புதுடெல்லி: வரவிருக்கும் 2021-22 பட்ஜெட், கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளை வெளிப்படுத்தும், இது 2020-21 நிதியாண்டில் தொற்றுநோயைச் சமாளிக்க சுகாதாரத்துக்காக உண்மையில் எவ்வளவு செலவிடப்பட்டது என்பதைக் குறிக்கும்.

கோவிட்19 தொற்று வழக்குகளை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், நோய்க்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கும் சுகாதாரத்துக்கான மேம்பட்ட ஒதுக்கீட்டை நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். (எங்களது, கோவிட்டுக்கான விலை என்ற தொடரை, இங்கே படிக்கவும்.)

பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்த இந்த கட்டுரையில், இந்தியாவில் பொது சுகாதாரத்திற்கு எவ்வாறு நிதி செலவிடப்படுகிறது, கடந்த சில ஆண்டுகளில் செலவின போக்குகள் மற்றும் அடுத்த பட்ஜெட்டில் எதைப் பார்க்க வேண்டும் என்பதை, நாங்கள் கோடிட்டுக் காட்டுகிறோம்.

கோவிட்19-க்கு 2020 இல் எவ்வளவு அதிகமாக ஒதுக்கப்பட்டது?

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகமானது, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் சுகாதார ஆராய்ச்சித்துறை என இரு துறைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் இரு துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையாக கணக்கிடப்படுகிறது. கடந்த மத்திய பட்ஜெட்டில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு ரூ.67,112 கோடி (9.2 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது தவிர, ரூ.14,232 கோடி (1.95 பில்லியன் டாலர்) கூடுதலாக சுகாதார அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டதாக, மத்திய அரசின் செப்டம்பர் 2020 இல் வெளியிடப்பட்ட துணை பட்ஜெட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது (துணை பட்ஜெட் செலவினங்களை அல்லது பட்ஜெட் ஒதுக்கீட்டை பட்டியலிடுகிறது,

இது மத்திய பட்ஜெட்டில் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக செய்யப்பட வேண்டும்).

அத்துடன், குறைந்தது ரூ.10,297.02 கோடி (1.4 பில்லியன் டாலர்) கோவிட்-19 செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, இது சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்களுக்கு இடையே (ரூ. 350 கோடி அதாவது, 47.97 மில்லியன் டாலர்) மற்றும் ரயில்வே அமைச்சகம் (ரூ. 630 கோடி, அதாவது 86.36 மில்லியன் டாலர் ) என பிரிக்கப்பட்டுள்ளது. கோவிட்19 செலவுகளை சமாளிக்க மத்திய சுகாதார அமைச்சகம் மட்டும் குறைந்தபட்சம், ரூ. 9,327 கோடி (1.23 பில்லியன் டாலர்) பெற்றது.

துறைகளுக்கு எவ்வாறு நிதி தரப்படுகிறது ?

சுகாதாரத்துக்கான இந்தியாவின் செலவு, தனியார் (தனிநபர்களால்) மற்றும் பொது மருத்துவம் (அரசு) என்பவற்றுக்குள் அடங்கும். இந்தியாவின் வருடாந்திர மத்திய பட்ஜெட், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டை செய்கிறது. இந்த பணத்தின் பெரும் பகுதி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதாரத் திட்டங்களுக்காக செலவிட அனுப்பப்படுகிறது.

மத்திய அரசின் ஒதுக்கீடு தவிர, மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு, தங்கள் சொந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துக்காக பணத்தை ஒதுக்குகின்றன. இதற்கான பணத்தை அவர்கள் தங்கள் மாநிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில் இிருந்து பெறுகிறார்கள்.

மாநில தரவுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒதுக்கீடுகளை சேர்த்து கணக்கிட்டால், சுகாதாரத்துக்காக மத்திய அரசு ஒதுக்கும் தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக ஒதுக்குகிறது என்பதை அரசின் தரவுகள் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 2015-16 ஆம் ஆண்டில் (உண்மையானவை) சுகாதாரத்துக்காக ரூ .1.17 லட்சம் கோடி (16 பில்லியன் டாலர்) செலவிட்டன. இது 2016-17ல் ரூ.1.48 லட்சம் கோடி ( 20.3 பில்லியன் டாலர் ) ஆகவும் (திருத்தப்பட்ட மதிப்பீடுகள்), 2017-18ஆம் ஆண்டில் (பட்ஜெட் மதிப்பீடுகள்) ரூ .1.58 லட்சம் கோடியாகவும் (21.7 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளன. இது, சுகாதாரத் துறைக்கு நிதியளிப்பது தொடர்பான மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக சுகாதார அமைப்பு, தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி, எய்ட்ஸ், காசநோய், மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதி போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும், நமது மத்திய அரசு பங்களிப்பு செய்கிறது. 2020-21 மத்திய பட்ஜெட்டில் உலக சுகாதார அமைப்புகளுக்கு இந்தியாவின் பங்களிப்பிற்காக, மொத்தம் ரூ .85.6 கோடி (11.7 மில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது.

