பிரம்மகிரி, பூரி மாவட்டம்: தலமலாவை தாண்டி எங்கும் செல்ல முடியாது. கிழக்கு ஒடிசாவில் பூரி மாவட்டத்தின் பிரம்மகிரி தொகுதியில் இது கடைசி கிராமமாகும், இது வங்காள விரிகுடாவிற்கும் சிலிக்கா ஏரிக்கும் இடையில் மணல் அள்ளப்படுகிறது.

கடந்த மே 3, 2019 அன்று ஃபனி புயல், தலமலா வழியாக, மணிக்கு 240 கிமீ வேகத்தில் கடந்த போது, அது 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட கிராமத்தை தரை மட்டமாக்கியது. 2 ஹெக்டேர் அல்லது அதற்கும் குறைவான சிறிய மற்றும் குறு நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் அழிந்து நாசமாகின.

ஆனால், 45 வயது ஸ்ரீதர் சேத்தி, அவரது மனைவிக்கு இழப்பதற்கு என்று நிலம் கூட இல்லை. அவர்கள் நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் இந்து சாதி வரிசைக்கு மிகவும் பின்தங்கிய சமூகத்தை (பட்டியலின சாதிகள்) சேர்ந்தவர்கள். இந்த ஜோடி முடங்கிக் கிடக்கிறது.

சேத்தி குடும்பம் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தது; குறைந்த தரம் வாய்ந்த பொருட்கள் மற்றும் கூரையால் ஆன ஒரு தற்காலிக அமைப்பாகும் இது. விவசாய தொழிலாளர்களான அவர்களின் குறைந்தபட்ச தினக்கூலி ரூ.375 க்கும் குறைவாக பெற்று, வேலை செய்கிறார்கள்.

"ஃபனி புயல் நேரத்தில் என்னிடம் பணம் இல்லை; எங்களுக்கு உணவு, தண்ணீர், தங்குமிடம் இல்லை" என்று சேத்தி கூறினார். இப்போது தனது குடும்பத்துடன் ஒரு தற்காலிக கூடாரத்தில் வசித்து வருகிறார். 1.6 கோடி மக்களை பாதித்த சூறாவளிக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாமில் அவர் தஞ்சம் புகுந்தார். மேலும் இது போன்ற - கிட்டத்தட்ட 15 லட்சம் மக்களின் மிகப் பெரிய வெளியேற்றத்திற்கும் இது வழிவகுத்தது.

இந்தியாவின் பட்டியலின சாதியினரில் பெரும்பான்மையானவர்கள், கிட்டத்தட்ட 16.6% அல்லது 20 கோடிக்கும் அதிகமானவர்கள், சேதி மற்றும் அவரை போன்றவர்களே. காலநிலை தொடர்பான பேரழிவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மட்டுமின்றி, அவர்களுடைய ஆபத்தான நிலை காரணமாக மீளக்கூடிய குறைந்தபட்ச திறனுடனுன் சமூகத்தின் விளிம்பில் உள்ளனர்.

ஸ்ரீதர் சேத்தி, நிலமற்ற தலித் விவசாயத் தொழிலாளி. ஃபனி சூறாவளியால் சிதைந்து போன குடிசையின் இடிபாடுகளுக்கு, அவர் குடும்பம் திரும்பியுள்ளது. "ஃபனி புயலின் போது என்னிடம் பணம், உணவு, தண்ணீர் அல்லது தங்குமிடம் இல்லை" என்றார் அவர்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் பூரி மாவட்டத்தின் கடலோர கிராமங்கள் முழுவதும் நாங்கள் மேற்கோண்ட விசாரணையில், சாதி அடிப்படையிலான தொழில்களில் ஒட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் மற்றும் கிராமத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ வேண்டிய அழுத்தம் போன்ற சமூக-பொருளாதார காரணிகளை இருப்பதை கண்டறிந்தோம். பேரிடர் நிவாரணத்தின் போதும் விளிம்பு நிலையில் உள்ள இந்த தொழிலாளர்களை ஓரங்கட்டப்படுகிறார்கள்.

