மும்பை: ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் ஒரு புதுமையான, பசுமையான முறை, புவி வெப்பமடைதலை ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும் மற்றும் நாடுகள் தங்கள் காலநிலை இலக்குகளை அடைய உதவும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி, தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதன் மூலம், 'பசுமை' ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. மாறாக, ஹைட்ரஜனை உருவாக்கும் வழக்கமான செயல்முறை, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துகிறது.

உரங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில், ஹைட்ரஜன் ஒரு முக்கிய உள்ளீடு ஆகும், எனவே பசுமை ஹைட்ரஜன் இந்த தொழில்கள் மொத்த உமிழ்வைக் குறைக்க உதவும். நிலக்கரியை எரிசக்தி ஆதாரமாகவும் குறைக்கும் முகவராகவும் மாற்றுவதன் மூலம் உமிழ்வைக் குறைக்க எஃகு உற்பத்தியிலும் இதைப் பயன்படுத்தலாம்.

"இப்போது வரை, சுத்தமான மின்சாரத்திற்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களில், நாம் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் தொழிற்துறை மற்றும் போக்குவரத்து துறை, நிகர பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கு மாற, நமக்கு சுத்தமான எரிபொருள் தேவை; பசுமை ஹைட்ரஜன் இதில் முக்கிய பங்கு வகிக்க முடியும், " என்று, தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்டின் (TERI) சமூக மாற்றத்தின் முன்னாள் மூத்த இயக்குனர் அமித் குமார், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள தீவிர வானிலை நிகழ்வுகள் காலநிலை நடவடிக்கையின் அவசரத்திற்கு வழிவகுக்கின்றன, புவி வெப்பமடைதலை 1.5-2 டிகிரி செல்சியஸ் (° C) ஆகக் கட்டுப்படுத்த, -- பல ஏற்கனவே 'நிகர பூஜ்யம்' இலக்குகளை அறிவித்துள்ளன-- நாடுகள் உமிழ்வைக் குறைக்க முயற்சிக்கின்றன. பச்சை ஹைட்ரஜன் உலகளாவிய, பொருளாதாரம் மற்றும் அமைப்பு முழுவதும் மனித குலத்திற்கான குறைந்த கார்பன் தடம் மாறுவதற்கு ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், மத்திய அரசும் பல மாநிலங்களும், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஆதரிக்கும் திட்டங்களைத் தொடங்குகின்றன. செப்டம்பர் 2021 இல், கொச்சின் விமான நிலையத்தில், சூரிய மின்சக்தி நிலையத்தில் இருந்து பசுமை ஹைட்ரஜனை உருவாக்க எரிசக்தி நிறுவனங்களுடன் கேரளா பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆகஸ்டில், இந்தியாவின் ஆற்றல் மாற்ற இலக்குகளுக்கு உதவும் வகையில், தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தை, பிரதமர் அறிவித்தார். பசுமை ஹைட்ரஜன் என்றால் என்ன, அது இந்தியாவுக்கு ஏன் முக்கியம் என்பதை, எங்கள் விளக்கம் தருபவர், உங்களுக்குச் சொல்கிறார்.

பல்வேறு வகையான ஹைட்ரஜன்

புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சாம்பல் ஹைட்ரஜனுக்கான இந்தியாவின் தேவை, 2020 ஆம் ஆண்டில் சுமார் ஆறு மில்லியன் டன்களாக இருந்தது என்று, தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் அறிக்கை தெரிவிக்கிறது.

"ஹைட்ரஜன் அடிப்படையில் நிறமற்ற வாயு; நிறங்கள்-பச்சை, நீலம், கருநீலம் மற்றும் சாம்பல்-இது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைக் குறிக்கிறது," என்று, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) உடன் இணைந்த ஆற்றல் துறை பொறியாளர் ஆஷிஷ் குஹான் பாஸ்கர் கூறினார், "பசுமை ஹைட்ரஜன் மட்டுமே புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் சுத்தமான வகை" என்றர்.


