புதுடெல்லி: கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு இடையில் சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்கள் எட்டு மடங்கு உயர்ந்திருப்பதை, தேசிய குற்ற பதிவு பணியகம் - என்.சி.ஆர்.பி (NCRB) வெளியிட்ட சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. பதிவான குற்றங்களில் 70%, (பொது இடங்களில் புகைத்தல் மற்றும் புகையிலை பொருட்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துதல்) சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம்- 2003 இன் கீழ் உள்ளன; அவை, சிறியளவில் சுற்றுச்சூழல் தாக்கத்தையே கொண்டுள்ளதாக, நிபுணர்கள் தெரிவித்தனர்.

"இந்த தரவுகள் தவறானவை என்று நினைக்கிறேன்," என, சுற்றுச்சூழலியல் வழக்கறிஞரும், இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சட்ட நிறுவனமான என்விரோ சட்ட பாதுகாப்பு நிறுவனத்தை (ELDF) நிறுவிய சஞ்சய் உபாத்யாய், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "சுற்றுச்சூழல் குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன; ஆனால் சுற்றுச்சூழலில் தாக்கமில்லை என்கிறது இந்த தரவு" என்றார் அவர்.

கடந்த 2016இல், காவல்துறை 4,732 சுற்றுச்சூழல் குற்றங்களை பதிவு செய்தது; இது, 2017 இல் 790% உயர்ந்து 42,143 வழக்குகள் என்று இருந்தாக, ஒரு வருடம் தாமதமாக அக்டோபர் 21, 2019இல் வெளியான தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி.) சமீபத்திய குற்றத்தரவுகள் தெரிவித்தன. இதில், 29,659 வழக்குகள் புகையிலை சட்டத்தில் பதிவானவை.

உலகின் அதிக மாசடைந்த முதல் 20 நகரங்களில் 14ஐ கொண்டுள்ள இந்தியாவில், காற்று மற்றும் நீர் மாசுபாடு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வெறும் 36 வழங்குகளையே பதிவு செய்துள்ளனர்.

சுற்றுச்சூழல் குற்றங்களில், ஒலி மாசுபாடு என்ற புதிய பிரிவின் கீழ் காவல்துறை 8,400 வழக்குகளை (மொத்த வழக்குகளில் 20%) பதிவு செய்தனர். இவற்றில் சில அதாவது வனப்பகுதிக்கு அருகே அதிக ஓசை எழுப்பும் செயல்கள் போன்றவை சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடும்; எனினும் இவை, நகரத்திற்குள் உள்ள குற்றங்களுடனும் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த குற்றங்களின் விவரங்கள் குறித்து, வெளிப்படையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Environment-Related Offences In India
2016 2017
The Cigarette and Other Tobacco Products Act, 2003 NA 29659
Noise Pollution Acts (State/ Central) NA 8423
The Forest Act & The Forest Conservation Act, 1927 3715 3016
The Wildlife Protection Act, 1972 859 826
The Environmental (Protection) Act, 1986 122 171
The Air (1981) & The Water (Prevention & Control of Pollution) Act, 1974 36 36
The National Green Tribunal Act, 2010 NA 12
Environment & Pollution – Related Acts (Total) 4732 42143

Source: National Crime Record Bureau, 2017

புகையிலை சட்டத்தின் கீழ் குற்றங்கள்

சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் -2003, பொது இடங்களில் புகைபிடித்தல், புகையிலை பொருட்களின் விளம்பரத்தை தடை செய்கின்றன. இதுபோன்ற பொருட்களின் வர்த்தக விதிமுறைகளையும் அது ஒழுங்குபடுத்துகிறது.

இச்சட்டத்தின் கீழ் 29,659 வழக்குகள் பதிவான நிலையில், இதில் தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 20,640 வழக்குகள் அல்லது சுமார் 70% உள்ளன. அடுத்த இடத்தில் இருக்கும் கேரளாவில் 23% (6,743) வழக்குகள் பதிவாகின. (மாநில அளவிலான சுற்றுச்சூழல் குற்றங்கள் விவரங்களை அறிய, இங்கே கிளிக் செய்யவும்).

