சண்டிகர்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் உள்ள ராஜமலை குக்கிராமத்தின் - இங்கு தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் உள்ளன - ஆறு நாட்கள் இடைவிடாத மழையின் முடிவில் பெரும் நிலச்சரிவு உண்டானது. ஆகஸ்ட் 6, 2020 அன்று பெய்த மழையால், மலைகளின் ஒரு பகுதியை நகர்ந்து சரியும் கட்டாயத்திற்கு ஆளானது. பெட்டிமுடி பள்ளத்தாக்கில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தகரத்தால் ஆன குடியிப்புகள் மீது கற்பாறைகள் மற்றும் குழம்புகள் நொறுங்கி விழுந்த நிலச்சரிவில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படுகிறது, குறிப்பாக இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஏற்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் காலநிலை நெருக்கடி ஆகிய ஆபத்தை அதிகரிக்க செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு, நிலச்சரிவுகளில் 264 இந்தியர்கள் இறந்ததாக, தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் 2019ன் தற்செயலான மரணங்கள் மற்றும் விபத்துகள் குறித்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 65% க்கும் அதிகமான இறப்புகள் இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிகழ்ந்தன.

எப்படியானாலும், விபத்துக்கள் ஒரு நிலச்சரிவின் உண்மையான தாக்கத்தை பிரதிபலிக்காது. மின்னல் போன்ற பிற இயற்கை பேரழிவுகளைப் போலல்லாமல், நிலச்சரிவுகளின் விளைவுகள் பல ஆண்டுகளாக நீடிக்கும் - அதாவது இடப்பெயர்வு, காடழிப்பு மற்றும் சொத்து, வயல்கள், சாலைகள் மற்றும் நீர் விநியோகங்களுக்கு பாதிப்பு என உள்ளூர் பொருளாதாரத்தில் ஒரு மோசமான விளைவைக் கொண்டிருக்கும். நிலச்சரிவுகளால் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ரூ.150-200 கோடி பண இழப்பை சந்திப்பதாக 2011 ஆம் ஆண்டின் மதிப்பீடு தெரிவிப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NIDM -என்ஐடிஎம்) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2018 மழைக்காலத்தில் மிக மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான கர்நாடகாவின் மலைப்பாங்கான குடகு மாவட்டத்தில் இரண்டாவது மொன்னங்கேரி கிராமத்தைச் சேர்ந்த தாஷ்மா முத்தப்பாவைப் போலவே, தப்பிப்பிழைத்தவர்களின் உணர்ச்சி எண்ணிக்கையில் அளவிட முடியாது.

முத்தப்பா, தான் தங்கியிருந்த நிவாரண முகாமில் இருந்து சொந்த கிராமத்திற்குத் திரும்பியபோது அங்கு தனது வீட்டின் ஒரு பக்க சுவர் மற்றும் அடித்தளத்தை மட்டுமே இருப்பதை கண்டார். அவரது குடும்பத்தினர், ரூ.25 லட்சம் செலவில் வீட்டைக் கட்டி ஒன்றரை வருடங்களே ஆகி இருந்தன. 15 நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது. “ஆகஸ்ட் 17, 2018 காலை, பெரிய பாறைகள் கீழ்நோக்கி உருண்டு செல்வதை நாங்கள் பார்த்தோம், தப்பி ஓடினோம்,” என்று, அந்த கோரத்தை அவர் நினைவு கூர்ந்தார். "நாங்கள் சுமார் 60 பேர் மலைகள் மற்றும் காடு வழியாக மலையேறி இரவில் ஒரு நிவாரண முகாமை அடைந்தோம். நிலச்சரிவால் சாலைகள் தடை செய்யப்பட்டன, மொபைல்போன் நெட்வொர்க்குகள் செயலிழந்தன” என்றார்.

சர்வதேச த்ரோபால் வீராங்கனையான 25 வயதான தாஷ்மா முத்தப்பா, அந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது வாங்கிய ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகைகள், அவரது பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களுடன் ரூ.50,000 ரொக்கமும் நழுவிச் சென்றன. அவரது கதை சமூக ஊடகங்களில் வைரலான பின், குடும்பத்தை ஆதரித்த கொடையாளர்களால் வாடகைக்கு செலுத்தவும், ஒரு வருடத்திற்கான பிற செலவுகளைச் சந்திக்கவும் அவரால் முடிந்தது.