"ஒரு பேரிடருக்கு முன்னும் பின்னும், அது வெளிப்படும் வழியைப் புரிந்து கொள்வது என்பது, சாதி அமைப்பு மிக முக்கியமானது" என்று லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேரிடர் நிர்வாக இணை பேராசிரியரும், உலகளாவிய தவிர்க்கக்கூடிய இறப்பு வலையமைப்பான அவாய்டபிள் டெத் நெட்ஒர்க் (Avoidable Death Network) நிறுவன தலைவருமான நிபிடிடா ரே-பென்னட் கூறுகிறார். இது, உலகளாவிய பேரிடர் இறப்புகளைக் குறைக்க அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பு."கிராமப்புற இந்தியாவில், ஒரு கிராமத்தின் புவியியல் மற்றும் சாதி அமைப்பு ஆகியவை கைகோர்த்துச் செல்கின்றன, சில சமயங்களில் சாதியின் அனுபவத்தை தீவிரப்படுத்துகின்றன" என்றார் அவர்.

கடலோர கிராமங்களில் உயர் மற்றும் நடுத்தர சாதியினர், உயரமான பகுதிகளிலும், சொந்த கான்கிரீட் வீடுகளிலும் வாழ்கின்றன. இது அவர்களுக்கு பேரிடரை சமாளிக்க உதவுகிறது என்பதை, ரே-பென்னட் 1999இல், கடலோர ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் தனது களப்பணியின் போது, 1999 சூப்பர் புயலுக்கு பிந்தைய நிகழ்வில் கண்டறிந்தார். இதற்கு நேர்மாறாக, தாழ்வான பகுதிகளில் கிராமப்புற விளிம்பில் வசிக்கும் பட்டியலின சாதி தினக்கூலிகள், பேரிடரில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான தருணமாகும்.

சாதியால் நிர்ணயிக்கப்பட்ட இத்தகைய கிராம புவியியல் அமைப்பு, மற்ற மாநிலங்களிலும் காணப்படுகிறது என்று ரே-பென்னட் கூறினார். "ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெவ்வேறு சாதிகள் வசிக்கும் விதம் தாக்கத்தை அதிகரிக்கிறது அல்லது பேரழிவின் தாக்கத்தை குறைக்கிறது," என்று அவர் விளக்கினார்.

பாதிப்பு எல்லோரும் சம அளவில் கிடையாது

எனவே, ஃபனி புயல் அழிவை ஏற்படுத்தியபோதும், எல்லோரும் ஒரே மாதிரியான பாதிப்பு உண்டாகவில்லிய. அனைவருக்கும் நிவாரண நடவடிக்கைகளுக்கான அணுகலும் ஒரே மாதிரி இல்லை.

மேலும், 2007 சென்குப்தா குழு அறிக்கை படி, கிட்டத்தட்ட 88% எஸ்.சி.க்கள் ஏழைகள் மற்றும் பல பரிமாண பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் விவசாய பொருளாதாரத்தின் அடிப்பகுதியில் சிக்கித் தவிக்கும் சேத்தி போன்ற தொழிலாளர்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தைக் கூட பாதுகாக்க இயலாதவர்கள் என்று அறிக்கை குறிப்பிட்டது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் 68வது சுற்று (2011-12) படி, வேறு எந்த சமூகக் குழுவையும் போல் அல்லாமல், பட்டியல் சாதியினரில் கிட்டத்தட்ட 63% பேர் கூலித் தொழிலாளர்கள் ஆக உள்ளனர்.

ஒரு பேரழிவு ஏற்பட்டால், அரசின் முதல் முன்னுரிமை இறப்புகளை தடுப்பது ஆகும். அதை தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதிகாரப்பூர்வமாக சேத்தி, காப்பாற்றப்பட்ட ஒரு வெற்றிக்கதைக்கானவராக பட்டியலிடப்படுவார்: அவரும், அவரது குடும்பத்தினரும் சரியான நேரத்தில் பேரிடர் பகுதியில் வெளியேற்றப்பட்டு, உலகளாவிய நிவாரணம் - 50 கிலோ அரிசி மற்றும் ரூ. 2,000 வழங்கப்பட்டது.

ஆனால் பேரழிவு அபாயக் குறைப்பு என்பது, வெறும் வெளியேற்றத்திற்கும் உடனடி நிவாரணத்திற்கும் அப்பால் நகர்ந்துள்ளது.

