சண்டிகர்: பொது சுகாதாரத்துறையில் மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை, இந்தியாவின் கோவிட் -19 கட்டுப்படுத்தும் உத்திகளுக்கு ஒரு தடையாக உள்ளது. பிற பிரச்சினைகளுக்கு இடையில், போதிய சுகாதாரப்பணியாளர்கள் இல்லதது நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது, குறிப்பாக அரசு சுகாதார மையங்களில் அதிகச்சுமை மற்றும் குறைவான பணியாளர்கள் என்ற நிலை நீடிக்கிறது.

இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதற்கான ஒரு காரணம், மருத்துவக்கல்விக்கு மிகவும் அதிக தொகை கொடுக்க வேண்டியிருந்தது, அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளவர்கள் நாட்டில் உள்ள தனியார் சுகாதார மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்புகிறார்கள் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகிறார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அதிகரித்து வரும் கட்டணம் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையில் சுகாதார சேவை சமத்துவமின்மையை உருவாக்கும் அதே வேளையில் ஏழைகளாக உள்ள தகுதியான மாணவர்களை வெளியே வைத்திருக்கிறது.

கடந்த 2019-20ம் ஆண்டில் பஞ்சாப் அரசின் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். (Bachelor of Medicine and Bachelor of Surgery) கட்டணத்தை 78% (முன்பு ரூ .4.4 லட்சத்தில் இருந்து ரூ. 7.81 லட்சமாக) உயர்த்திய பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நாங்கள் இக்கட்டுரையை வழங்குகிறோம். பஞ்சாபின் கட்டண அமைப்பு நாட்டிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும் என்பது, இந்திய மருத்துவக்கவுன்சில் (எம்.சி.ஐ) இணையதளத்தை தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிகிறது.

நாட்டில் மிக அதிக கட்டணம் கொண்ட பஞ்சாப் அரசு மருத்துவக்கல்லூரிகள்

பஞ்சாப்பில் மே 27, 2020 அன்று, அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணம் 78% உயர்த்தப்பட்டது; அதாவது முன்பு ரூ.4.4 லட்சத்தில் இருந்து அடுத்த கல்வியாண்டில் ரூ.7.81 லட்சமாக உயர்த்தப்பட்டது. நான்கரை ஆண்டு படிப்புக்கான திருத்தப்பட்ட கட்டணம் இவ்வாறு பிரிக்கப்படும்: முதல் ஆண்டு ரூ.1.5 லட்சம், இரண்டாம் ஆண்டு ரூ. 1.65 லட்சம், மூன்றாம் ஆண்டு ரூ. 1.80 லட்சம் மற்றும் நான்காம் ஆண்டு ரூ. 1.95 லட்சம், இறுதி ஆறு மாதங்களுக்கு ரூ.91,000 ஆகும். சூழலுக்கு, பஞ்சாபின் தனிநபர் வருமானம் தற்போது ஆண்டுக்கு ரூ.1.67 லட்சமாக உள்ளதாக, மாநில அரசின் பொருளாதார மற்றும் புள்ளிவிவர அமைப்பின் தரவு காட்டுகிறது.

தனியார் மருத்துவக்கல்லூரிகளில், 50% அரசு ஒதுக்கீட்டிற்கான -அதாவது ‘சொந்த மாநில மாணவர்கள்’ (மாநிலத்தவர்கள்) கட்டணம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு ரூ.134 லட்சத்தில் இருந்து ரூ. 18.55 லட்சம் (38%) உயர்த்தப்பட்டது. நிர்வாக ஒதுக்கீட்டிற்கு -- மாணவரின் நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு) தரவரிசைகளின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் தங்கள் அளவில் நிரப்பிக்கொள்ள சுதந்திரம் உள்ள இடங்கள்) பாடநெறி கட்டணம் இப்போது ரூ.37.3 லட்சத்திற்கு பதிலாக ரூ. 47.7 லட்சம் (18%) உயர்ந்துள்ளது.

இதில் மாணவர்களின் சராசரி மாதச்செலவு ரூ. 10,000 முதல் ரூ. 12,000 வரை தங்குமிடம், புத்தகங்கள், உணவு போன்றவை அடங்கவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் பஞ்சாப் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 479% கட்டண உயர்வு கண்டுள்ளது (அட்டவணை 1). 2010 ஆம் ஆண்டில், அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் கட்டணம் ரூ.68,000ல் இருந்து ரூ.1.35 லட்சமாக உயர்த்தப்பட்டது, இது 2015 ல் ரூ. 4.4 லட்சமாக உயர்த்தப்பட்டது.