வரும் 2050ஆம் ஆண்டு வாக்கில், இந்தியா சாம்பல் ஹைட்ரஜன் தேவையில் ஐந்து மடங்கு வளர்ச்சியைக் காணும் என்று, தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் அறிக்கை கணித்துள்ளது. ஆனால் 2030 ஆம் ஆண்டு வாக்கில் மட்டுமே பசுமை ஹைட்ரஜன் புதைபடிவ எரிபொருட்களில் இருந்து ஹைட்ரஜனுடன் செலவு - போட்டித்தன்மையுடன் மாறும், அதன் விலை 50%க்கும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளது, இது $ 2 (ரூ. 147/kg) க்கும் குறைவாக இருக்கும். அதன் தற்போதைய விலை $ 3/kg (Rs.221/kg) மற்றும் $ 10/kg (Rs. 737/kg) க்கு இடையில் உள்ளது.

பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தக்கூடிய துறைகள்

பசுமை ஹைட்ரஜன், கப்பல் மற்றும் போக்குவரத்து போன்ற கார்பன் நீக்கத் துறைகளுக்கு உதவ முடியும், அங்கு அது ஒரு எரிபொருளாகவும், எஃகு மற்றும் இரசாயனங்கள் போன்ற உற்பத்தித் தொழில்களிலும் ஒரு முக்கிய மூலப்பொருளாகவும் எரிபொருளாகவும் இருக்கும். இது மின் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களை மாற்றும், மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமிக்க பயன்படுகிறது. மேலும், பசுமை ஹைட்ரஜனை எரிவாயு விசையாழிகளில், அம்மோனியாவுடன் சேர்த்து, தேவை மற்றும் மின் விநியோகத்தில் ஏற்ற இறக்கங்களை நிர்வகிக்க பயன்படுத்தலாம்.

எஃகு மற்றும் இரும்பின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், உலக மாசுபடுத்தும் துறைகளில் உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 7% ஆகும். பாலங்கள் முதல், கார்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படும் எஃகு-2050 க்குள் இந்தியாவின் புதைபடிவ எரிபொருள் எரிப்பு மற்றும் தொழில்துறையில் இருந்து 35% கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை அளிக்கும் என்று, டெரி அறிக்கையின்படி எதிர்பார்க்கப்படுகிறது.

எஃகு உற்பத்தியில் ஹைட்ரஜன் இரண்டு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது - குறைக்கும் முகவராகவும், எரிபொருளாகவும். இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழில்நுட்பத்தில் தீவிர மாற்றங்கள் தேவை, இந்த செயல்முறையை, நீடித்ததாகவும் கார்பன் நடுநிலையாகவும் மாற்ற வேண்டும் என்று, சர்வதேச ஆற்றல் நிறுவனம், தனது 2020 அறிக்கையில் தெரிவித்துள்ளது. பசுமை ஹைட்ரஜன் அத்தகைய ஒரு முன்னேற்றமாக இருக்கலாம்.

ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகள், பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான எஃகு பரிசோதனை செய்து வருகின்றன. ஆர்செலார் மிட்டல் மற்றும் தைசென்க்ரூப் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பாளர்கள், பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பசுமை எஃகுக்கு மாறுவதற்கான பல்வேறு நிலைகளில் உள்ளனர். டாடா ஸ்டீல், 2020 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் பசுமை எஃகு திட்டத்தை செய்தது, ஆனால் இன்னும் இந்த தொழிற்சாலையை வணிக ரீதியாக அளவிடுவதற்கான வழிகளைத் தேடுகிறது.

பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான எஃகு, கார்பன் எல்லை வரிகளைத் தவிர்க்க இந்தியாவுக்கு உதவும். இது 2020-21ல் 10.15 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்து உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக உள்ளது. "குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், கார்பன் கால்தடத்திற்கு வரி விதிக்கத் தொடங்குகின்றன, எனவே எஃகுத் தொழிற்சாலைகளில் கார்பன் நீக்கத்திற்கு திட்டமிடவில்லை என்றால் அது நம்மை பாதிக்கும்" என்று, புது தில்லியைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் மூத்த திட்டத் தலைவர் ஹேமந்த் மல்லையா, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

எஃகு தயாரிப்பாளர்களுக்கு புதிய உபகரணங்கள் தேவைப்படுவதால், "தற்போதுள்ள எஃகு பெரும்பான்மையான வெடிப்பு உலை மூலம் -நீங்கள் உங்கள் நிலக்கரி, இரும்பு தாது மற்றும் பிற திரட்டிகளை வீசும் ஒரு மாபெரும் உருளை- தயாரிக்கப்படுகிறது" என்று மல்லையா கூறினார். "பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான எஃகுக்கு, உங்களுக்கு ஒரு தண்டு உலை தேவை, இது வேறு தொழில்நுட்பம்," என்றார் அவர்.