"தற்காலிக தங்குமிடம் வழங்குவது போன்ற விரைவான நிவாரணம் அரசால் விரும்பத்தக்கது மற்றும் விரும்பத்தக்கதாக கருதப்பட்டாலும், இது பேரிடர் அபாயக் குறைப்பின் சர்வதேச கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. இது அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நீண்டகால மீட்புக்கு அழைப்பு விடுகிறது" என்று ரெகவரி வித் டிக்னிட்டி இணைத் தலைவர் சாந்தினி சிங் கூறினார். இது, இந்தியன் ஹியூமன் செட்டில்மெண்ட்ஸ் நிறுவனம் (IIHS) மற்றும் இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் ஒரு திட்டமாகும்.

ஒடிசா, தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் பேரழிவுக்குப் பிந்தைய மீட்பு செயல்முறைகளை இந்த திட்டம் ஆராய்கிறது. சேதங்களின் அளவை மதிப்பிடுவது மற்றும் நிவாரணம் வழங்குவது முதல் படியாகும். மேலும் இது பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் கண்டு கொள்வதோடு, தற்போதுள்ள மற்றும் வெளிவரும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் நீண்டகால மறுவாழ்வை வழங்குவதையும் பின்பற்ற வேண்டும் என்று சிங் விளக்கினார்.

நிவாரணப் பொருள் குறைந்து வருகிறது; வேலைகள் இல்லை, மின்சாரம் இல்லை

இந்தியா ஸ்பெண்ட் பார்வையிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதை காண முடிந்தது. ஃபனி புயல் தேங்காய், வாழைப்பழம் மற்றும் நெல் வயல்கள் முற்றிலுமாக அழித்து, நீர்வழங்கலை மாசுபடுத்தியது. சூறாவளியை தொடர்ந்து வந்த வெப்பஅலை, மோசமான பருவமழையின் கணிப்புகள் மற்றும் இரண்டு மாத மின்வெட்டு ஆகியன, ஃபனி புயலின் துன்பங்களை மேலும் அதிகரித்தன.

இந்தியாவில் கிட்டத்தட்ட 86.2% விவசாயிகள் சிறு மற்றும் குறு வகையைச் சேர்ந்தவர்கள், ஆனால் பயிர் பரப்பளவில் வெறும் 47.3% மட்டுமே உள்ளனர் என்று 10வது விவசாய கணக்கெடுப்பு (2015-16) தெரிவித்துள்ளது. சாகுபடி செய்யக்கூடிய நிலத்தில் 9% மட்டுமே தலித்துகளுக்கு சொந்தமானது, அதில் 61% 2 ஹெக்டேரை விட சிறியது.

கடற்கரைக்கு அருகில் உள்ள ரெபனா நுவாகானில் உள்ள போய் குடும்பத்தினர் ஃபானியிடமிருந்து மீள முடியாமல் இன்னமும் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமத்தில், குடிசை மற்றும் பகுதி சேதமான நிரந்தர குடிசைகள் விவசாயத் தொழிலாளர்கள், பணிபுரியும் குடும்பங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. புக்கா வீடுகள் அண்டை அடுக்குகளில் இருந்து உயர்கின்றன.

38 வயதான சிவா போயின் குடிசை - மற்றும் அதில் இருந்த உணவு தானியங்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் - ஃபனி புயலால் அழிந்து போயின. அவரது குடும்பத்தின் ஆறு உறுப்பினர்களும் இடிபாடுகளுடன் காணப்படும் தங்களது குடிசைக்கு திரும்பியுள்ளனர். போய் இப்போது எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறார் - சூறாவளி காரணமாக பயிர்கள் நாசமாகிவிட்டன. நிவாரணப் பொருட்களாக வந்த 50 கிலோ அரிசியும் வேகமாக தீர்ந்து கொண்டிருந்தது. "இது இன்னும் 10 நாட்கள் வரை தான் நீடிக்கலாம்" என்று போய் கூறினார்.

தினசரி கூலி வேலை எதுவும் கிடைக்காத லையில், இந்த விவசாயிகள் ஒரு இந்த ஆண்டின் பருவமழை தங்களது தாழ்வான விவசாய நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்காது; ஆமால், அவற்றை மேலும் இழப்புக்கு தள்ளும் என்று நம்புகிறார்கள்.