ஜூன் 4 ம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் ஓம் பிரகாஷ் சோனி, சமீபத்திய கட்டண உயர்வை நியாயப்படுத்தினார். ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) மற்றும் பாரதிய ஜனதா (பாஜக) கூட்டணி அரசு காலத்தில் இந்த உயர்வு இன்னும் அதிகமாக - 2010 ல் 98% மற்றும் 2015 இல் 225% என இருந்தது.

அரசியல் விளையாட்டு தொடர்ந்தாலும், உத்தரகண்டில் மூன்று அரசு மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே அதிக வருடாந்திர கட்டணம் - முறையே ரூ. 4 லட்சம் முதல் ரூ. 4.26 லட்சம் மற்றும் முறையே ரூ. 3.85 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் என்று, 2019-20 கல்வியாண்டு கட்டண முறைகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாபில் மருத்துவக் கல்லூரிகளில் நுழையும் மாணவர்களின் சமூக-பொருளாதார நிலை குறித்த அரசின் எந்த அறிக்கையையும் இந்தியா ஸ்பெண்டால் கண்டறிய முடியவில்லை; பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் 2008 ஆம் ஆண்டின் (ஜஸ்விந்தர் சிங் பிரார், ரஞ்சித் சிங் குமன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோரின் ) ஆராய்ச்சி திட்டம் அந்த ஆண்டு மருத்துவப்படிப்புகளில் நுழைந்த மொத்த மாணவர்களில் வெறும் 4.27% கிராமப்புற பின்னணியை சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டியது, 62.5% மாநில மக்கள் தொகை கிராமப்புறங்களில் வாழ்கிறது.

இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதா அல்லது குறைந்துவிட்டதா, ஆதரவு உள்ளதா என்பதை அறிவதற்கான ஆய்வு எதுவும் இல்லை; ஆனால் ஒட்டுமொத்த நிலைமை கிராமப்புற மாணவர்களுக்கு சாதகமாகத் தொடர்கிறது என்று பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் பிரார் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் 2006ம் ஆண்டின் மற்றொரு ஆராய்ச்சித் திட்டம், நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியபோது, சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை உயர்கல்வியைப் பெறுவதில் இருந்து, திறமையான மற்றும் கடின உழைப்பாளிகள்கூட ‘விலக்கும் செயல்முறை’யை துரிதப்படுத்தியது என்று குறிப்பிட்டார்.

ஆய்வின் கண்டுபிடிப்புகள் பொருத்தமானவை என்று ஆய்வின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், தற்போது சண்டிகரின் கிராமப்புற மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் (CRRID) பொருளாதார பேராசிரியருமான குமான் கூறினார். பல ஆண்டுகளாக கட்டணம் உயர்ந்து வருவதால், இருப்போர் மற்றும் இல்லாதவர்கள் இடையிலான இடைவெளி விரிவடைந்துள்ளது. “பஞ்சாபில் உயர்கல்விக்கான யூனிட் செலவு” குறித்து 2007 ஆம் ஆண்டில் புதுடெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்களின் சங்கத்திற்காக நாங்கள் மேலும் ஒரு ஆய்வை மேற்கொண்டோம், இது பஞ்சாப் குடும்பங்களில் 10% முதல் 15% மட்டுமே எம்.பி.பி.எஸ் படிப்பின் கட்டணத்தை ஏற்க முடியும் என்பதை வெளிப்படுத்தியது. அதன் பின்னர் நிலைமை மோசமடைந்தது” என்றார்.

இந்திய மருத்துவச்சங்கத்தின் (IMA - ஐ.எம்.ஏ) பஞ்சாப் பிரிவு மருத்துவ மாணவர் நெட்ஒர்க் (MSN - எம்.எஸ்.என்) சமீபத்திய கட்டண உயர்வு குறித்து வழங்கிய விளக்கக்காட்சி - அவர்களின் எதிர்ப்பை பதிவு செய்ய - அளித்த விவரங்கள், 2019 ஆம் ஆண்டில், பஞ்சாப் மாநிலத்தில் பங்கேற்க விண்ணப்பித்த 4,560 பேரின் மருத்துவச்சேர்க்கைக்கான செயல்முறை - "கலந்தாய்வு" என்று அழைக்கப்படும் இது - 30% "கீழ்-நடுத்தர வருவாய் பிரிவினரிடம் இருந்து" இருந்து வந்தது.