சவால்கள்

பசுமை ஹைட்ரஜனுக்கு மாறுவதில் உள்ள முக்கிய சவாலானது, பொருளாதார ரீதியாக போட்டித்தன்மை மற்றும் வணிகரீதியாக சாத்தியமானதாக மாற்றுவதாகும். பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எஃகு, வழக்கமான நிலக்கரியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எஃகு செலவினத்தைவிட, 50-127% அதிகமாகும் என்று,2021 இல் மதிப்பிடப்பட்ட எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் அறிக்கை தெரிவித்தது.

"பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை எஃகுக்கு மாறுவதற்கு, இந்தியா ஒருவித ஒழுங்குமுறை வழிமுறை அல்லது ஊக்கத்தொகையை ஏற்படுத்த வேண்டும்" என்று டெரி நிறுவனத்தின் குமார் கூறினார். ஆனால் இதுவரை, பசுமை ஹைட்ரஜன் தொடர்பான கொள்கை கட்டமைப்பை, அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.

எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் செப்டம்பர்-2021 அறிக்கையின்படி, பசுமை ஹைட்ரஜனை பயன்படுத்துவது இன்னும் சோதனை அளவிலேயே உள்ளது மற்றும் இந்தியா உட்பட பல நாடுகள், தேசிய ஹைட்ரஜன் திட்டங்களை அறிவித்திருந்தாலும், அது எவ்வாறு பெரிய அளவில் வணிகமயமாக்கப்படும் என்பதை அவர்கள் இன்னும் திட்டமிடவில்லை. நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பல நாடுகளின் கூட்டணியை, இந்த அறிக்கை முன்மொழிகிறது. தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் - 2021 அறிக்கையின் பரிந்துரைத்தபடி, நிறுவனங்களும் அரசாங்கமும், பசுமை எஃகுக்கு மாறுவதற்கு, முன்கூட்டியே ஒத்துழைக்க வேண்டும். இந்தியாவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள், சிந்தனைத் தொட்டிகளைச் சேர்ந்த வல்லுனர்களுடன் இணைந்து, இந்தியாவின் ஹைட்ரஜன் அலையன்ஸ் என்றழைக்கப்படும் கூட்டணியை உருவாக்கி, பசுமை ஹைட்ரஜன் வரைபடத்தைத் திட்டமிடுகின்றன.

பசுமை எஃகு பயன்படுத்த, பசுமை ஹைட்ரஜனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்தியா மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். தற்போது, ​​பசுமை எஃகு வரிசைப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான புதுமையான வழிகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் அல்ல, என்று குமார் கூறினார். இந்தியா தனது சமீபத்திய அமெரிக்க-இந்திய காலநிலை மற்றும் எரிசக்தி செயல் திட்டம்- 2030 கூட்டாண்மையைப் பயன்படுத்தி, இதுபோன்ற ஆராய்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

மேலும், பசுமை ஹைட்ரஜனுடன் சாம்பல் ஹைட்ரஜனைக் கலப்பதன் மூலம், இந்தியா படிப்படியாக பசுமை எஃகுக்கு மாற வேண்டும் என்று, சமீபத்திய எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் அறிக்கை பரிந்துரைத்தது. "புதைபடிவமற்ற எஃகு தயாரிப்பிற்கு, ஒரே இரவில் மாறுவது மிகவும் செலவினம் மிக்கதாக இருக்கும்" என்று மல்லையா கூறினார். 2030 ஆம் ஆண்டில், பசுமை எஃகு உற்பத்தி செய்வதற்கான மிகக் குறைந்த விலை, நிலக்கரி அடிப்படையிலான எஃகு விட, 22% அதிகமாக இருக்கும் என்று எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் அறிக்கை கூறுகிறது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.