‘தங்குமிடத்தை பட்டிலின சாதியினருடன் பகிர்ந்து கொள்ளாத உயர் சாதியினர்’

பாதிப்பு மற்றும் சாதி-பாகுபாடு ஆகியன முன்பே இருக்கும் நிலையில், பேரழிவுகளின் போது முறையான மற்றும் சமூக விலக்கு என பெரிதாக்கப்படுவதாக, தேசிய தலித் வாட்ச் -என்.டி.டபிள்யூ (NDW) நடத்திய 2011 ஆய்வில் கூறப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் உதவியை அணுகும் போது, சாதி அடிப்படையிலான பாகுபாடு இருப்பதை அது ஆவணப்படுத்தி இருக்கிறது.

இதேபோன்ற நிலை, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் நடந்துள்ளது. காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியில், காவிரி உட்பட கிட்டத்தட்ட 32 ஆறுகள் வங்காள விரிகுடாவில் கலப்பதற்கு முன்பு, இந்த மாவட்டத்தை கடக்கிறது. மாவட்ட தலைநகரில் இருந்து தென்மேற்கே 45 கி.மீ தொலைவில் செட்டிபுல்லத்தை சுற்றியுள்ள தரிசு நிலப்பரப்பானது, அதன் வடக்கு கிராமங்களில் உள்ள பெரிய பசுமையான வயல்களுடன் வேறுபட்டு நிற்கிறது.

கஜா புயல், 2018 நவம்பரில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் இப்பகுதியை கரை கடந்தது. அந்த இடம், 20 கி.மீ தூரத்தில், 35 வயது பிர்லா தங்கதுரை வசிக்கும் இடமாக இருந்தது.

கஜா புயல், 2018 நவம்பரில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தை தாக்கிய சில வாரங்களுக்கு பிறகு, திருப்பூண்டி மேற்கு பகுதியில், கோயில் நிலத்தில் வசிக்கும் தலித் குடும்பம் வீட்டிற்கு திரும்பியது. வழக்கமாக கிராமத்திற்கு வெளியே கட்டப்படும் இவர்களின் குடியிருப்புகள், புயல் சேதத்தின் போது அதிக சேதத்திற்கு உள்ளாகின்றன.

"புயலின் போது முதல்நாளில் எங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது; அதனால், யாரும் சாதிகளைப் பார்க்கவில்லை" என்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் எஸ்சி / எஸ்டி கண்காணிப்பு குழு வாரிய உறுப்பினரான தங்கதுரை நினைவு கூர்ந்தார். "ஆனால் உயிருக்கு பிரச்சனை இல்லை என்று தெரிந்ததும், சாதி பிரச்சினைகள் வெடித்தன" என்றார்.

அவரது சக கிராமவாசிகளும், விவசாயத் தொழிலாளர்கள் அல்லது கூலி வேலை பார்ப்பவர்கள். "நிவாரணப் பொருட்கள் பிரதான சாலைகள் வழியாக வந்தன, எங்களைப் போன்ற ஒதுக்குப்புற பகுதிகளில் இருப்பவர்களுக்கு அதை பெற முடியவில்லை," என்று அவர் கூறினார். "நீங்கள் எங்கள் கிராமத்தை அடைவதற்கு முன்பே, பல உயர் சாதியினர் உள்ள கிராமங்களை கடந்தாக வேண்டும். நிவாரணத்தின் பார்வையை, சாதி குருடாக்குகிறது. ஆனால் உள்ளூர் நிலைமை இல்லை” என்றார்.

கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த வாகனங்களை மிகுந்த பாதுகாப்போடு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஏனெனில் வழியில் வாழும் அதிக சக்திவாய்ந்த சமூகத்தினர், வாகனங்களை நிறுத்தி பொருட்களை எடுத்துச் செல்லாம் என்ற அச்சம் தான் என தங்காதுரை நினைவு கூர்ந்தார்.