Latest Fee Hike Puts MBBS Fee In Punjab Govt Colleges Among Highest Nationwide
State/UT Govt Colleges Seats Highest Annual Fee
Uttarakhand 4 525 426,500
Tamilnadu 26 3650 400,000
Punjab 4 650 150,000
Puducherry 2 380 137,000
Madhya Pradesh 14 2040 117,850
Andaman & Nicobar 1 100 116,650
Goa 1 180 112,500
Maharashtra 25 4330 105,045
Delhi 8 1222 101,000
Karnataka 19 2900 100,000
Haryana 5 710 100,000
Telangana 11 1790 100,000
West Bengal 19 3050 100,000
Rajasthan 15 2700 82,200
Andhra Pradesh 13 2410 77,100
Tripura 1 125 75,100
Dadra & Nagar Haveli 1 150 60,100
Himachal Pradesh 6 720 60,000
Uttar Pradesh 26 3178 54,600
Mizoram 1 100 50,550
Chhattisgarh 7 770 50,000
Bihar 10 1240 50,000
Arunachal Pradesh 1 50 43,000
Kerala 10 1555 35,000
Assam 7 1000 31,000
Odisha 8 1250 30,000
Gujarat 17 3650 28,754
Chandigarh 1 150 25,000
Manipur 2 225 9,200
Jharkhand 7 630 9,130
Meghalaya 1 50 6,020

Source: Medical Council of India, Medical Council Committee
Note: Number of colleges and seats as of March 31, 2020. Figures for fee are the highest annual fee in each state for the 2019-20 academic year. Figure for Punjab is the fee for the first year under the revised structure

மருத்துவக்கல்லூரிகள்: அரசு VS தனியார்

ஏழை ஆனால் தகுதியான மாணவர்களை மருத்துவக்கல்வியில் இருந்து தவிர்ப்பது என்பது, 1990ம் ஆண்டுகளில் தொடங்கியது; அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளை விரிவுபடுத்துவதற்கு பதிலாக, தனியார் கல்லூரிகளையும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் வர அனுமதிப்பதன் மூலம் மருத்துவக்கல்வியை தனியார்மயமாக்குவதை நோக்கி நகர்ந்தது என்று, பொது சுகாதார ஆர்வலரும், ஃபரிட்கோட்டின் பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளருமான பியரே லால் கார்க் கூறினார்.

வட இந்தியாவின் பழமையான மருத்துவக்கல்லூரியான அமிர்தசரஸ் அரசு மருத்துவக்கல்லூரி (GMC), லாகூரில் ஒரு மருத்துவப்பள்ளியாக 1864ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, 1920ம் ஆண்டில் அமிர்தசரசுக்கு இடம் பெயர்ந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, மற்றொரு மருத்துவக்கல்லூரி 1953ம் ஆண்டில் பாட்டியாலாவில் அமைக்கப்பட்டது; அதைத்தொடர்ந்து 1973 ஆம் ஆண்டில் ஃபரிட்கோட்டில் குரு கோபிந்த் சிங் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை (GGSMCH) நிறுவப்பட்டது.

அதன்பிறகு, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அரசு எந்த மருத்துவக்கல்லூரியையும் கட்டவில்லை; எஸ்.ஏ.எஸ். நகர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மாநில மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அமரீந்தர் சிங் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார்.

மறுபுறம், இரண்டரை தசாப்தங்களில் மாநிலத்தில் ஐந்து தனியார் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டன; அவற்றில் ஒன்று, பதான்கோட்டில் உள்ள சிந்த்பூர்ணி மருத்துவக்கல்லூரி, 2017 நவம்பர் மாதத்தில் தரம் தொடர்பான பிரச்சினையால் மூடப்பட்டது. பாட்டியாலாவில் உள்ள கியான் சாகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை என்ற மற்றொரு தனியார் கல்லூரி, 2017 மே மாதம் மூடப்படக்கூடிய விளிம்பில் இருந்தபோது, மருத்துவக்கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கான கட்டாயத் தேவையான ‘அத்தியாவசிய சான்றிதழ்’ நடைமுறையை மாநில அரசு திரும்பப் பெற்றது. கல்லூரியின் எம்பிபிஎஸ் மாணவர்கள் அமிர்தசரஸ், பாட்டியாலா மற்றும் ஃபரிட்கோட் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். கல்லூரி அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தியவுடன், ஒரு எம்.சி.ஐ குழு 2020-21 அமர்வுக்கு 150 மாணவர்களை அனுமதிக்கும் முன்பு, 2020 ஜனவரியில் அதன் வசதிகளை ஆய்வு செய்தது, மேலும் அரசு அதன் அத்தியாவசிய சான்றிதழ் தேவையை மீண்டும் கொண்டு வந்தது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த கல்வி ஆண்டுக்கு 1,425 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கின்றன, அவற்றில் 650 அரசு கல்லூரிகளிலும், 775 தனியார் கல்லூரிகளிலும் உள்ளன என்று எம்சிஐ தரவுகள் தெரிவிக்கின்றன.

