மும்பை: காலநிலை நடவடிக்கைக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் ஜான் கெர்ரி, இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இருதரப்பு காலநிலை மற்றும் தூய்மையான ஆற்றல் செயல்திட்டம் -2030 கூட்டாண்மையின் கீழ், காலநிலை நிதி மற்றும் நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்ளார். ஏப்ரல் 2021 இல் தொடங்கப்பட்ட இந்த கூட்டாண்மை, 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைய இந்தியாவுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பருவநிலை இலக்குகளை முன்னேற்ற, இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைவது இது முதல்முறை அல்ல. 2009 ஆம் ஆண்டில், இந்தியாவும் அமெரிக்காவும், குறைந்த கார்பன் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும், தூயமையான தொழில்துறை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்வதன் மூலம், மேம்பட்ட தூய்மையான ஆற்றலுக்கான (PACE) கூட்டாண்மை தொடங்கின. மேம்பட்ட தூய்மையான ஆற்றலுக்கு (PACE), இந்தியாவில் 2.5 பில்லியன் டாலர்களை (ரூ .18,382 கோடி) தனியார் மற்றும் பொது முதலீட்டில் தூய்மையான எரிசக்தி வரிசைப்படுத்தலில் திரட்டியது. 2016 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் $ 7.9 மில்லியன் (ரூ. 58 கோடி) PACEsetter நிதியை தூய்மையான எரிசக்தி தீர்வுகளில் கண்டுபிடிப்புகளுக்கான மானியங்களை வழங்கத் தொடங்கின.

இந்தியாவிற்கு மிக சமீபத்திய கூட்டாண்மை என்றால் என்ன? முந்தைய இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை என்பது, அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஒரு சுத்தமான ஆற்றல் சந்தைக்கு மாறுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவில் கவனம் செலுத்தியது, அதே நேரத்தில் தற்போதைய கூட்டாண்மை இரு நாடுகளுக்கும் பசுமை இல்ல வாயு உமிழ்வு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வரிசைப்படுத்தல் ஆகியவற்றில் தெளிவான உள்நாட்டு இலக்குகளை நிர்ணயிக்கிறது என்று, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) மூத்த திட்டத்தலைவர் கனிகா சாவ்லா, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

புதிய கூட்டாண்மை கீழ், அமெரிக்கா தனது நிகர பசுமை இல்ல வாயு உமிழ்வை, 50-52% குறைக்கக்கூடிய ஒரு பொருளாதார அளவிலான, இலக்கை நிர்ணயித்துள்ளது, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவ இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மாற்ற இலக்குகளை அடைய, 2.5 டிரில்லியன் டாலர்கள் (ரூ .183 லட்சம் கோடி) முதலீடு தேவைப்படும் என்று கூறும் அமெரிக்க முன்னேற்ற மையம் மற்றும் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் பிப்ரவரி 2021 மதிப்பீடு அறிக்கை, முதலீட்டைத் திரட்டுவதற்காக இரு அரசுகளும் அமெரிக்க-இந்தியா பசுமை மாற்றம் நிதி முயற்சியை அமைக்க பரிந்துரைக்கின்றன.

"மேம்பட்ட தூய்மையான ஆற்றலுக்கான (PACE) காரணமாக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது, எனவே தற்போதைய ஒத்துழைப்பு அந்த வேகத்தை தக்கவைக்கும் நெம்புகோல்களில் கவனம் செலுத்துகிறது-நிதி மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள் இறுதிப் பயன்பாட்டுத் துறைகளை கார்பன் அகற்றச் செய்வது, இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவையின் பெரும்பகுதிக்கு பங்களிப்பு செய்யும்," என்று சாவ்லா, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் இந்திய-அமெரிக்க கூட்டு மற்றும் சமபங்கு

ஜான் கெர்ரியின் வருகை, இந்தியாவும் அமெரிக்காவும் தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 29 அன்று கிழக்கு அமெரிக்காவை தாக்கி, ஆறு மாநிலங்களில் குறைந்தது 50 பேர் பலி கொண்ட ஐடா போன்ற வெப்பமண்டல புயல்கள், சூறாவளிகள் மற்றும் சீற்றங்கள், புவி வெப்பமடைதல் காரணமாகவே நிகழ்ந்ததாக, அமெரிக்க காலநிலை தகவல் மற்றும் தரவு போர்ட்டலில் இந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமைபடி, அமெரிக்காவில் காட்டுத்தீயின் அதிர்வெண், அளவு மற்றும் தீவிரத்தன்மையின் அதிகரிப்பு, காலநிலை மாற்றத்திற்கும் காரணமாகும்.

பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய உலகின் ஐந்தாவது நாடான இந்தியா, உத்தரகாண்டில் திடீர் வெள்ளம், மேற்கு கடற்கரையில் அதிகரித்து வரும் சூறாவளிகள் மற்றும் 2021 இல் ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் வெப்ப அலைகள் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளைக் கண்டது. 638 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவின் 75% க்கும் அதிகமான மாவட்டங்கள் --கிட்டத்தட்ட பாதி மக்கள் தொகை-- தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கான முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தீவிர வானிலையின் தாக்கத்தால் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 2.5-4.5% தாக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது.