தங்கதுரையின் அனுபவத்தை உணரும் போது, காவிரி டெல்டா பற்றிய கல்வியாளர்கள் எம்.என். சீனிவாஸ், கேத்லீன் கோஃப் மற்றும் ஆண்ட்ரே பெட்டில் போன்ற கல்வியாளர்கள் கண்டுபிடிப்பு நினைவுக்கு வருகிறது: பட்டியலின சாதியினர் கிராமத்தின் பிரதான பகுதிக்கு வெளியே கூட்டமாக சிறிய வீடுகளின் வாழ்கின்றனர். அதே நேரம், மேல் மற்றும் நடுத்தர சாதியின மக்கள் - பெரும்பாலும் வளமான விவசாய பண்ணைகள் வைத்திருப்பவர்கள் - பிரதான சாலைகளுக்கு அருகே, விசாலமான வீட்டில் வாழ்கின்றனர்.

"புயலால் உயிருக்கு பிரச்சனை இல்லை என்று தெரிந்ததும், சாதி பிரச்சினைகள் வெடித்தன" என்று, நாகை கலெக்டர் அலுவலக எஸ்சி/எஸ்டி கண்காணிப்பு வாரியக்குழு உறுப்பினர் தங்கதுரை கூறினார். நிவாரணப் பொருள் வாகனங்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டன. இதனால் வழியில் வசிக்கும் சக்திவாய்ந்த சமூகங்கள், அதனை தடுக்க முடியாது.

ஃபனி மற்றும் கஜா புயலுக்கு பிந்தைய சில வாரங்களில், புயல் நிவாரண முகாம்களில் யாருக்கு முதலில் உதவிப் பொருட்களை வழங்குவது என்பதில் என்பதில் சாதி பாகுபாடு விவகாரம் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நாகப்பட்டினம் மாவட்டம் பெரியத்துகை கிராம நிர்வாக அதிகாரி கவியரசி, நிவாரண முகாம்களில் சாதி பிரச்சினைகளை கவனமாக கையாள வேண்டி இருந்தது. பெரும்பாலான கிராமவாசிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆனால் சுமார் 3% பேர் பட்டியலின விவசாயத் தொழிலாளர்கள். பெரியதுகை கிராமத்தின் வெளிப்புறத்தில் தலித்துகள் வாழ்கிறார்கள். கவியரசியின் அலுவலகம் தவிர வேறு எந்த பொது இடங்களுக்கும் அவர்கள் செல்ல முடியாது. பேரிடரானது உயர் மற்றும் பட்டியலின சாதியினரை நிவாரண முகாமில் ஒன்று சேர்க்க நிர்ப்பந்தம் செய்தாலும், அவர்களது பிளவு மறைந்துவிடவில்லை.

"உயர் சாதியினர், பட்டியலின மக்களுடன் நிவாரண முகாம்களை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை" என்பதை கவியரசி நினைவு கூர்ந்தார். "நாங்கள் இரு குழுக்களையும் வெவ்வேறு தளங்களில் வைக்க வேண்டியிருந்தது, உணவு தனித்தனியாக சமைக்கப்பட்டது" என்றார் அவர்.

ஓரங்கட்டலின் பல வடிவங்கள் - சமூகம், இடம் சார்ந்து (கிராமத்தின் சுற்றுவட்டாரங்களில் வசிப்பது), தொழில் (கழிவு அள்ளுதல், தினசரி கூலித் தொழிலாளர்கள்) - உள்ளன. மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், இயற்கை பேரிடராக இருந்தாலும் சரி, மிகவும் பாதிக்கப்படக்கூடிய தலித்துகள் என்று, சர்வதேச தலித் ஒற்றுமை வலையமைப்பு சார்ந்த, ஈக்வலிட்டி இன் எய்ட்- 2014 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தகவல்,பொதுக் கல்வி, பேரிடர் மீளக்கூடிய உள்கட்டமைப்பு அல்லது உடனடி நடவடிக்கைக்கு தகவல் தொடர்பு போன்றவற்றுக்கான அணுகல் அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.