இந்த குற்றங்கள், புகையிலை பொருட்களின் பொட்டலம், பொது இடங்களில் புகைபிடித்தல் அல்லது புகையிலையை சட்டவிரோதமாக விற்பனை செய்தல், வனப்பகுதியில் கிடைக்கும் புகையிலை அல்லது டெண்டு இலைகளால் உற்பத்தி செய்யப்படும் பீடிகள் (கையால் சுருட்டப்பட்ட புகையிலை) விற்பனை ஆகியவற்றுடன் தொடர்புடையதா என்பதை தரவு குறிப்பிடவில்லை என்கிறார் உபாத்யாய். "அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கத்தை காட்ட, இந்த எண்ணிக்கை பிரித்து காட்டப்பட வேண்டும்" என்றார் அவர்.

காற்று, நீர் மாசுபாடு குற்றங்கள்

காற்று மற்றும் நீர் மாசுபாடு காரணத்திற்காக பதிவுசெய்யப்பட்ட 36 குற்றங்களும் தவறான தகவலாக இருப்பதை நிபுணர்கள் கண்டறிந்தனர்.

"இந்த எண்ணிக்கை முற்றிலும் சர்ச்சைக்குரியது" என்ற உபாத்யாய் "தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் [என்ஜிடி] 5,000 வழக்குகள் உள்ளன; அவற்றில் 80% காற்று மற்றும் நீர் மாசுபாடு சட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்" என்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம் மற்றும் பிற இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் தொடர்பான சட்ட உரிமைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட சிவில் வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம்-என்ஜிடி 2010இல் அமைக்கப்பட்டது.

என்.சி.ஆர்.பி அறிக்கையில் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுச்சூழல் தொடர்பான குற்றங்கள் இருப்பதற்கு ஒரு காரணம், அது சுற்றுச்சூழல் தொடர்பான குற்ற வழக்குகளை மட்டுமே பதிவு செய்கிறது; அதே நேரம் சுற்றுச்சூழல் வழக்குகளில் பெரும்பாலானவை சிவில் இயல்புடையவை என்று உபாத்யாய் விளக்கினார். சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்த தரவுகளை சேகரிக்கும் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை நிறுவனங்களிடம் இருந்தும் தரவுகளை பெற வேண்டும் என்றார் அவர்.

பழங்குடியினரை குறிவைக்கும் சட்டம்

இந்திய வனச்சட்டம், வன (பாதுகாப்பு) சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ஆகிய மூன்றின் கீழ் 3,842 சுற்றுச்சூழல் குற்றங்களை, காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இது 2017 இல் பதிவு செய்யப்பட்ட மொத்த சுற்றுச்சூழல் குற்றங்களில் 9% ஆகும்.

இந்த மூன்று சட்டங்களும் வளங்களை பிரித்தெடுப்பதை நிர்வகிக்கின்றன; பெரும்பாலும் மக்களை வனப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துதல், தேசிய பூங்காக்கள் மற்றும் புலி வசிப்பிடம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மனித நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்றன. இச்சட்டங்கள் பின்தங்கிய சமூகங்களை, குறிப்பாக பழங்குடியினரை நியாயமற்ற முறையில் தண்டிப்பதாக சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

“மாசு கட்டுப்பாட்டு சட்டங்களை செயல்படுத்தும் மாநில அதிகாரிகள் பெரும்பாலும், அவற்றை முழுமையாக புரிந்து கொள்வதில்லை” என்று மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் இணை பேராசிரியர் கீதன்ஜோய் சாஹு, 2018 ஜனவரியில் ஸ்க்ரோல்.இன் இணையதளத்தில் கட்டுரை எழுதி இருந்தார்.

"அதிக மாசு ஏற்படுத்தும் தொழில்துறையினர், சட்டவிரோத சுரங்கப்பணியில் ஈடுபடுவோரை, இச்சட்டங்கள் அரிதாகவே தண்டிக்கின்றன; அதேவேளையில், பெரும்பாலும் வாழ்வாதாரத்திற்காக இயற்கை வளங்களை மட்டுமே நம்பியுள்ள மலைவாழ் மக்கள் (பழங்குடி மக்கள்) போன்ற பின்தங்கிய சமூகங்களுக்கு எதிராக, சட்டத்தின் முழு பலத்தையும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்" என்று சாஹு எழுதியுள்ளார்.

பழங்குடியினருக்கு சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து புரியும்படி வனத்துறை நிர்வாகம் விளக்க வேண்டும் என்பதும், சாஹுவின் வாதமாகும்.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.