உள்கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன

பஞ்சாப் முதல்வரின் அலுவலகம் பதிவிட்ட ட்வீட் ஒன்றில், மாணவர்களுக்கு சிறந்த மருத்துவக்கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக, கட்டணத்தை அமைச்சரவை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,கட்டண உயர்வு இருப்பினும் அதனுடன் இணைந்து மருத்துவக்கல்வியின் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தரம் மேம்படவில்லை என்று, முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல், எம்.டி (டாக்டர் ஆஃப் மெடிசின்) மற்றும் எம்.எஸ். (மாஸ்டர் ஆஃப் சர்ஜரி) படிப்புகளுக்கான கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று ஜி.எம்.சி பாட்டியாலாவின் மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ககன்தீப் சிங் தெரிவித்தார். ஆனால் "எங்களுக்கு ஒரே மாதிரியான மோசமான விடுதி நிலைமைகள் மற்றும் மோசமான சிகிச்சை வசதிகளே உள்ளன" என்றார்.

எம்.சி.ஐ.யின் புதிய பாடத்திட்டத்திற்கு அதிநவீன விரிவுரை அரங்குகள், புதுப்பிக்கப்பட்ட நூலகங்கள், ஆய்வகங்கள் தேவை, இதற்கு கோடிக்கணக்கில் முதலீடு தேவைப்படுகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத பஞ்சாப் மாநில மருத்துவ மற்றும் பல் ஆசிரியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறினார். ஆனால் கட்டண உயர்வு இருந்தும்கூட இதுபோன்ற முதலீடு செய்யப்படவில்லை என்று மருத்துவர் கூறினார்.

அதிக கட்டணம், குறைவான அரசு மருத்துவர்கள்

அதிக கட்டணம் வசூலிப்பது, மருத்துவத்துறையில் இருந்து ஏழை மாணவர்களை விலக்குவது மட்டுமின்றி, அதனால் சமூக-பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கிறது; ஒப்பீட்டளவில் குறைந்த ஊதியம் பெறும் அரசு வேலைகளில் சேருவதில் இருந்து பெரும் கட்டணம் செலுத்திய பின்னர் பட்டம் பெறும் மருத்துவர்களைத் தடுக்கும் என்று சி.ஆர்.ஆர்.ஐ.டி-இன் குமான் கூறினார்.

மருத்துவக்கல்விக்கு அதிக செலவுகள், குறைந்த அரசு சம்பளம், அரசு மருத்துவமனைகளில் ஒழுங்கற்ற முறையில் பணம் செலுத்துதல் மற்றும் அரசு மருத்துவ வேலைகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இல்லாததால் மக்கள் அரசு மருத்துவ நிறுவனங்களில் சேர விரும்புவதில்லை என்று, புதுடெல்லியை சேர்ந்த ஆசிய அபிவிருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் அருண்குமார் திவாரி, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தது, இந்த ஜூலை 2020 கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

"மருத்துவக்கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் அரசின் முதலீடு என்பது நீண்ட காலமாக தேக்கமடைந்துள்ளது அல்லது கணிசமாகக் குறைந்துவிட்டது," என்று, பஞ்சாப் அரசு மருத்துவர்கள் சங்கமான பஞ்சாப் சிவில் மருத்துவச்சேவை (PCMS) சங்கத்தின் தலைவர் ககன்தீப் சிங் கூறினார். "மாறாக, தனியார் மருத்துவக்கல்வி நிறுவனங்களில் தரம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தபோதும், அது உயர்த்தப்பட்டு, செழிக்க அனுமதிக்கப்படுகிறது; இது உயர் அடுக்கினருக்கு மட்டுமே சேவை செய்யும் என்பதை நன்கு அறிந்திருக்கிறது" என்றார் அவர்.