மீண்டும் மீண்டும் புயல்; கடலோரப்பகுதிகள் மோசமான பாதிப்பு

ஏறக்குறைய 17% இந்தியர்கள் 7,500 கிமீ நீளமுள்ள கடற்கரை பகுதியில் வாழ்கின்றனர். இப்பகுதியானது, உலகின் வெப்பமண்டல சூறாவளிகளில் 10% பெறுகிறது மற்றும் ஆண்டுதோறும் இரண்டு முதல் மூன்று கடுமையான புயலின் தாக்குதல்களால் பாதிக்கப்படுகிறது. ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டிலும் மக்கள் தொகையில் முறையே பட்டியலினத்தவர்கள் 17% மற்றும் 20% அல்லது 2011 நிலவரப்படி 21.6 லட்சம் பேர். அவர்கள், மீண்டும் மீண்டும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1891 மற்றும் 2002ஆம் ஆண்டுக்கு இடையில், 98 புயல்கள் ஒடிசாவில் கரை கடந்துள்ளன. இது, எந்தவொரு இந்திய மாநிலமும் எதிர்கொள்ளாதது. தமிழ்நாட்டில் 54 புயல்கள் கரை கடந்துள்ளன. 1980 முதல் 2000 வரை இந்தியாவில் சுமார் 370 மில்லியன் மக்கள் சூறாவளிக்கு ஆளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புவி வெப்பமடைகையில், வெப்பமண்டல சூறாவளிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடும் சூறாவளிகளின் ஒட்டுமொத்தமாக, குறிப்பாக வட இந்தியப் பெருங்கடலில் (வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலை உள்ளடக்கியது) அதிகரித்துள்ளது என்று 2018 இன்டர்-கவர்னமென்டல் பேனலின், 1.5 டிகிரி செல்சியஸ் புவி வெப்பமடைதல் குறித்த காலநிலை மாற்றத்தின் சிறப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

கணிப்புகளில் கடலோர வெள்ளம், புயல் எழுச்சி மற்றும் இந்தியாவின் கடற்கரை கடல் மட்ட உயர்வு ஆகியன அடங்கும். இது, பல லட்சம் மக்களை பாதிக்கிறது. வங்காள விரிகுடா கடலோர மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகியன, புயலால் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்று 2016 தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் (என்.டி.எம்.பி) அறிக்கை தெரிவித்துள்ளது.

‘பேரிடர் மேலாண்மை பாதிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும்’

இந்தியாவின் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, என்.டி.எம்.பி மற்றும் ஒடிசாவின் நிவாரணக் குறியீடு மற்றும் சமீபத்திய எச்சரிக்கை முறைகள் போன்ற இந்திய வானிலை ஆய்வுத்துறை சமீபத்தில் செய்த முன்னோடி பணிகள், சிறந்த நடவடிக்கைகளே. ஆனால் இந்தியாவில் பேரழிவு மேலாண்மை அமைப்பு இன்னும் செயல்திறன் மிக்கதாக இருக்கிறது என்கிறார் ரே-பென்னட். ஆனால் ஒரு குறைபாடு உள்ளது.

"சாதி, வர்க்கம் மற்றும் பாலின அளவுகோல்கள் சட்டம் மற்றும் நிவாரணக் குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன; ஆனால் அவை பெரும்பாலும் சொல்லாட்சியாகவே இருக்கின்றன," என்று அவர் கூறினார். "நாங்கள் வேறுபட்ட பாதிப்புகளுக்கு அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இந்திய சமுதாயத்தின் மிகவும் சிக்கலான சமூகவியல் கூறுகளை அறிய, பேரழிவு மேலாண்மை அமைப்புகளும் மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் ஆழமாகச் சென்று இந்தியாவின் கிராமங்கள் மற்றும் மாவட்ட நகரங்களில் பேரழிவு-நெகிழக்கூடிய நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அன்றாட பேரிடர் மேலாண்மை நடைமுறைகளின் இதயத்திற்கு கொண்டு வர வேண்டும்”. என்றார்.

கடந்த 2004 சுனாமிக்கு பிறகு, பட்டியலின பழங்குடியினரின் குழந்தைகளுக்காக, வானவில் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை, பிரேமா ரேவதி நடத்தி வருகிறார். மேலும் நிவாரணப் பணிகளில் சாதி பாகுபாடு குறித்து எவ்வளவு விழிப்புணர்வு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

"நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் கொஞ்சம் பணம் அல்லது பொருளை நன்கொடையாக அளித்ததாக நினைக்கிறார்கள்," என்று ரேவதி கூறினார். "ஆனால் ஒரு பேரழிவுக்கு பிறகு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுவது உண்மையில் சாதி அமைப்பின் செயல்பாடாகும். சில சமயங்களில் வினியோகம் நன்கு இணைக்கப்படாவிட்டால், தகுதியானவர்களைக் கூட அது சென்றடையாது” என்றார்.