மனித தலையீடு

நிலச்சரிவு என்பது பூகம்பங்கள் அல்லது அதிக மழை போன்ற இயற்கை காரணங்களால் தூண்டப்பட்ட பாறை, குப்பைகள் அல்லது நிலத்தின் மிகப்பெரிய நகர்வாகும். ஆனால் சாலைகள் அமைத்தல், கட்டிடங்கள் மற்றும் ரயில்வே கட்டுமானம், சுரங்கம், குவாரி மற்றும் நீர் மின் திட்டங்கள் போன்ற மனித நடவடிக்கைகள், மலை மற்றும் தாவரங்களை அகற்றுவதன் மூலமும், மண் மற்றும் சரளைகளை தளர்த்துவதன் மூலமும், மலைகள் நிலச்சரிவுக்கு ஆளாகி, மலைப்பாங்கான சரிவுகளை சேதப்படுத்துகின்றன மற்றும் இயற்கை வடிகால் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில், 420,000 சதுர கி.மீ அல்லது மொத்த நிலத்தில் 12.6% நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகல் ஆகும்.

கடந்த 2004-16 காலகட்டத்தில் மனிதனால் தூண்டப்பட்ட அபாயகரமான நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என, இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் 5,031 அபாயகரமான நிலச்சரிவுகளை பகுப்பாய்வு செய்த இந்த ஆய்வில், இந்தியா 829 நிலச்சரிவுகளில் சுமார் 10,900 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது மொத்த உலகளாவிய உயிரிழப்புகளில் 18% ஆகும்.

கட்டுமானத்தால் தூண்டப்பட்ட நிலச்சரிவு நிகழ்வுகளில் இந்தியா 28%, சீனா (9%), பாகிஸ்தான் (6%) ஆகியவை உள்ளன. மறுபுறம், மழையால் தூண்டப்பட்ட மொத்த நிலச்சரிவுகளில், 16% இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளது. இவற்றில் 77% மழைக்காலத்தில் ஏற்பட்டது. சுரங்கத்தால் தூண்டப்பட்ட அதிகபட்ச நிலச்சரிவுகளுக்கு இந்தியாவும் 12% காரணம், அடுத்து இந்தோனேசியா (11.7%), சீனா (10%) உள்ளன.

ஏப்ரல் 17, 2012 அன்று அதிகாலை 4 மணியளவில், இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் சாமேரா-III நீர் மின் திட்டத்தின் தலைமை சுரங்கப்பாதையில் இருந்து வெளிப்பட்ட நீர் கசிவு, சரிவுக்கு காரணமாகி சீர்குலைத்தது. மோகர் கிராமத்தில் தங்கியுள்ள சுமார் 40 குடும்பங்கள், நிலச்சரிவு அவர்களின் வீடுகளையும், சுமார் 100 பிக்ஹா (1 பிக்ஹா = 0.08 ஹெக்டேர்) மொட்டை மாடி பண்ணைகளையும் ஓரிரு மணி நேரத்திற்குள் சரிவதற்கு முன்பு, உயிர் பாதுகாப்பிற்காக போராடின.

"எங்களுக்கு ஒரு வருடத்திற்கு வீட்டு வாடகைக்கு பணம் வழங்கப்பட்டது, திட்ட ஆதரவாளர் எங்கள் நிலத்தை ஒரு பிக்ஹாவை ரூ .6.80 லட்சம் என்று வாங்கினார்" என்று மோகரின் முன்னாள் முக்கியஸ்தர் தேவி லால் கூறினார், இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்று எதிர்த்த 74 பேரில் இவரும் ஒருவர். இமயமலையில் நீர் மின் திட்டங்களுக்கு எதிராக ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர், இது போன்ற சம்பவங்கள் புவியியல் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு இடமளிக்க முடியாத அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதற்கு சான்றாகும்.

திட்டமிடப்படாத வளர்ச்சி, குறைபாடுள்ள விதிமுறைகள்

இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள எட்டு நகரங்களில் கட்டிட ஒழுங்குமுறைகளை ஆராய்ந்த ஒரு ஆய்வில், இந்த கட்டிட விதிமுறைகள் ஒரு குடியேற்றத்தின் குறிப்பிட்ட புவி-சுற்றுச்சூழல் சூழலுக்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. நிலப்பரப்பு இருப்பிடம், சாய்வு கோணம் மற்றும் திசை மற்றும் ஒரு தளத்தின் ஆபத்து திறன் ஆகியன அதே நிலத்திற்கான பயன்பாட்டு விதிமுறைகளுக்கு பொருந்தும்.

