புதுடெல்லி: ‘தூய்மை கங்கை’ திட்டத்தின் கீழ் கங்கை நதியை வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் சுத்தப்படுத்த காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், இதற்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.20,000 கோடியில், 25%க்கும் குறைவான நிதியே செலவிடப்பட்டுள்ளது; எஞ்சியது 2019-ல் செலவிடப்பட வேண்டும் என்று, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நமாமி கங்கே’ அதாவது ‘தூய்மை கங்கை’ திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.4,800 கோடி செலவிடப்பட்டுள்ளது; 2018 நவம்பருடன் முடிந்த நான்கு ஆண்டுகளில் கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளான யமுனா, சம்பல் ஆகியவற்றை தூய்மைப்படுத்த, இந்த நிதி பயன்படுத்தியதாக மக்களவையில் (நாடாளுமன்ற கீழவை) 2018, டிசம்பர் 14ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2018 அக்டோபர் மாதத்தின்படி, ரூ. 4,800 கோடியில் ரூ.3,700 கோடி அல்லது 77% நிதியில் 11% கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களில் கங்கை நிதியில் கழிவுநீர் கலக்குமிடங்களில் கூடுதலாக தேவையாக அமைக்கப்பட்டது, திட்டத்தின் மாதாந்திர அறிக்கையை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

இத்திட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 96 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2018 அக்டோபர் மாதத்தின்படி, 23 அல்லது 24% நிலையங்களே கட்டி முடிக்கப்பட்டுள்ளன; 44 (24%) பணிகள் நடைபெற்று வருகின்றன; 29 (30%) இன்னும் தொடங்கப்படவே இல்லை.

இமயமலையில் உற்பத்தியாகி, வட இந்தியாவில் 2,500 கி.மீ. பாயும் கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது, 1986ஆம் ஆண்டிலேயே தொடங்கி, அடுத்தடுத்து வந்த அரசுகளின் திட்டங்களாகவும் இருந்து வந்தன; 2014 வரை இத்திட்டத்திற்கு ரூ.4000 கோடி வரை செலவிடப்பட்டது.

ஆனால், கங்கை தொடர்ந்து மாசடைந்து வருகிறது.

2019ஆம் ஆண்டுக்குள் கங்கையை தூய்மைப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மிகப்பெரிய திட்டமான ‘தூய்மை கங்கை’ திட்டத்தை 2015-ல் தொடங்கியதோடு, பட்ஜெட்டில் ரூ.20,000 கோடியையும் ஒதுக்கியது. இத்திட்டம் தற்போது 2020ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Source: Lok Sabha
Note: Rs 679.15 crore was spent on other activities (Rs 52.56 crore in 2015-16, Rs 121.12 crore in 2016-17, Rs 271.56 crore in 2017-18 and Rs 233.91 crore in 2018-19)

ஆற்றில் எந்த தூய்மையும் இல்லை

2013ஆம் ஆண்டில் இருந்து கங்கையில் அசுத்தம் அதிகரித்திருப்பது, 80 கண்காணிப்பு தளங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை சுற்றுச்சூழல் ஆணைய தகவலை மேற்கோள்காட்டி, தி வயர் 2018, அக். 20-ல் செய்தி வெளியிட்டிருந்தது.

உயிரியக்க ஆக்ஸிஜன் தேவை- பி.ஓ.டி. (BOD), அதாவது தண்ணீரில் வேண்டாத கரிம பொருளை உடைக்க தேவையான உயிரி செயல்பாட்டுக்கான கரைந்த ஆக்ஸிஜன் அளவானது, 80 இடங்களில் 36 இடங்களில் 3 மில்லிகிராம் / லிட்டர் (mg/l) எனவும்; மற்ற 30 இடங்களில் 2-3 மில்லி கிராம்/ லிட்டர் எனவும் 2017-ஆம் ஆண்டில் காணப்பட்டது. இது 2013ஆம் ஆண்டில், 31 இடங்களில் 3 மில்லி கிராம்/ லிட்டர்; 24 இடங்களில் 2-3 மில்லி கிராம்/ லிட்டர் என்பதைவிட அதிகமாகவே இருந்தது என்று தி வயர் செய்தி தெரிவித்துள்ளது.

தண்ணீரில் அதிகபட்ச பி.ஓ.டி. இருப்பது, ஆற்றுக்கும் அதை சார்ந்துள்ள உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகும். தண்ணீரில் பி.ஓ.டி. 2-3 மில்லி கிராம்/ லிட்டர் என்றிருந்தால், அது பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல. அதை சுத்திகரிக்காமல் பயன்படுத்தினால் நோய் ஆபத்து ஏற்படும். பி.ஓ.டி. 3 மில்லி கிராம்/ லிட்டர் என்ற அளவில் இருக்கும் தண்ணீர் குளிப்பதற்கு கூட உகந்தது அல்ல.

திட்டங்களின் மெதுவான முன்னேற்றம்

கங்கை நதியின் மாசுபாட்டுக்கு முக்கிய காரணம், நகரங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்றுவது தான். கங்கை ஆற்றியில் தினமும் 2,900 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு (எம்.எல்.டி.) கழிவுநீர் கலக்கிறது. இதில் 48% அல்லது 1,400 எம்.எல்.டி. மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாக, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடைவெளியை நிரப்பும் வகையில், தூய்மை கங்கை திட்டத்தில் மத்திய அரசு 1,500 எம்.எல்.டி. (வெளியேற்றுவதில் 52%) தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் நிலையங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், 2018 அக்.31ஆம் தேதி வரை 172 எம்.எல்.டி. அல்லது 11% சுத்திகரிப்புகான பணிகளே முடிந்துள்ளன.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.