நிவாரணத்தில் வசதி படைத்தவர்களுக்கு முன்னுரிமை தருவது ஏழைகளுக்கு ஆபத்தானது

காலநிலை மாற்றத்தின் வளர்ந்து வரும் நிலைகள் வறுமையில் உள்ளவர்களுக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐ.நா.வின் சமீபத்திய காலநிலை மாற்றம் மற்றும் வறுமை என்ற தலைப்பிலான சிறப்பு அறிக்கைகூறியுள்ளது. 2017 ஆம் ஆண்டில், 1.88 கோடி மக்கள் - இது, போர்களால் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு; மற்றும் வளரும் நாடுகளின் பெரும்பான்மையானவர்கள் - 135 நாடுகளில் ஏற்பட்ட பேரிடரால் இடம் பெயர்ந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. பாதுகாப்பில் செல்வந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்த வரலாறு, வறுமையில் வாடும் மக்களை மேலும் ஆபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

"காலநிலை மாற்றம் என்பது மற்றவற்றுடன், ஏழைகள் மீதான ஒரு தடையற்ற தாக்குதலாகும்" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஐ.நா. உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேரழிவு அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பு 2015-2030, புதிய பேரழிவு அபாயங்களைத் தடுக்கவும், ஏற்கனவே உள்ளவற்றைக் குறைக்கவும் ஏழு தெளிவான இலக்குகளையும் நான்கு முன்னுரிமைகளையும் வகுக்கிறது. இது பல மட்டங்களில் பேரழிவு நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் பேரழிவு அபாயத்தை அதன் அனைத்து பரிமாணங்களிலும் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால் பேரழிவுகளின் போது அனுபவங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படையான சாதி போன்ற இந்திய சமுதாயத்தின் அம்சங்கள் எந்த சர்வதேச கட்டமைப்பிலும் கொள்கையிலும் குறிப்பிடப்படவில்லை.

யார் தகுதியானவர் என்பதை எவ்வாறு தீர்மானிப்பது

"நாங்கள் 10 லட்சம் மக்களை வெளியேற்றலாம் மற்றும் எந்த நேரத்திலும் அவர்களை கவனித்துக் கொள்ள முடியும்" என்று ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ஓ.எஸ்.டி.எம்.ஏ) நிர்வாக இயக்குனர் பிஷ்ணுபாதா சேத்தி கூறினார். “அதுதான் நல்ல நிர்வாகம். 1999 முதல் (ஒடிசாவில் சூப்பர் புயல் 10,000 பேரை பலி கொண்ட போது) - இத்தகைய பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது, எங்களால் உயிர்களைக் காப்பாற்ற முடியும்” என்றார்.

இந்த முன்னேற்றத்தின் திருப்புமுனை, இரண்டு பெரிய பேரழிவுகள்- சூப்பர் புயல் மற்றும் சுனாமிக்கு- பிறகு வந்தது என்று சிங் கூறுகிறார். ஆனால் பேரழிவு அபாயக் குறைப்புக்கு நீண்டகால தாக்கங்களுக்கான தயாரிப்பு தேவை, உளவியல் பாதிப்புகள் மற்றும் அதிர்ச்சியைக் கையாள்வதற்கான வழிமுறைகள் மற்றும் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை புனரமைத்தல் போன்றவையும் உள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியகரையில் உள்ள தலித் கிராமவாசிகள், தங்கள் பிரச்சனையை அரசிடம் தெரிவிக்குமாறு நிவாரணப் பணியாளர்களை கேட்டுக்கொண்ட காட்சி. நிவாரணப் பணிகள் சாதிகளை வேறுபடுத்துவதில்லை என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள், ஆனால் சமூக சிக்கல்களை புறக்கணிக்க முடியாது என்பதாகும்.