செப்டம்பர் 2019ல் என்ஐடிஎம் வெளியிட்ட தேசிய நிலச்சரிவு பேரிடர் மேலாண்மை உத்திகளும், இந்த ஒழுங்கின்மையை சுட்டிக்காட்டியது. இந்த விதிமுறைகள் "பெரும்பாலும் டெல்லி மாஸ்டர் பிளானில் இருந்து ஈர்க்கப்பட்டவை, அவை மலை நகரங்களின் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாது, ஏனெனில் டெல்லியின் புவி-சுற்றுச்சூழல் மற்றும் சமூக-வளர்ச்சி சூழல் மலை நகரங்களில் இருந்து வேறுபட்டது" என்று அது கூறியது. இமயமலைப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளூர் நில பயன்பாட்டுத் திட்டமிடல் அல்லது அதன் புதுப்பித்தல் இல்லாததால் “தவறான திட்டமிடல், திட்டமிடப்படாத வளர்ச்சி மற்றும் இறுதியில் உறுதியற்ற சரிவு தன்மை” ஏற்படுகிறது.

தீவிர வானிலை

காலநிலை நெருக்கடி காரணமாக தீவிரமான மழை போன்ற கடுமையான, கணிக்க முடியாத வானிலை நிகழ்வுகள் நாட்டில் நிலச்சரிவு சம்பவங்களுக்கு சிக்கலான மற்றொரு காரணத்தை சேர்க்கின்றன. உதாரணமாக, ஆகஸ்ட் 1-19, 2018 இல் கேரளாவில் இயல்பை விட 164% அதிக மழையை பெற்றது, இதன் விளைவாக கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் 498 பேரை பலி கொண்டது. 10 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 341 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. 143 நிலச்சரிவுகளை சந்தித்த இடுக்கி மாவட்டம் பெரும் நாசத்தை எதிர்கொண்டதாக கூறப்பட்டது. இது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழ்வாகக் கூறப்பட்டாலும், அடுத்த ஆண்டு தீவிர மழை நிகழ்வுகள் மீண்டும் மாநிலத்தைத் தாக்கியது, மற்றும் இந்த ஆண்டு - பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவு, அபாய மண்டலத்தில் கூட தாக்கத்தை எற்படுத்தவில்லை, காரணம் காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் இருந்து, அது தொலைதூர இடம் இருக்கிறது.

"காடுகள் துண்டிக்கப்படுதல் மற்றும் ஒரே வகை பயிர் சாகுபடியால் மண்ணின் தரம் மோசமாகி, பேரழிவிற்கு வித்திட்டிருக்கலாம், ஆனால் மிகப்பெரிய காரணம் மழையே," என்று, கேரளாவை சேர்ந்த ஸ்ரீ சங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் புவியியல் உதவி பேராசிரியர் சருன் சவித் கூறினார், இவர் கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் காலநிலை நெருக்கடி பாதிப்புக் குறியீட்டை உருவாக்கியுள்ளார். “கேரளாவில் பருவமழை முறை கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டது. மழை நாட்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், மழையின் அளவு அப்படியே உள்ளது, அதாவது அதிக தீவிர மழை பெய்து வருகிறது. ஜூன் மாதத்தில் அதிகபட்ச மழை பெய்யும் பகுதி, ஓணம் போன்ற கொண்டாட்டங்கள் நடக்கும் ஆகஸ்ட் மாதத்தில் வறண்டு இருகும். ஆனால் இப்போது, ​​ஆகஸ்ட் மாதத்தில் நிலத்தில் ஏற்கனவே நிறைந்த நிலையில், அதிகபட்ச மழையைப் பெறுகிறோம், இதனால் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

இந்தியாவில், நிலச்சரிவு பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் பலவும் மிகவும் அபாயகரமான நில அதிர்வு மண்டலங்களில் உள்ளன. எடுத்துக்காட்டாக, உத்தரகண்டின் பாதி மற்றும் முழு வடகிழக்கு பிராந்தியம் முழுவதும், மிகவும் நில அதிர்வு சரிவு உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள மண்டலம் Vல் உள்ளது.

