிறுவனங்கள் பெரிய அளவிலான தயாரிப்புகளின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க இலாபம் ஈட்டக்கூடும், அவை விற்கப்படுகின்றன.

இந்த விலக்கு தள்ளுபடி ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்திய நிறுவனங்கள் பயனடையும், ஏனெனில் காப்புரிமை போன்ற சட்ட ஏகபோகங்களுக்கு உட்படுத்தப்படாமல், அந்த தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும். நிச்சயமாக இந்த விலக்கு தள்ளுபடி இந்திய நிறுவனங்களுக்கும், இன்னும் பரந்த அளவில், இந்திய மக்களுக்கும் பயனளிக்கும். கோவிட்-19 மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளூர் உற்பத்தியாளர்களை தங்கள் அரசுகள் ஈடுபடுத்த முடியும் என்பதால் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் கூட இந்த தள்ளுபடியால் பயனடைவார்கள்.

கடைசியாக, தடுப்பூசியை முழு உலக மக்களுக்கும் இரண்டு அளவுகளுடன் உற்பத்தி செய்து விநியோகிக்க போதுமான உற்பத்தி திறன் இல்லை. கோவிட்-19 தடுப்பூசி அல்லது மருந்தை உருவாக்கும் பொதுவான நிறுவனங்களுடன் உற்பத்தித்திறன் மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்வது இல்லை என்றால், உலக மக்கள் கோவிட்-19 தடுப்பூசியை அணுகுவதற்கான வழி இல்லை.

வளர்ச்சி குறைந்த நாடுகள் கவலைப்படுகின்ற சர்ச்சைக்குரிய அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் உட்பிரிவுகள் யாவை? இதில் அதிக வருவாய் உள்ள நாடுகளின் நிலைப்பாடு என்ன?

அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள், ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய அறிவுசார் சொத்துரிமை, சட்ட உரிமையாளர்களை அதிக உரிமைகளை வசூலிக்க அனுமதிக்கும் மற்றும் மூன்றாம் தரப்பினரால் பாதுகாக்கப்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அணுகலை மறுக்கும் சட்ட ஏகபோகங்களை உருவாக்குகிறது. காப்புரிமைகள் மிகவும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன, ஏனெனில் உரிமையாளர்கள் அத்தகைய ஏகபோக உரிமைகளை குறைந்தது 20 ஆண்டுகளுக்கு வைத்திருக்க அனுமதிக்கின்றன. தற்போது, ​​குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் (LDC) காப்புரிமையை வழங்க வேண்டாம் என்று வாய்ப்பை தேர்வு செய்யலாம். ஆனால் அதிக வருவாய் உள்ள நாடுகள் உட்பட பிற வளரும் நாடுகள் அவற்றை வழங்கவும் செயல்படுத்தவும் வேண்டும்; இல்லையெனில், அவர்கள் உலக வர்த்தக அமைப்பின் மற்ற உறுப்பினர்களால் வர்த்தக உறவுகளுக்கு [அழுத்தங்களுக்கு] உட்படுத்தப்படலாம்.

இதன் மூலம் உலக வணிக அமைப்பின் உறுப்பு நாடுகள் காப்புரிமையை வழங்குதல் மற்றும் செயல்படுத்துதல் போன்ற பல கடமைகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆனால் அவை அவ்வாறு செய்யாவிட்டால், உலக வர்த்தக அமைப்பின் மற்றொரு உறுப்பினர் உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க முடியும், மேலும் கேள்விக்குரிய உறுப்பு நாடு, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து மீறுவதைக் கண்டால், புகார் அளித்த நாடு பதிலடி கொடுக்க முடியும், எடுத்துக்காட்டாக, நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான அதிக கட்டணங்கள் என்பது, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களை மீறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட்-19 இன் சூழலில், அறிவுசார் சொத்து பற்றிய பிரச்சினை முக்கியத்துவம் பெற்றது, ஏனெனில் கோவிட்டை சமாளிப்பதற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும்; ஆனால் அத்தகைய அறிவுசார் சொத்துரிமைகள் பயன்படுத்தப்பட்டால் வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு இதை எளிதாக அணுகுவதை மறுக்க முடியும்.

இந்த முன்மொழிவுக்கு, உலக சுகாதார அமைப்பின் ஆதரவு, உலக வர்த்தக அமைப்பில் ஏதேனும் ரகசியமாக இருக்கிறதா?

உலக சுகாதார அமைப்பு என்பது பொது சுகாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஐ.நா. நிறுவனம் என்பதால் இது முக்கியமானது. அதன் ஆதரவு என்பது பொது சுகாதாரத்தின் கண்ணோட்டத்தில் தொற்றுநோயை நிவர்த்தி செய்வது சட்டபூர்வமானது மற்றும் அவசியமானது என்பதாகும்.

