பெங்களூரு: இந்தியா வேலையின்மை நெருக்கடியுடன் போராடுகையில், அதன் குறு நிறுவனங்கள் (20-க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட அலகுகள்) வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்கவையாக மாறக்கூடும் என்று அக்டோபர் 2019 அறிக்கை தெரிவிக்கிறது.

  • குறு நிறுவனங்கள் துறையின் அளவை கணிசமாக அதிகரிக்க இந்தியா தவறிவிட்டது;
  • இந்தியாவின் பெரும்பான்மையான குறு நிறுவனங்கள் சிறியவை மற்றும் மூன்றுக்கும் குறைவான தொழிலாளர்களுடன் இயங்குகின்றன;
  • இத்துறை தொழிலாளர் உற்பத்தித்திறனில் நல்ல வளர்ச்சியைக் காட்டுகிறது, ஆனால் குறைந்த ஊதிய அளவைக் கொண்டுள்ளது.

கட்டுமானத்துறை தவிர அனைத்து விவசாயம்சாரா குறு நிறுவனங்களை கவனித்த (தேசிய மாதிரி ஆய்வானது உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளை உள்ளடக்கியது) அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக நீடித்த வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்முனைவோருக்கான உலகளாவிய கூட்டணி ஆகியவற்றின் ஆய்வில் கிடைத்த குறிப்பிடத்தக்க முடிவுகள் இவை.

ஆறாவது பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவுகளை (67 மற்றும் 73 வது சுற்றுகள்) அடிப்படையாகக் கொண்ட அறிக்கையின்படி, குறு நிறுவனங்கள் இந்தியாவில் 11% வேலைகளை உருவாக்குகின்றன. பிற, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள 30% -40% என்பதைவிட இது கணிசமாகக் குறைவு. குறு நிறுவனங்களின் செயல்பாடுகளை அளவிடவும், பாலின சமத்துவம் கொண்டதாக மாறுவதற்கும், மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவினால், இதை நிகழ்த்த முடியும் என்கிறது ஆய்வு.

இந்தியாவின் குறு நிறுவனங்களில் பெண்கள் பங்கேற்பதில் சிக்கல் உள்ளது: சமூக மற்றும் சந்தை காரணிகள், அவர்களின் உற்பத்தித்திறனை பாதிப்பதாக கூறப்படுகிறது; இதை நாங்கள் பின்னர் விவரிக்கிறோம். ஆய்வில் குறிப்பிடப்பட்ட 2015ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, பெண்கள் அனைத்து குறு நிறுவனங்களில் 20% ஐ இயங்குகிறார்கள்; தங்களது பணித்திறனில் 16% ஐ உருவாக்குகிறார்கள்; இத்துறையின் மொத்த மதிப்பு சேர்க்கைகளில் 9% பங்களிப்பு செய்கிறார்கள். ஆனால் 2015 வரையிலான ஆறு ஆண்டுகளில், குறு அலகுகளின் உரிமையில் அவர்களின் பங்கு மற்றும் மதிப்பு கூட்டப்பட்டவை அதிகரிக்கவில்லை; மாறாக 2% புள்ளிகள் சரிந்தன.

கடந்த 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கு இடையில், ஆடை மற்றும் கல்வித்துறையில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் கிராமப்புற இந்தியாவில் மிக அதிக வளர்ச்சியை (5% அல்லது அதற்கு மேற்பட்ட) பதிவு செய்தன. நகர்ப்புறங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் கார், மோட்டார் வாகன விற்பனை அதிக வளர்ச்சியை கண்டன. இந்த வளர்ச்சி விகிதத்தில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,60,000 வேலைகளை உருவாக்குகின்றன என்று ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு பூகோள ரீதியான விநியோகம், புள்ளி விவரங்கள், பாலினம் (வேலைவாய்ப்பு மற்றும் நிறுவன உரிமை), தொழில்துறை விநியோகம், தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் ஊதியங்கள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்தது.

பெரும்பாலான குறு நிறுவனங்களில் 3 அல்லது அதற்கும் குறைவான தொழிலாளர்கள்

கடந்த 2015 வரையிலான ஆறு ஆண்டுகளில், விவசாயம்சாராத அல்லாத குறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு 10.8 கோடியில் இருந்து, 11.13 கோடியாக அதிகரித்துள்ளது; இதன் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (சிஏஜிஆர்) 0.6% ஆகும். அவற்றின் கூட்டு மொத்த மதிப்பு 9% சிஏஜிஆரில், ரூ. 7.4 லட்சம் கோடியில் இருந்து (104 பில்லியன் டாலர்) ரூ.115 லட்சம் கோடியாக (162 பில்லியன் டாலர்) அதிகரித்தது.