நிலச்சரிவு பகுதிகளை அடையாளம் காண்பது சேதத்தை குறைக்கும்

முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளில் மேம்பாடு, கண்காணிப்பு மற்றும் எளிதில் வலயப்படுத்துதல் ஆகியன, நிலச்சரிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கும்.

இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI - ஜி.எஸ்.ஐ) நாட்டில் 420,000 சதுர கி.மீ நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியில், 85% க்கு 1: 50,000 அளவில் ஒரு தேசிய நிலச்சரிவு அபாயப்பகுதி வரைபடத்தை உருவாக்கியுள்ளது. மீதமுள்ளவற்றை அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிக்க முயற்சிக்கிறது. பேரிடரின் முனைப்புக்கு ஏற்ப அப்பகுதிகள், வெவ்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. (வரைபட அளவுகோல் ஒரு வரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் தரையில் தொடர்புடைய தூரத்திற்கும் இடையிலான விகிதத்தைக் குறிக்கிறது. 1: 50,000 அளவில், வரைபடத்தில் 1 செ.மீ தரையில் 0.5 கி.மீ. குறிக்கும்). அதிக அபாயகரமான பகுதிகளில் இன்னும் அதிக துல்லியத்தை வழங்கும் வரைபடங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த 1: 50,000 அளவிலான வரைபடங்கள் மலைப்பாங்கான / மலைப்பகுதிகளில் நில பயன்பாட்டை சீராக்க பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, அதிக நிலச்சரிவு வாய்ப்புள்ள பகுதிகளை பெரிய உள்கட்டமைப்பில் இருந்து காப்பாற்ற முடியும், ” என்று, ஜி.எஸ்.ஐ., ஜியோஹார்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை மையத்தின் நிலச்சரிவு ஆய்வுகள் பிரிவின் இயக்குனர் சாய்பால் கோஷ் கூறினார். "இது மனித தலையீடுகளால் பெரிதும் ஏற்படும் பல புதிய நிலச்சரிவுகளைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், ஒரு சம்பவம் நடந்தால் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களையும் குறைக்கும்" என்றார்.

எவ்வாறாயினும், வரைபடங்கள் உள்ளூர்மயமாக்கப்பட வேண்டும், அதுவே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கட்டிடத் திட்டங்கள் மற்றும் உள்ளூர் கட்டுமான நடவடிக்கைகளுக்கு உதவும் என்ற கோஷ், ஜி.எஸ்.ஐ அதன் மண்டல பணிகளை மேம்படுத்துவதில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

"அடுத்த ஐந்து ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்தோ அல்லது சாலை பராமரிப்பு அதிகாரிகளிடம் இருந்தோ பெறப்பட்ட கோரிக்கைகளின் பேரில் 1: 10,000 என்ற அளவில் 200 துறைகளையும், 1: 1,000 என்ற அளவில் 100 தளம் சார்ந்த நிலச்சரிவு விசாரணைகளையும் நாங்கள் உள்ளடக்குவோம்" என்று கோஷ் கூறினார். "இதற்கு ரிமோட் சென்சிங் தவிர தீவிரமான களப்பணி தேவைப்படுகிறது, எனவே அதிக நேரம் எடுக்கும்" என்றார்.

முன்கூட்டியே திட்டமிடல்

மிசோரமின் தலைநகரான ஐசால், மிக அதிக நில அதிர்வு மிகுந்த மண்டலம் V இல் உள்ளது, இந்த அம்சத்தில் மற்ற மலை நகரங்களை விட இது முன்னிலை வகிக்கிறது. கட்டுமான நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட 1: 5,000 அளவிலான பாதிப்பு வரைபடங்கள் மற்றும் புதிய விதிமுறைகளைப் பயன்படுத்தி நிலச்சரிவு செயல் திட்டத்தை இது உருவாக்கியுள்ளது.

"ஐசால், மிகவும் பலவீனமான மலைகளின் செங்குத்தான சரிவுகளில் கட்டப்பட்டுள்ளது. ஐஸ்வாலில் இருந்து 50 கி.மீ தூரத்தில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், சுமார் 1,000 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, 13,000 கட்டிடங்கள் இடிந்து விழும், சாலைகள் துண்டிப்பு மற்றும் அத்தியாவசியமான மின்சாரம், தண்ணீர் வினியோகம் பாதிக்கும் என்பதை காட்டும் பூகம்ப காட்சியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று, பேரிடர் நிர்வாகம் தொடர்பாக பணிபுரியும் இலாப நோக்கற்ற அமைப்பான ஜியோஹசார்ட்ஸ் இன்டர்நேஷனலில் தெற்காசியாவின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஹரி குமார் கூறினார். "நிலநடுக்கத்தின் உடனடி தாக்கத்தினால் சுமார் 25,000 பேர் இறக்க நேரிடலாம், சரியான நேரத்தில் மீட்கப்படாவிட்டால் அணுகலுக்கான பாதைகளும் தடைபடும்" என்றார்.