அனைத்து நாடுகளும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் போது, ​​"உலகளாவிய நிகழ்வு, ஆனால் உள்ளூர் விளைவுகளுடன்", புவி வெப்பமடைதலின் பங்களிப்பு வேறுபட்டது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது பருவநிலை மாற்றத்திற்கான வரலாற்றுப் பொறுப்பு, ஓரளவு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உதாரணமாக, 1850 மற்றும் 2010 க்கு இடையில் உலகின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வில் இந்தியா 2.6% ஆக இருந்தது, அதே நேரத்தில் அமெரிக்கா 28% ஆக இருந்தது என்று உலக வள நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு, ரியோ காலநிலை உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் பொதுவான, ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் அந்தந்த திறன்கள் [CBDR] கட்டமைப்பு இந்த சமத்துவமின்மையை அங்கீகரிக்கிறது. காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள சர்வதேச பதிலுக்கு நாடுகளிடையே பரந்த ஒத்துழைப்பு தேவை என்றாலும், தனிநபர்களின் பதில் அவர்களின், சி.பி.டி.ஆர் மற்றும் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று, கட்டமைப்பு குறிப்பிடுகிறது.

பருவநிலை மாற்றத்திற்குப் பதிலளிக்கும் பொருளாதாரச் செலவுகளைச் சமன் செய்வதை உறுதி செய்வதற்காக, ஐ.நா. கட்டமைப்பானது, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளால், சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான பொருளாதார வளர்ச்சியைத் தொடரும் செலவுகளை, பசுமை தொழில்நுட்பத்தின் நிதி மற்றும் பரிமாற்றத்தின் மூலம் ஆதரிக்கிறது.

ஆகஸ்ட் 27 அன்று நடந்த, சமீபத்திய பிரிக்ஸ் மாநாட்டில், இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், "சமநிலை, தேசிய முன்னுரிமைகள் மற்றும் சூழ்நிலைகளால் வழிநடத்தப்படும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை சவாலுக்கு எதிரான கூட்டு உலகளாவிய நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்" என்றார்.

இன்று வரை, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே சமபங்கு செயல்படுத்துவது குறித்து சிறிய ஒருமித்த கருத்து உள்ளது, ஆனால் புதிய கூட்டாண்மை அதை மாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "தற்போதைய கூட்டாண்மை நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட வளர்ச்சியை நிரூபிக்கும் வாய்ப்பைக் குறிக்கிறது" என்று சாவ்லா கூறினார்.

"இந்த கூட்டாண்மை நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவைத் தாண்டி ஒரு வாய்ப்பாகும்" என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் நவ்ரோஸ் துபாஷ் இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். பருவநிலை பாதிப்புகள் மற்றும் வளர்ச்சித் தேவைகளைக் கொண்ட ஒரு வளரும் நாடாக இந்தியா தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்காவில் இருந்து அதிக நடவடிக்கை எடுக்க கோரும் பசுமை மாற்றத்திற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாகும், என்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தை அங்கீகரித்ததில் இருந்து, சர்வதேச சோலார் கூட்டணியை நிறுவுதல் மற்றும் பசுமை ஹைட்ரஜனை ஊக்குவிக்க தேசிய ஹைட்ரஜன் மிஷன் வைப்பது உள்ளிட்ட பல முயற்சிகளை இந்தியா எடுத்துள்ளது. உள்நாட்டில், தூய்மை ஆற்றலுக்கு மாறுவதற்கு இந்தியா இன்னும் நிறைய செய்ய வேண்டும், இதற்கு நிதி உதவி மட்டுமல்ல, நிறுவன சீர்திருத்தம் தேவை என்று துபாஷ் கூறுகிறார். "ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற நிலக்கரி சார்ந்த பகுதிகளில் இந்தியா இன்னும் உள்ளது மற்றும் இந்தியாவின் அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனங்கள் அல்லது மின் வினியோக நிறுவனங்களுக்கு, இது நிதி ரீதியாக சாத்தியமற்றது, இது சுத்தமான ஆற்றல் மாற்றத்திற்கு தடையாக உள்ளது" என்றார் அவர்.

சர்வதேச அளவில், "இந்தியா முன்னேற வேண்டும் மற்றும் அமெரிக்காவை இன்னும் அதிகமாகச் செய்யச் சொல்ல வேண்டும் - அவர்களின் குறிக்கோள்களை மேம்படுத்துதல் மற்றும் அவற்றின் உமிழ்வைக் குறைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில், அதைத் தக்கவைக்க நாம் இன்னும் நிறைய செய்யத் தயாராக இருக்க வேண்டும். இந்த வகையான நல்லொழுக்க சுழற்சி இன்னும் இந்தியாவின் காலநிலை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லை "என்று துபாஷ் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.