மும்பை: இந்தியா முழுவதும், 2018ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு சுமார் 49 லட்சம் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது; இது இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டமான கட்ச் அளவில் தோராயமானது என்று, நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட அரசின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே ஆண்டில், 1,808 பேர், வெள்ளத்தால் உயிர் இழந்தனர்.

பயிர் இழப்பு, 20.7 லட்சம் ஹெக்டேருக்கு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மொத்த மிசோரம் மாநிலத்தின் அளவாகும். பயிர் இழப்பு மதிப்பு ரூ.3,097.3 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் 53,867 கால்நடைகள் உயிரிழந்தன. வீடுகள், பயிர் மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு ஒட்டுமொத்த ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ. 95,736 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020-21 பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கியதை விட 39% அதிகம்.

வீடுகள், 460,000-க்கும் மேற்பட்டவை சேதமடைந்துள்ளன; இதனால் 2018ம் ஆண்டில் ரூ. 2,014.5 கோடி இழப்பு ஏற்பட்டது.

அதிதீவிர மழை பெய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையே தரவுகள் காட்டுகின்றன. இதற்கு இந்தியா மேலும் சிறப்பாக ஆயத்தமாக வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிதீவிர மழை

ஒரேநாளில் 100-150 மி.மீ அல்லது அதற்கு மேல் பதிவாகும் மழைப்பொழிவை, அதிதீவிர மழை நிகழ்வு என வகைப்படுத்தப்படுகிறது. இது வெள்ளமாக மாறுகிறதா என்பது மழையின் காலம் மற்றும் சூழப்பட்டுள்ள பகுதி ஆகியவற்றை பொறுத்து அமைகிறது. நிலப்பரப்பு, மண்ணின் ஈரப்பதம் மற்றும் நதி நீர்ப்பிடிப்பு பகுதி அளவு ஆகியவற்றை சார்ந்து, இது அமைகிறது. "எடுத்துக்காட்டாக, உப்பு மிகுந்த மண்ணுடன் மலைச்சரிவுகளில் அதிக மழை பெய்யும் நிகழ்வுகள், அங்கு நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, பெரும் வெள்ளத்தை விளைவிக்கும்" என்று புனே இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (ஐஐடிஎம்) காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் கூறினார். "கால்வாய்கள் மற்றும் வடிகால் நிரம்பி வழிகின்ற நகரங்களில் இந்த காட்சிகள் வித்தியாசமாக இருக்கும்; (அ) வெள்ள நிலைமைகளின் விளைவாக ஏற்படும் இந்த கனமழையை உறிஞ்ச, வெள்ள வடிகால்கள் அல்லது சதுப்புநிலங்கள் இல்லை,” கோல் கூறினார்.

அதிதீவிர மழை நிகழ்வுகள் மற்றும் வறட்சிக்கு காலநிலை முறிவு மிகவும் பொதுவான காரணமாகவும், மேலும் இதை தீவிரமாகவும் ஏற்படுத்துவதையும் புதிய ஆதாரங்கள் காண்பிக்கின்றன.

இந்தியாவுக்கான முந்தைய இரண்டு ஆண்டுகளின் தரவுகளுடன் ஒப்பிடுகையில், வெள்ளத்தின் பரவலான அதிகரிப்பு, பல ஆண்டுகளாக குறைந்துவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, இழந்த உயிர்கள் மற்றும் பயிர்கள் மற்றும் சொத்துக்களின் ஒட்டுமொத்த இழப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சேத மதிப்பு அதிகரித்துள்ளன என்பதையே இது காட்டுகிறது.

முன்கூட்டியே எச்சரிக்கை மற்றும் மக்களை வெளியேற்றுவது என்பதை மையப்படுத்தி, பேரழிவுக்கு தயாராவதில் இந்தியா முதலீடு செய்துள்ளது. தீவிர நிகழ்வுகளின் அதிகரிப்பு இருந்தபோதிலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக உயிர் இழப்பைத் தவிர்க்க முடிந்ததற்கு காரணம் இதுதான் என்று, உலக ஆதாரவள நிறுவனத்தின் (WRI) இந்தியாவின் காலநிலை திட்டத்தின் இயக்குனர் உல்கா கெல்கர் தெரிவித்தார்.

மழை மற்றும் காலநிலை மாற்றம்

"நாடாளுமன்றத்தில் அரசு அளித்த பதிலில், காலநிலை மாற்றம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு காரணமான தொடர்பை ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டாலும், அதீத மழை பெய்யும் சம்பவங்களால் வெள்ளம் இந்தியாவில் அதிகரித்து வருவதற்கான சான்றுகள் கூறப்பட்டுள்ளது. பருவமழை ஒழுங்கற்றதாக இருப்பதுடன், தவறான நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடலும் அதனுடன் சேர்ந்து விடுகிறது,” என்று, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) அபாயங்கள் மற்றும் ஏற்புக் குழுவின் அபினாஷ் மொஹந்தி கூறினார். "கிடைக்கும் புதிய சான்றுகள் இந்த காலநிலை மாற்ற அவசரநிலைக்கு பருவமழையின் மாற்றங்களை இணைக்கின்றன. இது இந்தியாவின் பேரழிவுக்கு ஆயத்தமாவதை, வரம்புடன் கூடியதாக இருக்கச் செய்வதால், உயிர்கள் மற்றும் சொத்து இழப்புகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.