ஐசால் முனிசிபல் கார்ப்பரேஷன் (AMC- ஏஎம்சி) ஒரு நீண்டகால பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய நிலச்சரிவு கொள்கைக் குழுவை அமைத்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் 1: 5,000 அளவில் எளிதில் பாதிக்கக்கூடிய வரைபடங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டு, ஆபத்து மண்டலங்களை அடையாளம் காட்டினர்.

புதிய இட மேம்பாடு மற்றும் சரிவு மாற்ற விதிமுறைகள், விரைவில் நடைமுறைக்கு வரும். இந்த பைலாக்களின் கீழ், ஆபத்து-பேரிடர் மண்டலங்களில் எந்தவொரு தள மேம்பாட்டுக்கும் ஒரு புவியியலாளர் அல்லது புவி தொழில்நுட்ப பொறியியலாளர் மதிப்பீடு அளிக்கும் அறிக்கையில் இவை தேவைப்படும்: சரிவுகளின் மண் மற்றும் நிலைத்தன்மை; சுற்றுப்புறங்களில் முன்மொழியப்பட்ட கட்டுமானத்தின் சாத்தியமான விளைவுகள்; தேவைப்பட்டால், தக்கவைப்பு சுவர்கள் அல்லது முட்டுக்கொடுக்கும் சுவர்கள் போன்ற திருத்த நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள்; மற்றும் சரிவு உறுதிப்படுத்தல் போன்ற தணிப்பு நடவடிக்கைகள். கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர் இந்த அறிக்கையை, ஏ.எம்.சி-ன் புவியியல் ஆய்வு வாரியம் மதிப்பாய்வு செய்யும்.

"இதன் பொருள், அபாயகரமான முறையில் கட்டமைப்பதன் மூலம் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. நிலச்சரிவுகளுக்கு வாய்ப்புள்ள மிக ஆபத்தான ஆறு இடங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், தற்போது இந்த பகுதிகளின் நேரடி ஆய்வு நடைபெறுகிறது,”என்று ஏ.எம்.சி. நிர்வாகப் பொறியாளர் ஜோமிங்தங்கா கூறினார். "இந்த பகுதிகள் எதிர்காலத்தில் எந்தவொரு கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடைசெய்யப்படும். எங்கள் நீண்டகால திட்டம் 1: 500 அளவில் அக்கம் பக்க பாதிப்பு வரைபடங்களைத் தயாரிப்பதுடன், மேலும் அதிநவீன நிலச்சரிவு கண்காணிப்பு கருவிகளையும் கொண்டுள்ளது” என்றார்.

பல ஆண்டுகளாக சோகங்களை எதிர்கொண்ட பின்னர், கேரளா தனது மலைப்பாங்கான பகுதிகளில் பேரழிவு தடுக்கும் வளர்ச்சியை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது. நகராட்சி மற்றும் ஊராட்சி அளவில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு அபாய மண்டல வரைபடங்களைத் தயாரிப்பதற்கு ‘கேரளாவை மறுகட்டமைத்தல்’ என்ற செயல் திட்டம், அதிக முன்னுரிமை அளித்துள்ளது. சரிவு பாதுகாப்பு போன்ற தணிப்பு நடவடிக்கைகளுடன் நிலச்சரிவு மேலாண்மை உத்தி செயல்படுத்தப்படும் மற்றும் உள்ளூர் ஆபத்து முறைகளை கருத்தில் கொண்டு கட்டிட விதிகள் திருத்தப்படும் என்று செயல் திட்டம் கூறுகிறது.

