புதுடெல்லி: ஒருவழியாக இந்திய அரசியல் கட்சிகளின் செயல்திட்டத்தில் சுகாதாரமும் ஒரு பகுதியாக மாறியுள்ளது; பொதுத்தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான அவகாசமே இருந்த நிலையில், 2018 செப்டம்பர் மாதத்தில் ஆயுஷ்மான் பாரத் என்று நன்கு அறியப்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.

ஆனால், எதிர்வரும் பட்ஜெட்டில் சுகாதார செலவினங்களுக்கான நிதியை இந்தியா அதிகரிக்கவில்லை என்றால், 50 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக்காப்பீடு வழங்க வழிவகை செய்யும் இந்த லட்சிய திட்டம் வெற்றி அடையாது என்கின்றனர் வல்லுனர்கள்.

இத்திட்டம் பிரதமர் நரேந்திரமோடியால் உருவாக்கப்பட்டது என்பதால் இதை ‘மோடி கேர்’ என்ற பெயருடன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்ததோடு, அதற்கு ரூ.2000 கோடி (300 மில்லியன் டாலர்) ஒதுக்குவதாக, 2018 பட்ஜெட்டில் கூறினார். இத்திட்டத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 கோடி (1.5 முதல் 1.8 பில்லியன் டாலர்) என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட தொகை ஐந்தில் ஒரு பங்கு தான் என்பது அரசின் சொந்த திட்ட மதிப்பீட்டில் தெரிய வருகிறது.

"நிதிகளின் குறைபாடு இல்லை," என்று, 2018 மார்ச்சில் இந்தியா ஸ்பெண்ட் நேர்காணலில், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார். ஆரம்ப ஒதுக்கீடு என்பது ஒரு "அடையாளத் தொகை" மட்டுமே என்றார் அவர்.

தேர்தல் ஆண்டு என்பதால், ஆயுஷ்மான் பாரத் திட்டம் முக்கியத்துவம் பெற்று அதற்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம்; இதனால், ஏற்கனவே நிதி ஆதாரங்கள் இல்லாமல் தடுமாறும் பிற முக்கிய சுகாதாரத்திட்டங்கள் மேலும் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.

எனவே “மத்திய அரசின் பார்வையில், குறைந்த முன்னுரிமையுள்ள திட்டங்கள் அதிக நிதியை பெறலாம்; இத்தருணத்தில் மத்திய அரசு பொறுப்பேற்றிருக்கும் முக்கிய செயல்பாடுகள் ஒதுக்கி வைக்கப்படும்" என்று மத்திய முன்னாள் சுகாதாரச்செயலாளரும், ‘டு வி கேர்? இந்தியாஸ் ஹெல்த் சிஸ்டம்’ என்ற நூலின் ஆசிரியருமான கே. சுஜாதா ராவ் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு பிந்தைய இந்த பட்ஜெட், “மருத்துவத்துறையில் உள்ள கட்டுப்பாடுகள், வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தீர்க்கக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு” என்று கூறும் பொது சுகாதாரத்திற்காக பணியாற்றும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உம்மன் குரியன், சுகாதாரம் என்பது மாநிலம் தொடர்புடையது; மாநிலங்களுக்கு அதிக வளங்கள், நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும் என்றார்.

எனினும் இத்திட்டதிற்கான பலனை மத்திய அரசே அறுவடை செய்ய நினைப்பது குறித்து, பல மாநில அரசுகள் அதிருப்தியடைந்துள்ளன. உதாரணமாக, பிரதமர் மோடியை குறிப்பிட்டு ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு அனுப்பிய உரிமம் கடிதங்களை, மேற்கு வங்க அரசு புறந்தள்ளியது; இதுபற்றி மாநில அரசை கலந்தாலோசிக்கவில்லை என்று அது கூறியது.

ஏன் சுகாதாரம் பட்ஜெட் பொருளாகிறது?

தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் இந்தியா இன்னும் போராடி வருகிறது - உலகின் அதிக காசநோயாளிகள், மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளை இது கொண்டிருக்கிறது. ‘ஒழிக்கப்பட்டதாக’ கூறினாலும் இன்னமும் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மலேரியா எண்ணிக்கை குறைந்தாலும் மூளைக்காய்ச்சல் பாதிப்பும், இறப்புகளும் அதிகரித்து உள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவில் சுகாதார நெருக்கடி வளர்ந்தாலும் கூட, நாட்டின் மிகப்பெரிய தாய்சேய் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டமான தேசிய சுகாதார இயக்கம் (NHM) மாநிலங்களுக்கு வழங்கிய நிதி செலவிடப்படாதது, 2016 ஆம் ஆண்டுடன் முடிந்த ஐந்தாண்டுகளில் 29% என்று உயர்ந்ததாக, 2018 ஆகஸ்ட்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்தியாவில் 40 ஆண்டுகால ஊட்டச்சத்து திட்டமான - ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம் இருந்தாலும் - உலகில் மூன்றில்ஒரு குழந்தை இந்தியாவில் தான் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க போராடுகிறார்கள்; மற்றும் வகுப்பறைகள், பணி இடங்களில் தங்களது சகாக்களுடன் சேருவதை கடினமாக உணருகிறார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்தியாவில், 46 பில்லியன் டாலர் (ரூ. 3.2 லட்சம் கோடி) மதிப்பிலான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது, 2018-19 பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா செலவிட்ட தொகையை (21.6 பில்லியன் டாலர் அல்லது ரூ. 1.38 லட்சம் கோடி) விட இரு மடங்காகும் என 2019 ஜனவரி 3ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியுள்ளது.

உலகில் இந்தியாவின் நிலை எங்குள்ளது?

உலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா திகழ்ந்து வந்தாலும், மிகக்குறைவான சுகாதார பாதுகாப்பு உள்ள நாடாகவும் அது உள்ளது.

சமீபத்திய பொதுசெலவின அறிக்கை கிடைத்த 2015ஆம் ஆண்டில், இந்திய அரசு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.02% மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிட்டுள்ளது - இது 2009 உடன் முடிந்த ஆறாண்டுக்கு செலவிடப்பட்ட தொகை மாறாமல் உள்ளது - மற்றும் இது உலகின் மிகக்குறைந்த தொகை ஒதுக்கீடு என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

Source: National Health Profile, 2018

2017-18ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.28% (பட்ஜெட் மதிப்பீடுகள்) இந்தியா செலவிட திட்டமிட்டிருந்தாலும், இன்னும் பிற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் செலவினங்களை விட இது குறைவாகவே உள்ளது; அதாவது அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரி 1.4% செலவிடப்படுகிறது.

உடல் நலம் தொடர்பாக தனி நபருக்கு செலவிடுவதில் இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகமாக இலங்கை, இரண்டு மடங்கு கூடுதலாக இந்தோனேஷியா செலவிடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கு மாலத்தீவு 9.4%, இலங்க 1.6%, பூடான் 2.5% மற்றும் தாய்லாந்து 2.9% செலவிடுவதாக 2018 தேசிய சுகாதாரப்பதிவு குறிப்பிட்டுள்ளது.

போதிய நிதி இல்லாதது, அரசு சேவைகள் அணுகலில் சிக்கல் மற்றும் தரமின்மை போன்றவை, பெரும்பாலான இந்தியர்களை தனியார் மருத்துவமனை பக்கம் திருப்பி விடுகிறது. எனவேதான், உலகளவில் தனியார் சுகாதாரத்திற்காக அதிகம் செலவிடுவதில் இந்தியர்கள் ஆறாவது இடத்தில் உள்ளனர்; இதனால் ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள் என, 2018 ஜூலையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

சுகாதாரத்திற்கான செலவினம்: என்.டி.ஏ 2 VS ஐ.மு.கூ.2

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2018 வரையில் சுகாதார செலவினங்கள் அதிகரித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில் சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை, 2010ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இருப்பினும் மொத்த அரசு செலவினத்தின் சுகாதார செலவினத்திற்கான பங்கை நாம் காணும் போது உண்மை தெளிவாகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 (UPA-2) அரசு காலத்தில் பட்ஜெட்டில் சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு, 2010 முதல் 2014 வரை சீராக அதிகரித்து வந்தது; 2010 அதிகபட்சமாக இருந்தது; 2012 மற்றும் 2014ல் ஒரு சரிவு காணப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி 2 (NDA-2) ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளாக மொத்த பட்ஜெட் நிதியில் 2%க்கும் மேலாக சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டது.

சுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு என்பது ஐ.மு.கூ. 2 -இல் 1.83% மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-ல் 1.99% என்றிருந்தது.