இது, பல மாணவர்களிடம் இருந்து மருத்துவக்கல்வியை பறிப்பதோடு, சாதாரண மக்களுக்கு விலை உயர்ந்த சுகாதாரச்சேவையை சுமத்துகிறது என்று அவர் கூறினார். “ஏற்றத்தாழ்வு இருப்பது ஏற்கனவே தெரியும்; அனைத்து பெரிய மற்றும் தரமான சுகாதாரச்சேவைகளும் பெரிய நகரங்களில் குவிந்துள்ளன; அதே நேரத்தில் கிராமங்கள் மற்றும் சிறு நகர அளவில் உள்ள மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையைக் கொண்டுள்ளன” என்றார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ பயிற்சியாளர்களையும் பதிவு செய்யும் அதிகாரப்பூர்வ அமைப்பான பஞ்சாப் மருத்துவக்கவுன்சில் (PMC) 1947 முதல் பஞ்சாபில் 55,000 மருத்துவர்களை பதிவு செய்துள்ளது; இருப்பினும், தற்போதைய பதிவு 15,000-க்கு மேல் இல்லை என்று அதன் பதிவாளர் ஆகாஷ் தீப் அகர்வால் கூறினார். “ஆனால் மருத்துவர்களின் உண்மையான [செயலில்] வலிமை 20,000 முதல் 25,000 வரை வேறுபடலாம்; ஏனென்றால் பலர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தங்கள் கட்டாயப்பதிவை புதுப்பிக்க மாட்டார்கள் [சிலர் பி.எம்.சிக்கு தெரிவிக்காமல் மாநிலத்தையோ அல்லது நாட்டையோ விட்டுச் சென்றிருப்பார்கள்]” என்றார்.

மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள மருத்துவர்கள் 25,000 என கணக்கிடப்பட்ட எண்ணிக்கை கருதப்பட்டாலும், உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையான 10,000 பேருக்கு 10 மருத்துவர்கள் என்பதற்கு எதிராக பஞ்சாபில் 10,000 பேருக்கு 8.3 மருத்துவர்கள் --இது 30.5 மில்லியன் என்ற மக்கள் தொகைக்கான மதிப்பீட்டில் -- உள்ளனர். இது மார்ச் 2020ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியபடி, இந்தியாவின் சராசரியாக 10,000 க்கு 8.57 மருத்துவர்களை விடவும் குறைவாக உள்ளது.

இந்தியாவின் மருத்துவர்கள் கிடைப்பது 2000 ஆம் ஆண்டில் 5,55,600 லிருந்து 2018ம் ஆண்டில் 11.6 லட்சம் என இரு மடங்காக உயர்ந்துள்ள போதும், உலக சுகாதார அமைப்பின் 2020 புள்ளிவிவரங்களின்படி, உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளில் 40% கட்டாய மருத்துவர் - மக்கள்தொகை விகிதத்தை பூர்த்தி செய்யாத நாடுகளின் வரிசையில் தான் இன்னும் நாடு உள்ளது. இந்தியாவில் 6,00,000 மருத்துவர்கள் மற்றும் 20 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது என்று, அமெரிக்காவை சேர்ந்த சுகாதார ஆராய்ச்சி அமைப்பான, நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய சுகாதார புலனாய்வுப்பிரிவின் தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 10 அலோபதி மருத்துவர்கள் ஒருவர் அரசு மருத்துவமனைகளில் சேர்கின்றனர்.

பஞ்சாபின் போக்கு வேறுபட்டதல்ல. மாநிலத்தில் உள்ள மூன்று அரசு மருத்துவக்கல்லூரிகளில் -- அதாவது ஜி.எம்.சி அமிர்தசரஸ், ஜி.எம்.சி பாட்டியாலா மற்றும் ஜி.ஜி.எஸ்.எம்.சி.எச். ஃபரிட்கோட் -- மருத்துவர் பணியிடங்களில் 33% காலியாக உள்ளதாக, மார்ச் 2020 பட்ஜெட் அமர்வின் போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த மாநில மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சோனி தெரிவித்தார்.

பொது சுகாதாரம் மற்றும் அரசு மருத்துவமனைகள் என்பது மாநிலம் சார்ந்த விஷயமாகும்; பொது சுகாதார மருத்துவமனைகளில் மருத்துவர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு, மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்ளது.