ஆரம்ப எச்சரிக்கைக்கான கண்காணிப்பு

உள்ளூர் புவியியல் குறிகாட்டிகள் நிலச்சரிவுகளுக்கான எச்சரிக்கை அறிகுறிகளை வழங்குகின்றன. புதிய விரிசல், அசாதாரண புடைப்பு மற்றும் நில அழுத்தம் ; மரங்கள், தொலைத் தொடர்பு கம்பங்கள் அல்லது சுவர்களைத் தக்கவைத்தல்; அஸ்திவாரங்களில் இருந்து விலகிச் செல்லும் மண்; மேலும் அதிக மண்ணைக் கொண்ட நீரோடைகளில் நீர் ஓட்டம் திடீரென அதிகரிப்பது, அல்லது மழை பெய்யும்போது அல்லது மழை நின்று ஓட்டம் குறைவது நிலச்சரிவுகளைக் குறிக்கும்.

மழைப்பொழிவு ஒரு முக்கிய குறிகாட்டியாகும். டார்ஜிலிங் (மேற்கு வங்கம்) மற்றும் நீலகிரி (தமிழ்நாடு) மாவட்டங்களில், நிலச்சரிவு ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (LEWS) இல் ஜி.எஸ்.ஐ ஒரு பரிசோதனையை ஜூலை மாதம் தொடங்கியது, இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம். இந்த மாதிரி மழையின் அளவை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு நிலச்சரிவு ஏற்படும் முன்பு ஒரு சாய்வு வைத்திருக்கக்கூடிய மழையின் அளவு ஆகும், இது நிலச்சரிவு பாதிப்பு தரவுகளுடன் இணைந்து கடந்தகால ஒட்டுமொத்த மழை தரவுகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகிறது.

ஜி.எஸ்.ஐ முறையை பயன்படுத்தி, நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சுமார் 1,000 பேரை கடும் மழையின் போது ஆபத்தான இடங்களில் இருந்து வெளியேற்றியது. “இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD - ஐஎம்டி) மற்றும் ஜிஎஸ்ஐ ஆகிய இரண்டும் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் எங்களால் செயல்பட முடிந்தது. ஐஎம்டி எங்களுக்கு மாவட்ட வாரியான முன்னறிவிப்பை அளித்தாலும், ஜிஎஸ்ஐ அறிக்கைகளில் பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடிய ஒன்றியம் பற்றிய தகவல்கள் இருந்தன. இது, அப்பகுதிகளில் மட்டுமே திறனை மையப்படுத்த எங்களுக்கு உதவியது,” என்று மாவட்ட ஆட்சியர் ஜே. இன்னசென்ட் திவ்யா கூறினார். "ஆனால் எங்களுக்கு இன்னும் குறிப்பிட்ட தகவல்கள் தேவைப்படும், அதை மேம்படுத்தவும், மேக வெடிப்புகள் பற்றிய தகவல்களை சேர்க்கவும் இந்திய புவியியல் ஆய்வு மையத்திடம் கேட்டுள்ளோம், இது பெரும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும் கடந்தகால தரவை காட்டுகிறது" என்றார்.

மேகவெடிப்பு என்பது ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான மழையை உள்ளடக்கிய உள்ளூர் நிகழ்வு ஆகும். 2013 உத்தரகண்ட் வெள்ளம் மேக வெடிப்புகளால் ஏற்பட்டதாகும். “மேகவெடிப்பு குறித்த தரவை மாதிரியாக கொள்வது கடினம். தீவிர மழையை முன்கூட்டியே தெரிவிப்பதற்கான திறனை ஐஎம்டி அதிகரித்து வருகிறது, சில ஆண்டுகளில் நமக்கு இன்னும் துல்லியமான கணிப்புகள் இருக்கும் என்று நம்புகிறோம், ”என்று ஜி.எஸ்.ஐ.யின் கோஷ் கூறினார்.

நாடு முழுவதும் மேலும்மேலும் உள்ளூர்மயமாக்கப்பட்ட தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்படுவதால், வரும் ஆண்டுகளில் முன்னறிவிப்பு மேம்படும் என்று கோஷ் கூறினார். தானியங்கி வானிலை நிலையங்கள் வழக்கமான முன் அமைக்கப்பட்ட இடைவெளியில் தரவைப் பதிவு செய்து அவற்றை செயற்கைக்கோள் அல்லது மொபைல் நெட்வொர்க்குகள் மூலம் ஒரு மைய கட்டுப்பாட்டு அறைக்கு தானாக அனுப்பும். கையால் ஆன கண்காணிப்பு தேவையில்லை என்பதால் இவை தொலைதூர இடங்களில் நிறுவப்படலாம்.