Source: Union budget (2010-11, 2011-12, 2012-13, 2013-14, 2014-15, 2015-16, 2016-17, 2017-18)
Note: *Revised estimate, **Budget estimate

2019 பட்ஜெட்டில் என்ன முன்னுரிமை தரப்பட வேண்டும்

இது தேர்தல் ஆண்டு என்பதால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வியக்கத்தக்க அளவில் உயரும். ‘தே.ஜ.கூ’ அரசின் ‘எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்.’ - MNREGS (வறுமையை போக்குவதற்காக ஐ.மு.கூ. அரசால் மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உத்தரவாதத் திட்டம் கொண்டு வரப்பட்டது) திட்டமாக இது இருக்கலாம் என்றார் குரியன். தற்போதுள்ள சுகாதார வளங்களை மறுசீரமைப்பதன் மூலம், புதிய முயற்சிகள் குறைந்தபட்சம் ஆதரிக்கப்படும்; முக்கிய பகுதிகளில், குறிப்பாக தேசிய சுகாதார இயக்கம் வழியாக நிதிகள் ஒதுக்கப்படலாம் என்றார் அவர்.

நிதி ஒதுக்குவதோடின்றி, மோடி கேர் திட்டம் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதில் போய் முடியுமோ என்ற அச்சமும் உள்ளது. 2018 நவம்பரில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் தனியார் மருத்துவமனைகளை அமைக்க, நில ஒதுக்கீடு, நிதியளித்தல் மற்றும் விரைவாக ஒப்புதல் அளித்தல் என்பதே அது என, 2019 ஜனவரியில் தி வயர் செய்தி வெளியிட்டிருந்தது.

இத்திட்டத்திற்கான பலனை, தேர்தலாண்டில் மத்திய அரசு அறுவடை செய்து கொள்ளுமோ என்று மாநிலங்கள் அஞ்சுகின்றன -- இத்திட்டத்தில் ஒடிசா, டெல்லி மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கையெழுத்திடவில்லை; நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியன 2019 ஜனவரியில் இதை புறந்தள்ளின.

“இத்திட்டத்தை மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஆரம்ப ஆண்டுகளில், அதிக ஆதார வளங்களை தர வேண்டும்; ஒரு சிக்கலான திட்டத்தை செயல்படுத்த மாநில அளவில் திறன் உருவாக்கப்பட வேண்டும்," என்று குரியன் கூறினார்.

இன்னொரு பிரச்சனை, 2018-19ல் ஏற்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் நல மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை -- திட்டத்தின் ஒருபகுதியாக தொற்றாத நோய்கள் உட்பட விரிவான முதன்மை பாதுகாப்பு வழங்குவதற்கானவை-- மாநிலங்கள் மீது, உதாரணமாக பொருளாதார ரீதியாக சிறப்பாக உள்ளவை மீது அதிக கவனம் செலுத்தவில்லை என்பதாகும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு முதலில் முன்னுரிமை தர வேண்டும் -- பின்னர் அதிக முன்னுரிமை மாவட்டங்கள், அதிகம் கவனிக்க வேண்டிய மாநிலங்கள், கவனம் தேவைப்படாத மாநிலங்கள் என்ற வரிசையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

ஐ.சி.டி.எஸ், கிராமப்புற, நகர்ப்புற தண்ணீர் மற்றும் துப்புரவு, காற்று மாசுபாடு, சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள், காசநோய் போன்ற நோய் தடுப்பு திட்டங்கள் ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு இரட்டிப்பாக இருக்க வேண்டும் என சுஜாதா ராவ் கூறினார். மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதா சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். "நீங்கள் எப்படி சுகாதார சேவை வரியை 18% என ஆக்கலாம்? அவர்கள் தங்களின் எல்லா சுமைகளையும் இந்த நோயாளிகள் மீது சுமத்துகின்றனர்; இதனால், மருத்துவம் பார்ப்பதற்கு அதிகம் செலவிட வேண்டி உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்களை வெளிநாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றுவதை நிறுத்த வேண்டும்; மோசமான சேவையுள்ள பகுதிகளுக்கு சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்; சிறு மற்றும் நடுத்தர லாப நோக்கற்ற மருத்துவமனைகளை ஆதரிக்க வேண்டும் என்று, அவர் மேலும் கூறினார்.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.