பேரழிவுகளின் அதிர்வெண் மற்றும் அளவு இரண்டையும் காலநிலை மாற்றம் அதிகரிக்க செய்வதால் ஏற்படும் சொத்து இழப்பு மற்றும் வாழ்வாதாரங்களை சீர்குலைப்பது பெரிய கவலையாக உள்ளது. "மேம்பாட்டுக்கு திட்டமிடல், உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் சமூக பாதுகாப்பு என, ஒவ்வொரு அம்சத்திலும் நாம் காலநிலை அபாயங்களை ஒருங்கிணைக்க வேண்டும்" என்று கெல்கர் கூறினார்.

சி.இ.இ.டபிள்யு. இன் தரவு பகுப்பாய்வுபடி, கடந்த 40 ஆண்டுகளில் (1980-2019) வெள்ள நிகழ்வுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது (கீழே உள்ள படம், அதன் போக்குகளை கணக்கிடுகிறது). பெரும்பான்மையான மாநிலங்களில் வெள்ளத்திற்கான தற்செயல் திட்டம் உள்ளது. ஆனால் பீதி அடையச் செய்வது என்னவென்றால், தீவிர வெள்ள நிகழ்வுகளை ஒரே நேரத்தில் வெள்ளம்-வறட்சி, புயல் எழுச்சி - வெள்ளம் போன்ற பிற நிகழ்வுகளுடன் இணைப்பதில் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகள் உள்ளது தான் என்று மொஹந்தி கூறினார். இந்த தீவிர நிகழ்வுகள் ஒன்றாக நிகழ்வது எந்தவொரு திட்டமிடல் அல்லது செயல்களிலும் ஒன்றிணைக்கப்படவில்லை என்ற அவர், ஒடிசா மற்றும் பீகார் சில சிறந்த வெள்ள தற்செயல் திட்டங்களைக் கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.

Source: CEEW's analysis

வெள்ளம்

நான்கு மாத (ஜூன்-செப்டம்பர் 2019) தென்மேற்கு பருவமழையின் போது இந்தியாவில் 14 மாநிலங்களில் 1,685 பேர் பலத்த மழை நிகழ்வுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர் - இது சராசரியாக ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 14 பேர் இறப்பு என்ற விகிதம் ஆகும் என்று எங்களின் முந்தைய கட்டுரை தெரிவிக்கிறது. வரவிருக்கும் தசாப்தங்களில், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று காலநிலை கணிப்புகள் தெரிவிப்பதாக, மொஹந்தி கூறினார். பல காரணிகள் ஒரு வெள்ள நிகழ்வை வடிவமைக்கின்றன. அவற்றில் வானிலை நிகழ்வுகள் (மழை, புயல், பேரலை, பனி உருகுதல் போன்றவை) குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன. இந்த வானிலை நிகழ்வுகள், மானுட மைய நிலபயன்பாடு மற்றும் நிலப்பரப்பு அழுத்தத்துடன் இணைந்தால், கடுமையான பேரழிவுகள் ஏற்படுகின்றன. ஆராய்ச்சி அடிப்படையிலான சான்றுகள் ஏற்கனவே காலநிலை மாற்றத்திற்கும் வெள்ள நிகழ்வுகளின் அதிகரிப்புக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தி உள்ளன.

மழை நிகழ்வுகள், திடீர் வெள்ளத்துடன் தொடர்புடையவை. எடுத்துக்காட்டாக, கேரளா 2019 ஆம் ஆண்டு மழைக்காலத்தில், இரு வாரங்களுக்கு இடைவிடாத தொடர் மழை காரணமாக, அதே ஆண்டில் மிக மோசமான வெள்ளத்தை கண்டது. கடந்த கால காப்பகப்படுத்தப்பட்ட கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய, சமீபத்திய முன்னறிவிப்பு மாதிரிகளை பயன்படுத்தும் ஐரோப்பிய வானிலை முன்னறிவிப்பின் மறுபகுப்பாய்வு தரவின் அடிப்படையில், இத்தகைய மழையின் போக்குகள் மிகவும் திடீரென்று உள்ளன, இது பொருளாதார மற்றும் மேம்பாட்டு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. மழை நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; ஆனால் நாள் வாரியாக அதிதீவிர மழை (நாளொன்றுக்கு 12-15 செ.மீ) நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

"அதே நேரத்தில், இடைவிடாத மழை இன்னும் தெளிவாகத் தெரிந்தாலும், இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கூற்றுப்படி, கடந்த தசாப்தத்தில் மழை பற்றாக்குறை ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று (CEEW) மொஹந்தி கூறினார்.

மலைகள், ஏரிகள் மற்றும் நீரோடைகள் மீது நகரங்களும் வீடுகளும் கட்டப்படும்போது, இடையகங்களாக செயல்படும் காடுகள் மற்றும் ஈரப்பத நிலங்களை நாம் இழக்கும் போது, தீவிர மழை நிகழ்வுகள் வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என்று டபிள்.ஆர்.ஐ. இந்தியாவின் கேல்கர் கூறினார். உத்தரகண்டில், மேகவெடிப்புடன் ஏற்பட்ட மழை, பெருவெள்ளத்திற்கு வழிவகுத்தது. கேரளாவில் அணை மேலாண்மையானது நிலச்சரிவுக்கு வழிவகுத்தது. மும்பையில், பலத்த மழை மற்றும் அதிக பேரலைகள், மழைநீர் வடிகால்களை மூழ்கடித்துள்ளன என்று அவர் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.