பல அமைச்சர்கள் இந்தத் துறைக்கு நிதியளிக்கிறதா?

சுகாதாரத்துக்கான இந்தியாவின் பொதுத்துறை நிதியத்தின் பெரும்பகுதி மத்திய சுகாதார அமைச்சகம் அல்லது மாநிலங்களில் உள்ள சுகாதாரத் துறைகள் வழியாக வந்தாலும், பட்ஜெட்டின் ஒரு குறுக்குவெட்டு பகுப்பாய்வானது, மற்ற அமைச்சகங்களில் உள்ள திட்டங்களும் துறைகளும் சுகாதாரத்துக்கான அம்சங்களுக்கு நிதியளிப்பதைக் காட்டுகிறது.

ஊட்டச்சத்து அல்லது சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறைகளுக்கான அணுகல் போன்ற ஆரோக்கியத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் விஷயங்கள் தொடர்பாக, பல அமைச்சகங்கள் மற்றும் துறைகள் செயல்படுகின்றன: எடுத்துக்காட்டாக, பாரம்பரிய மருத்துவத்தின் வளர்ச்சிக்கு நிதியளிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் ஆயுஷ் அமைச்சகம், மருந்துகள் துறை, தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம், மற்றும் கழிப்பறைகளை உருவாக்குவதற்கான ஸ்வச் பாரத் மிஷன் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்திற்கும்; அதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் துறையானது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் பிற பாதுகாப்பு விஷயங்களுக்கு நிதி அளிக்கிறது.

2020-21 மத்திய பட்ஜெட்டில் இந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை மொத்தம் ரூ. 52,531 கோடி (7.19 பில்லியன் டாலர்). இதுதவிர, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு மட்டும் ரூ .67,112 கோடி (9.2 பில்லியன்) ஒதுக்கப்பட்டது. இதில், மாநில பட்ஜெட் ஒதுக்கீடுகள் சேர்க்கப்படவில்லை.


பல ஆண்டுகளாக பட்ஜெட் மற்றும் செலவு போக்குகள்

பொதுவாக, பாதுகாப்பு அமைச்சகம் தான், ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டின் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டைப் பெறுகிறது. கடந்த பட்ஜெட்டில் இதே நிலைதான், இதில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ .4.7 லட்சம் கோடி (64.6 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்திய சுகாதார அமைச்சகம் ரூ.67,112 கோடி (9.2 பில்லியன் டாலர்) உடன் ஒன்பதாவது மிக அதிபகட்ச பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெற்றது. இந்த விஷயத்தில், இந்தியாவின் பாதுகாப்பு ஒதுக்கீடு, சுகாதாரத்துறையை விட ஏழு மடங்கு அதிகம்.


முக்கிய நிதியைப் பெறும் கவனம் மிக்க பகுதிகள் யாவை?

மத்திய சுகாதார அமைச்சகத்தின் பட்ஜெட்டில், மிகப் பெரிய கூறுகளில் ஒன்று பொதுவாக தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு (NHM) ஒதுக்கீடு மற்றும் தாய் சேய் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்களான நோய்த்தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து போன்றவையாகும்.

மத்திய பட்ஜெட் 2020-21இல், தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.33,400 கோடி ( 4.6 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது மொத்த மத்திய சுகாதார அமைச்சக பட்ஜெட் தொகையான ரூ. 67,112 கோடி (9.2 பில்லியன் டாலர்) என்பதில் பாதியாகும்.

இருப்பினும், தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு, திருத்தப்பட்ட 2019-20 பட்ஜெட்டில் இருந்து 1.15% குறைந்துள்ளது என்பது, பட்ஜெட் ஆவணங்கள் குறித்த எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதார பணிகளுக்கான ஒதுக்கீடு 2019-20 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பெரிதாக மாறவில்லை.

சுகாதார பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்றிருப்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையாகும், இது பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த திட்டம், 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது மற்றும் 10 கோடி குடும்பங்களில், ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள சுகாதார காப்பீட்டுத் தொகையை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. டிசம்பர் 2020 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 51,500 சுகாதார மற்றும் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், 1.45 கோடி மக்கள் இந்த திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் சிகிச்சையைப் பெற்றுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய இரண்டு மத்திய பட்ஜெட்டுகளில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்திற்கு ரூ .6,400 கோடி ( 880 மில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டது. 2018-19 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான உண்மையான செலவு ரூ .1,997.9 கோடி (270 மில்லியன் டாலர்), அதே நேரம், 2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 3,200 கோடி ரூபாய் ( 440 மில்லியன் டாலர்) செலவைக் குறிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், திட்டத்தின் பட்ஜெட் மானியம் மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

எந்த பகுதிகளுக்கு அதிக நிதி தேவை?