"பாதிப்பு எல்லோருக்கும் இருக்கும் போது, யார் மிகவும் தகுதியானவர் என்று நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?" என்று சிங் கேட்டார். இது பல அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகளிடம் அவர் கேட்ட கேள்வி. சாதி போன்ற ஏற்கனவே இருக்கும் பாதிப்புகளின் அடிப்படையில், பெரும்பாலும் நிவாரணம் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்பதையும் கண்டறிந்துள்ளார். இத்தகைய உலகளாவிய பாதுகாப்பு, விரைவான நிவாரணம் மற்றும் பரந்த பாதுகாப்பு ஆகியவற்றை அனுமதிக்கும் அதே வேளையில், இது பெரும்பாலும் வேறுபட்ட பாதிப்புகளையும், மோசமாக பாதிக்கப்படுபவர்கள் அல்லது மெதுவாக மீட்கப்படுபவர்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தக்கூடும்.

“பேரிடர் நிவாரணப் பணியின் போது சிறுபான்மையினர், பெரும்பான்மையினர், பணக்காரர்கள் அல்லது ஏழைகள் என்றெல்லாம் நாங்கள் சிந்திக்க மாட்டோம்” என்று ஒ.எஸ்.டி.எம்.ஏ.- இன் மாநில திட்ட அலுவலர் லக்ஷ்மிநாராயண் நாயக் கூறினார். "மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் நிவாரணத்திற்கு தகுதியானவர்கள்" என்றார் அவர்.

உதாரணமாக, ஒடிசாவின் கட்டாய நிவாரண ஒதுக்கீடான 50 கிலோ அரிசி மற்றும் ரூ. 2,000, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டது. இந்த கணக்கீடுகளில் சாதி வெளிப்படையாக சேர்க்கப்படவில்லை; ஆனால் கொள்கைகள், மறைமுகமாக விளிம்பு நிலை சாதிகளின் தேவைகளை கவனத்தில் கொண்டுள்ளனஎன்றார்.

ஆனால் சாதி கட்டமைப்புகளை புறக்கணிப்பது மற்றும் பேரழிவு நிவாரணத்தில் அதன் தாக்கம் தவிர்க்க முடியாதது, தலித்துகளின் பாகுபாடு மற்றும் விலக்கிற்கு வழிவகுக்கிறது, 2011 என்.டி.டபிள்யு. அறிக்கை குறிப்பிட்டது.

"சமீபத்திய புயல்களில் இருந்து நாம் எடுத்துக்கொள்வது என்னவென்றால், நிலமற்ற மற்றும் சொத்து இல்லாத உழைப்பாளர்களின் மறுவாழ்வு அல்லது நிவாரண மதிப்பீட்டை திறம்பட அல்லது போதுமான அளவில் கையாள்வதில் அரசின் பங்கு போதுமானதாக இல்லை" என்று, காணிநிலம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ராதிகா கணேஷ் கூறினார். இவர், கஜா புயலுக்கு பின்னர் உடனடியாக 13 கிராமங்களில் 2,700 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிவாரணத் தேவைகளை, முக்கியமாக நிலமற்ற தொழிலாளர்களை வெளிக்காட்டிய ஒரு அறிக்கையின் இணை ஆசிரியர். சிறு மற்றும் குறு விவசாயிகளையும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும், பேரிடருக்கு பிந்தைய பணிகளில் சேர்ப்பது, அவர்களில் பலருக்கு உடனடி வருமானத்தை வழங்குவதற்கான ஒரு முக்கிய வழியாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தலமலாவில், சேதங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன; ஆனால் அரசிடம் இருந்து எந்த உதவியும் வரவில்லை. கிராமவாசிகளுக்கு மத்தியில், நிவாரணத்திற்காக சேத்தி நிற்கிறார், கிட்டத்தட்ட அதில் அனைத்து உயர் சாதி ஆண்களும் உள்ளனர். புவனேஷ்வரை தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டு மையம் அவருக்கு புயல் எதிர்ப்பு வீட்டை கட்டித்தரும். சில கிராமவாசிகள் பொறாமைப்படுகிறார்கள், இதைப் பற்றி அவதூறு செய்கிறார்கள். ஆனால் புதிய வீடு தயாராகும் வரை, சேத்தியும் அவரது குடும்பத்தினரும் ஒரு தற்காலிக கூடாரத்தில் தங்கி, உயிர்வாழ்வார்கள் என்று நம்பலாம். அவர்களுக்கு அன்றாட வருவாயை தவிர வேறு எந்த வளமும் இல்லை.

இன்டர்நியூஸ் எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க் ஆதரவுட, இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

(ஜெயின், பெங்களூருவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.