இந்த தொற்றுநோய்களின் போது நிறுவனங்கள் தங்கள் அறிவுசார் சொத்துரிமைகளை எவ்வாறு பெரிய இலாபங்களுக்காகப் பயன்படுத்துகின்றன? இதனால், சிகிச்சைகள் / மருந்துகளின் அணுகல் மற்றும் மலிவு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன?

^ இந்த தொற்றுநோயில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு, கிலியட் தயாரித்த ரெமெடிசீவரின் அதிக விலையை சொல்லலாம். [அதன்] செயல்திறனுக்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்காத நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையில் இதுவும் ஒன்றாகும். ஆனால் கிலியட் புவியியல் நோக்கத்துடன் குறைந்த எண்ணிக்கையிலான உரிமங்களை வழங்கியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இந்த மருந்து கோவிட்-19 க்கானது என்பதை நாம் இன்னும் அறியவில்லை என்றாலும், அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், எந்த நாடுகளில் எந்த மக்களை அணுகலாம் என்று கிலியட் தீர்மானிக்கும் சூழ்நிலையை நாம் காண்போம். அதிக லாபகரமான சந்தைகளை தங்களுக்குள் வைத்திருக்க, அவர்கள் இதை தேர்வு செய்யலாம்.

நிறுவனங்கள் மருத்துவ தொழில்நுட்பம் அல்லது மருந்துகளை வாங்க முடியாதவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கு மிகச்சிறிய எடுத்துக்காட்டுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்பங்களில் தன்னார்வ பங்களிப்புகளைப் பெற, உலக சுகாதார நிறுவனம், ஏசிடி ஆக்சிலேட்டர் (ACT Accelerator) எனப்படுவதை ஏற்பாடு செய்தது. ஆனால் மருந்து நிறுவனங்கள் தாராளமாக பங்கேற்கவில்லை. எனவே, கோவிட் -19 சிகிச்சையை மலிவானதாக மாற்றுவதற்கு பெரிய நிறுவனங்கள் தங்கள் அறிவுசார் சொத்துக்களுடன் [உரிமைகளுடன்] தானாக முன்வந்து செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கென பாதை இருந்தால், உலகெங்கிலும் உள்ள மக்கள் எவ்வாறு பயனடைவார்கள்? அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் விலக்குக்கான திட்டத்தின் சரிவு என்னவாக இருக்கும்?

சொத்துரிமை தள்ளுபடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த அரசுகள், தங்கள் விருப்பப்படி அதை செயல்படுத்தலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம். உண்மையில், அவர்கள் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களின் ஷரத்து 73 (பி) இல் உள்ள தேசிய பாதுகாப்பு விதிவிலக்கையும் நம்பலாம்: இந்த விதிவிலக்கின் கீழ், எந்தவொரு உலக வர்த்தக அமைப்பு உறுப்பினரும் ஒரு சர்வதேச அவசரநிலைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் அந்த ஒப்பந்தத்தின் கீழ் அதன் கடமைகளுக்கு இணங்கக்கூடாது, மேலும் கோவிட்-19 என்பது ஒரு சர்வதேச அவசரநிலை.

இந்த விலக்கு உலகளாவிய பொது சுகாதார நோக்கங்களை அடைய அனுமதிக்கும் என்பதால் நான் எவ்வித எதிர்மறையையும் காணவில்லை; ஆனால் புதுமைப்பித்தர்கள் தங்கள் முதலீட்டிற்கு நியாயமான வெகுமதியைப் பெறுவதற்கான வாய்ப்பில் இருந்து அதை இழக்க விரும்ப மாட்டார்கள்.

விலக்கு தருவது குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க, அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் தொடர்பான கவுன்சில் அக்டோபர் மாதத்தில் கூடியது. அடுத்து என்ன வருகிறது? ஒரு முடிவை எடுக்க வேண்டிய காலக்கெடு உள்ளதா?

அவைத் தலைவரால் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆலோசனைகளுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் வர்த்தகம் தொடர்பான கவுன்சிலின் ஒரு அமர்வு நடைபெறலாம். இதற்கிடையில், விலக்கு கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக நாடுகளின் பரந்த கூட்டணி கட்டமைக்கப்படலாம். இது தொடர்பாக முடிவை எட்ட எந்த காலக்கெடுவும் இல்லை.

உலக வர்த்தக அமைப்பு, ஒருமித்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது. எனவே, சொத்துரிமை விலக்கை எதிர்க்கும் நாடுகள் இந்த விஷயத்தில் ஒரு முடிவைத் தடுக்கலாம். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் பொருளாதார மற்றும் அரசியல் சக்தியை, உலக வர்த்தக அமைப்பினுள் பயன்படுத்தி இந்த முயற்சியைத் தடுக்க முயற்சிக்கலாம்.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.