பல ஆண்டுகளாக, இந்தியாவில் உள்ள பொது சுகாதார வல்லுநர்கள், பொது சுகாதாரத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசியுள்ளனர். மேலும் இந்த உணர்வானது கோவிட்19 தொற்றுநோயால் வலுப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றானது, சுகாதாரத்துறையில் புதிய சவால்களையும் செலவுகளையும் கொண்டு வந்துள்ளது. அத்தகைய ஒரு சவால், கோவிட்-19 தடுப்பூசி திட்ட செயல்பாடாகும், இது 2020 அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சரால் அறிவிக்கப்பட்டபடி, இந்த ஆண்டு குறைந்தது 250 மில்லியன் மக்களை உள்ளடக்கும் நோக்கம் கொண்டது.

"அரசின் பொதுத்துறைதான் கோவிட்-19 பராமரிப்பின் பெரும்பகுதியை வழங்க வேண்டியிருந்தது" என்று டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸின், ஸ்கூல் ஆஃப் ஹெல்த் சிஸ்டம் ஸ்டடீஸ் முன்னாள் டீன் டி.சுந்தரராமன், கடந்த டிசம்பரில் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஆயினும், கடந்த சில ஆண்டுகளாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் - சுகாதார காப்பீடு மற்றும் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை உருவாக்குதல் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும் - தொற்றுநோய்களின் போது, இவை எதுவும் போதுமானதாக இல்லை என்று, ​​சுந்தரராமன் விளக்கினார். ஏழை நோயாளிகள் "தனியார் மருத்துவமனைகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது அல்லது [கவனிப்பு இல்லாத பகுதிக்கு] "தள்ளப்பட்டனர் "என்று அவர் கூறினார். மேலும், தனியார் துறையை தொடர்ந்து நம்புவதும், தீங்கு விளைவிக்கும். மேலும் அரசு பொது சுகாதாரத்தில் அரசின் தலையீடு இல்லாமல் கோவிட் அல்லாத அல்லது அத்தியாவசிய சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

"ஒருபுறம், காசநோய் மற்றும் நோய்த்தடுப்புக்கான வழக்கமான சுகாதார செலவுகளுக்கான நிதி, 2020 ஆம் ஆண்டில் குறைந்துவிட்டது; மறுபுறம், மருத்துவமனைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் என, கோவிட்19 தொற்றை சமாளிப்பதற்கான செலவுகளில் பெரிய அதிகரிப்பு இருந்தது. எனவே, இவற்றில் சில, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் பட்ஜெட்டில் பிரதிபலிக்கும்" என்று, அக்கவுண்டபிள் இனிஷியேடிவ் இயக்குனர் அவனி கபூர் கூறினார்.

இருப்பினும், 2021 ஆம் ஆண்டில், வழக்குகளின் மந்தநிலை மற்றும் தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துதல் ஆகியன, மருத்துவமனைகளுக்கான செலவினங்களைக் குறைக்கும். எனவே, அரசின் கவனம் மற்றும் நிதி என்பது, தடுப்பூசிகளுக்கு மாறும் என்று கபூர் கூறினார்.

"கோவிட் தடுப்பூசி திட்டம், இனப்பெருக்க மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்காக ஏற்கனவே இருக்கும் அமைப்புகளைப் பொறுத்தது என்றால், இந்த சுகாதாரப் பகுதிக்கு நிதியுதவியை எதிர்பார்க்கலாம்... ஆனால் கோவிட்19- க்கு," என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய சுகாதார கணக்குகளின் (2016-17) மிக சமீபத்திய தரவுகளின்படி, சுகாதாரத்துக்கான மத்திய அரசின் செலவு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP) 1.2% ஆகும். இந்த எண்ணிக்கை 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% முதல் 1.6% வரை இருந்தது என்று பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா பொதுவாக தனது பட்ஜெட்டில் திட்டத்தின் பெரும்பகுதியை, பாதுகாப்பு தேவைகளுக்காக செலவிடுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சுகாதார அமைச்சகத்தை விட ஏழு மடங்கு நிதி ஒதுக்கீடு கிடைத்தது. எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய சுகாதாரக் கொள்கை, வரும் 2025 ஆம் ஆண்டளவில் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2.5%ஐ , சுகாதாரத்துக்காக செலவிடும் என்று நினைத்திருந்தது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.