ஆனால் இந்திய குறு நிறுவனங்கள் “அமைப்புசார்ந்த துறையில் காணப்படும் வேலைவாய்ப்பின் குறைந்த வெளியீட்டு நெகிழ்வுதன்மையை கொண்டுள்ளன” என்கிறது ஆய்வு. இத்துறையில் மதிப்பு கூட்டலில் பயனுள்ள வளர்ச்சி இருந்தும், வேலைவாய்ப்புகள் குறைவாகவே வளர்ந்தன என்பதையே இது குறிக்கிறது.

தொழிலாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலம் வாரியாக குறுநிறுவனங்களின் பங்கு

Source: Microenterprises in India: A Multidimensional Analysis (October 2019)

தேசிய அளவில் கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில், 55% ஒரேயொரு வேலை உரிமையாளருடன் மட்டுமே இயங்குகின்றன; அங்கு சம்பளம் அல்லது சம்பளம் பெறாத தொழிலாளர்கள் இல்லை. மேலும் 32% நிறுவனங்கள், இரண்டு, மூன்று (சம்பளம் மற்றும் சம்பளம் பெறாத) தொழிலாளர்களுடன் இயங்குகிறது என்று அறிக்கை குறிப்பிட்டது.

குறு நிறுவனங்களின் செயல்பாட்டில் மாநிலம் வாரியாக வேறுபாடுகள் உள்ளன: மேற்கு வங்கம் மற்றும் அசாமில், கிட்டத்தட்ட 90% இரண்டு சிறிய அலகுடன் (2-3 தொழிலாளர்கள் வரை) இருக்கும் நிலையில், டெல்லி மற்றும் குஜராத்தில், பெரும்பாலானவற்றில், 4-5 தொழிலாளர்கள் வரை வேலை செய்கிறார்கள்.

“ஒன்று அல்லது இரண்டு தொழிலாளர்களை கொண்ட குறு தொழில் நிறுவனங்கள் ‘தயக்கமில்லாத தொழில்முனைவோராக [சிறு வணிகங்களைச் செய்வதில்]’அதிகமாக இருக்கக்கூடும்” என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக பேராசிரியரும், ஆய்வின் ஆசிரியருமான அமித் பசோல் கூறினார். “எனவே அவர்களால் அதிகம் வளர முடியாமல் போகலாம். சரியான ஆதரவு தரப்பட்டால், அவை வளர வாய்ப்புள்ளது மற்றும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்" என்றார்.

கடந்த 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கு இடையில், குறு நிறுவனங்கள் துறையில் சில்லறை விற்பனை பிரிவுகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் (30%) மிகப்பெரிய பங்கை கொண்டிருந்தன. கிராமப்புற இந்தியாவில் மற்ற அதிக தொழிலாளர்கள் போக்குவரத்து, ஆடை, புகையிலை மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள நுண் அலகுகள் ஆகும். நகர்ப்புறங்களில் உணவகங்கள், ஆடைகள், கல்வி மற்றும் மொத்த வர்த்தகம் ஆகியன, அதிக தொழிலாளர்களை பயன்படுத்துகின்றன என்று அறிக்கை குறிப்பிட்டது.

நல்ல ஊதியம் தரும் கல்வித்துறை; புகையிலை துறையில் குறைவு

கடந்த 2015இல், பெரிய உரிமையாளர்கள் உள்ள குறுநிறுவனங்களில், மிகக் குறைந்த ஊதியம் மற்றும் உற்பத்தித்திறன் என்பது, கிராமப்புற புகையிலைத் துறையில் காணப்பட்டது. ஆய்வின்படி, இங்கு சராசரி மாத ஊதியம் ஒரு தொழிலாளிக்கு ரூ.5,000-க்கும் குறைவாகவே இருந்தது. கிராமப்புறங்களில் கல்வித்துறையில் மிக உயர்ந்த உற்பத்தித்திறன் இருந்தது - ஒரு தொழிலாளிக்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ.13,000- மிக உயர்ந்த ஊதிய நிலை (ரூ.10,000) ஆகும்.