சுகாதாரத்துறையிலும் 500 மருத்துவ அதிகாரிகள் (பொது), 328 மருத்துவ அதிகாரிகள் (நிபுணர்), 35 மருத்துவ அதிகாரிகள் (பல்) உட்பட மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் 863 மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, ஜூன் 30 அன்று மாநில அரசால் வெளியிடப்பட்ட பத்திரிக்கை குறிப்பு தெரிவிக்கிறது. இது ஏறக்குறைய 20% காலியிடங்கள் என்று பஞ்சாப் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அரவிந்தர் கில் தெரிவித்தார்.

தற்போதைய கோவிட் -19 சுகாதார நெருக்கடியை அடுத்து, சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்ப, மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

எனினும், கட்டண உயர்வு எதிர்மறை விளைவை ஏற்படுத்தக்கூடும். பி.சி.எம்.எஸ் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் இந்திரவீர் சிங் கில் கூறுகையில், அரசால் உருவாக்கப்படும் மருத்துவர்கள் ஒருபோதும் திரும்பி வர மாட்டார்கள் என்றார். "இந்த போக்கு, இறுதியில் மாநிலத்தின் கிராமப்புற சுகாதார சேவைகளை மோசமாக்கும் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார அமைப்புகளுக்கு இடையிலான இடைவெளியை விரிவாக்கும்" என்றார்.

மருத்துவர்கள் எங்கே போகிறார்கள்?

மருத்துவக்கல்லூரிகளில் புதிதாக பட்டம் பெற்ற பெரும்பாலான மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள் அல்லது தனியார் துறையில் வேலை தேடுகிறார்கள்; ஏனெனில் அரசுத்துறையில் ஊதியம் குறைவாகவும், பணிச்சூழல் மோசமாகவும் உள்ளதாக ஃபரிட்கோட்டின் ஜி.ஜி.எஸ்.எம்.சி.எச். ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அமர்பீர் சிங் போபராய் தெரிவித்தார். .

"அரசு திறமையாளர்களை ஈர்க்க விரும்பினால், நல்ல சம்பளத்தை வழங்க வேண்டும்," என்ற அவர், "அத்துடன், கிராமப்புற அல்லது பின்தங்கிய பகுதிகளில் [நகர்ப்புறங்களில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது] நியமிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு அதிக சம்பளம் தரப்பட வேண்டும்" என்றார்.

இருப்பினும், மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சேர கவர்ச்சிகர சம்பளம் மற்றும் சலுகைகள் மட்டுமே காரணமல்ல. தனியார் மருத்துவமனைகளில் சிறந்த நோயறிதல் வசதிகள் உள்ளன, அங்கு மருத்துவர்கள் படிப்படியாக தங்கள் திறன்களை மேம்படுத்துவதோடு சிறந்த கற்றல் அனுபவத்தை பெறுகின்றனர் என்று ஐ.எம்.ஏ-வின் சண்டிகர் பிரிவு தலைவர் ராஜேஷ் திர் கூறினார். “மாறாக, சுகாதாரத்துக்காக அரசின் செலவு மிகக்குறைவு. அவர்கள் தங்களது விநியோக முறையை மேம்படுத்த வேண்டும்; மருத்துவர்களை தக்க வைக்க விரும்பினால் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்றார் அவர்.

தனியார் மருத்துவமனைகளில் வசதியான பணிச்சூழல், அங்கு அதிகமான மருத்துவர்களை ஈர்க்கின்றன என்று ஐ.எம்.ஏ மாநிலத்தலைவர் நவ்ஜோத் சிங் மீண்டும் வலியுறுத்தினார். "மாநில அரசு தனது எம்.பி.பி.எஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்; அதன் மருத்துவக்கல்லூரிகளில் இருந்து வெளியேறுபவர்கள் அரசு சுகாதாரப்பாதுகாப்பு முறையின் புல்வேர்களை வலுப்படுத்த கிராமப்புற அல்லது பகுதி கிராமப்புறங்களில் இரண்டு ஆண்டுகள் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும்," என்று அவர் பரிந்துரைத்தார். தனியார் கல்லூரிகளின் கட்டணக் கட்டமைப்பை பஞ்சாபின் ஆராய்ச்சி மற்றும் மருத்துவக்கல்வி இயக்குநரால் அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.

(குப்தா, சண்டிகரை சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர். இக்கட்டுரையை பூஜா வஷிஷ்ட் அலெக்சாண்டர் திருத்தியுள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.