இயக்கம் சார்ந்து, சென்சார்கள் மற்றும் மழை அளவீடுகள் மூலம் நிலச்சரிவுகளை கண்காணிக்க சில சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த அமைப்புகள் அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளை, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கின்றன. உதாரணமாக, கோயம்புத்தூரை சேர்ந்த அமிர்தா விஸ்வ வித்யாபீடம், மூணாறு (கேரளா) மற்றும் காங்டாக் (சிக்கிம்) ஆகிய இடங்களில் நிகழ்நேர நிலச்சரிவு கண்காணிப்பு மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளை அமைத்துள்ளது. பல சென்சார் அடிப்படையிலான அமைப்பு மழை ஊடுருவல், துளை நீர் அழுத்தம் (மண்ணுக்குள் நிலத்தடி நீரின் அழுத்தம்), அதிர்வுகள், இயக்கங்கள் மற்றும் சாய்வு உறுதியற்ற தன்மை ஆகியவற்றை பகுப்பாய்வு செய்கிறது.

சென்சார் அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியத்தில் குறைந்தபட்சம் ஆறு தளங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை பூமியில் ஆழமாக செருகப்படுகின்றன. எதிர்காலத்தில் நிலச்சரிவுகளை கணிக்க சென்சார்களிடம் இருந்து தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் 7, 2020 அன்று பேரிடருக்கு 13 மணி நேரத்திற்கு முன்பு, மூணாறில் நிலச்சரிவு ஏற்படும் என்று நாங்கள் கணித்திருந்தோம். இந்த எச்சரிக்கைகள் சென்சார்களிடம் இருந்து பெறப்பட்ட நிகழ்நேர தரவுகளின் அடிப்படையில் அமைந்தன, அவை மழைப்பொழிவு பாதுகாப்பு வரம்புகளைத் தாண்டிவிட்டன என்பதையும், துளை நீர் அழுத்தம் இதேபோல் பிராந்தியத்தின் பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலைகளுக்கு அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியது, ” என்று, அமிர்தா வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் பயன்பாடுகளுக்கான மைய இயக்குனர் மனீஷா சுதீர் கூறினார். "எங்கள் அமைப்பு பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட தளத்தில், இந்த சூழ்நிலை நிலச்சரிவு துவக்க நிலையை எட்டவில்லை, ஆனால் மண் அடுக்குகளின் பலவீனத்தை நாம் குறிக்க முடியும்" என்றார் அவர்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி), மண்டி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் 16 இடங்களில் மேற்பரப்பு அளவிலான இயக்க சென்சார் அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளையும் நிறுவியுள்ளது. வானிலை அளவுருக்கள், மண்ணின் ஈரப்பதம், மண்ணின் இயக்கம் மற்றும் மழையின் தீவிரத்தை சாதனம் சேகரிக்கிறது. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பூமியின் குறிப்பிடத்தக்க இடப்பெயர்வை சாதனம் கண்டறிந்தால், அது அதிகாரிகளை எச்சரிக்கிறது. 2018 ஆம் ஆண்டில், மண்டி-ஜோகிந்தர் நகர் நெடுஞ்சாலையில் வரவிருக்கும் நிலச்சரிவு குறித்து சென்சார்கள் அதிகாரிகளை வெற்றிகரமாக எச்சரித்தன. இது சாலையில் இருந்து வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் முன்பு திருப்பி அனுப்ப போலீசாருக்கு உதவியது.

"நாங்கள் இப்போது 10-12 மீட்டர் ஆழத்திற்குச் சென்று மேற்பரப்பு அமைப்பை சோதித்து வருகிறோம். இது மண்ணின் இயக்கத்தை மிக நெருக்கமாக கண்காணிக்க உதவும்” என்று ஐஐடி மண்டியின் இணை பேராசிரியர் வருண் தத் கூறினார். அதே நிறுவனத்தில் உதவி பேராசிரியரான கே.வி. உதயுடன், அவர் இந்த திட்டத்தை வழிநடத்துகிறார். "நாங்கள் உத்தரகண்டில் மண்டி, நஹான் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட நிறுவனங்களின் உத்தரவுகளுடன் வணிக வரிசைப்படுத்தலைத் தொடங்கினோம். தற்போது செயல்பாட்டில் உள்ள பணிகளுக்கு இந்திய ரயில்வே, நீர்ப்பாசனத் துறைகள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எங்களை அணுகியுள்ளனர்” என்றார்.

(மோத்கில், சண்டிகரை சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.