ஆனால் நகர்ப்புறங்கள் மோசமாக இருந்தன. நகரங்களில் உள்ள பெரிய உரிமையாளர்கள் யாரும் சராசரி ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மாத ஊதியங்களை காட்டவில்லை. பெரும்பாலானவர்கள் ரூ.6,000 முதல் ரூ. 8,000 வரையே தந்ததாக ஆய்வு கூறுகிறது.

2015 இல் பல்வேறு தொழில்களில் ஊதிய விகிதங்கள்

Source: Microenterprises in India: A Multidimensional Analysis (October 2019)

"காரணம், வளர்ச்சியை மீறி உற்பத்தித்திறனின் அளவு இன்னும் குறைவாக உள்ளது - ஊதியங்கள் பொதுவாக உற்பத்தித்திறனை தாண்ட முடியாது, ”என்று பசோல் கூறினார். "மற்ற காரணம் என்னவெனில், உற்பத்தித்திறன் வளர்ந்தாலும், இது சமமான ஊதிய வளர்ச்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை; ஏனெனில் அமைப்புசாரா பொருளாதாரத்தில் நிறைய உபரி உழைப்பு உள்ளது. இது ஊதியங்கள் உயராமல் தடுக்கிறது” என்றார்.

சிறப்பாக செயல்பட்ட சிறிய அலகுகள்

இந்தியாவின் பொருளாதார பங்களிப்பை பொறுத்தவரை, மொத்த மதிப்பு கூட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தங்கள் பங்கை அதிகரித்த குறுந்தொழில் நிறுவனங்கள், மிகச்சிறிய அளவாகும். பெரிய நிறுவனங்கள் அவ்வாறு செய்யத்தவறியது “கவலைக்குரியது” என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2010இல், அனைத்து அமைப்புசாரா துறை நிறுவனங்களில், 60% வரை ஒற்றை தொழிலாளர் நிறுவனங்கள் தான்; அவற்றின் பங்களிப்பு 2015ஆம் ஆண்டில் 2% புள்ளிகள் உயர்ந்து 62% ஆக இருந்தது. ஒற்றை தொழிலாளர் நிறுவனங்கள் மற்றும் மூன்று தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனங்கள் 2010 இல் அனைத்து நிறுவனங்களிலும் 93% மற்றும் 2015இல் 94% ஆகும்.

செயல்பாடுகள் அதிகரிக்கும் போது இத்துறை பல சவால்களை எதிர்கொள்கிறது. பசோலின் கூற்றுப்படி, குறைந்த அளவு உற்பத்தித்திறன் மற்றும் ஊதியங்கள், கடன், உள்கட்டமைப்பு மற்றும் சந்தைகளுக்கான அணுகல் இல்லாமை மற்றும் தண்டனை தரக்கூடிய ஒழுங்குமுறை ஆகியன இதில் அடங்கும்.

அதேபோல், 4-5 தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்கள் தங்களது சிறிய நிறுவனங்களை விட, ஒரு தொழிலாளிக்கான உற்பத்தியை 50% அதிகம் செய்கின்றன; அதேநேரம் ஊதிய விகிதம் அளவு தரத்தால் வேறுபடுவதில்லை என்று ஆய்வு குறிப்பிட்டது. அலகுகள் 2-3 தொழிலாளர்களிடம் இருந்து 4-5 என்று செல்லும் போது, உற்பத்தி அதிகரிப்பு காணப்படுகிறது. இதைத் தாண்டி, "உபரி மிகவும் மெதுவாக அதிகரிக்கிறது; மிகப்பெரிய அளவின் தரம் குறைகிறது" என்று ஆய்வு தெரிவித்துள்ளது. அமைப்புசாரா துறையில் உள்கட்டமைப்பு தடைகள் காரணமாக பெரிய நிறுவனங்கள் விகிதாச்சாரத்தில் அதிக உற்பத்தியை செய்யவில்லை என்று ஆய்வில் கூறுகிறது.

இத்துறையின் வளர்ச்சியை நோக்கமாக கொண்ட அரசின் கொள்கைகள் மற்ற கொள்கைகளுடன் ஒருங்கிணைந்து அவற்றை நிலைநிறுத்தி இருந்தால் மட்டுமே, அவை செயல்படும் என்றார் பசோல். கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் சாராத சிறு/குறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன்களை வழங்கும் முத்ரா போன்ற திட்டங்கள், “மிகச் சிறிய அளவிலான கடன்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளன; அவை நிறுவனத்தில் நிலையான வளர்ச்சியைக் கொடுக்காது” என்று பசோல் கூறினார். ஒரு பொதுவான நிறுவனத்தில் 4-5 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர், 2-3 அல்ல. எனவே, குறு நிறுவனம் என்பதற்கான புள்ளியை அளவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பெண்களுக்கு பாதமான சூழல் ஏன்

நாம் முன்பு குறிப்பிட்டது போல, குறு நிறுவனத்துறையில் பெண்களின் ஈடுபாடு திருப்திகரமாக இல்லை; அவர்களின் செயல்பாடு, ஆண்களை விட குறைவு என்கிறது ஆய்வு. 80 லட்சம் (அல்லது 2.7%) பெண்களுக்கு சொந்தமான குறு நிறுவனங்களில் 2,16,000 வரை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன; 45,000 நிறுவனங்கள் 6-9 தொழிலாளர்களையும்; 25,000 நிறுவனங்கள் 10க்கும் மேற்பட்டோரையும் வேலைக்கு அமர்த்தியுள்ளன.

ஆனால் ஆண்களை ஒப்பிட்டால், எண்ணிக்கை பெரிதாக இருந்தது: 30 லட்சம் நிறுவனங்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன; 5,00,000 நிறுவனங்கள் 6-9 பேரையும்; 2,33,000 நிறுவனங்கள் 10க்கும் மேற்பட்டோரையும் வேலைக்கு அமர்த்தியுள்ளன.

மேலும், 2013-14 ஆம் ஆண்டில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பணிபுரிந்த மொத்த தொழிலாளர்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் (13.4 மில்லியன்) பெண்கள். இது "பெண்கள் மற்ற பெண்களுடன் பணிபுரியும் உயர்ந்த போக்கை" காட்டியது. பெண்களை வேலைக்கு அமர்த்தும் பெண்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் அடிப்படையில் மணிப்பூர் (91%) மற்றும் கேரளா (90%) ஆகியன அதிகபட்சமாக உள்ளன.

Male- And Female-Owned Firms In Rural And Urban India
(all in Rs) Male Female Ratio
Rural GVA per Firm 10,274 3628 0.35
Labour Productivity 6504 2,873 0.44
Assets per firm 137,376 59,133 0.43
Urban GVA per Firm 23,277 10,665 0.46
Labour Productivity 116,45 7195 0.62
Assets per firm 737,435 292,794 0.4

Source: Microenterprises in India: A Multidimensional Analysis (October 2019)

நகர்ப்புற இந்தியாவில், பெண் தொழில்முனைவோருக்கு ஒரு நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட மொத்த மதிப்பு, ஆண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் 46%, தொழிலாளர் உற்பத்தித்திறன் 62% மற்றும் சொத்துக்களுக்கு சொந்தமான 40% ஆகும். கிராமப்புறங்களில் இந்த புள்ளிவிவரங்கள் முறையே 35%, 44% மற்றும் 43% ஆக இருந்தன. நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவில், 10 தொழில்கள் 90% க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சொந்தமான நிறுவனங்களைக் கொண்டுள்ளன.

"பெண்கள் வீட்டு அடிப்படையிலான சிறிய நிறுவனங்களை இயக்க முனைகின்றனர் (அதாவது அவற்றை எளிதில் விரிவாக்க முடியாது) மற்றும் பிற பெண்களுடன் இணைந்து பணியாற்ற முனைகிறார்கள்" என்று பசோல் கூறினார். "அவர்களுக்கு பெரும்பாலும் சொத்துக்கள் (நிலம் அல்லது வீட்டிற்கான உரிமம் போன்றவை) சொந்தமாக இருப்பதில்லை; அவை கடனுக்காக பிணைக்கப்படலாம்" என்றார்.

பெண்கள் வீட்டு பொறுப்புகளுடன் வேலையையும் கையாள வேண்டும், இதனால் நிறுவனத்தில் போதுமான நேரத்தை ஒதுக்குவது கடினம். மேலும், வணிக சந்தையில் அவர்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர் - அதாவது அதே தயாரிப்புக்கு ஆண் தொழில்முனைவோரை விட குறைந்த விலையை பெறுகிறார்கள் என்று பசோல் கூறினார்.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.