மாதவிடாய்க்கு தயாராகாத பெரும்பாலான இந்திய பெண்கள்; சுகாதாரமற்ற நடைமுறைகளுக்கு காரணமாகிறது

Update: 2019-01-23 00:30 GMT

சென்னை: கலா, தனது முதல் மாதவிடாயை சந்தித்தபோது அவருக்கு வயது 11. வீட்டில் முழுஆண்டு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த அவர், தனக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கடும் பீதியடைந்தார்.

“எனது முதல் பிரதிபலிப்பே பீதியாகத் தான் இருந்தது” என்று, பழைய சம்பவங்களை நினைவு கூர்கிறார் கலா (அடையாளம் பாதுகாக்க அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது); தற்போது கல்லூரி மாணவியான அவர், கோயம்புத்தூரை சேர்ந்தவர். “எனக்கு பயங்கரமான நோய் ஏற்பட்டுவிட்டதாக நினைத்தேன்; இறக்க போகிறேன் என்று நினைத்தேன்; என் தேர்வுகள் என்னவாகுமோ என்று கவலைப்பட்டேன். டாக்டரிடம் அழைத்துச் செல்லுமாறு அப்பாவிடம் கேட்கலாம் என்று நினைத்தேன்” என்ற கலா, தனது அம்மாவை பீதியோடு அழைத்துள்ளார்.

“ஆனால், என் அம்மா வரவில்லை” என்ற கலா, அதற்கு பதில் பக்கத்து வீட்டு வயதான பாட்டி வந்ததாக கூறுகிறார். ”பரபரப்புக்கு மத்தியில் என்னை குளிக்க வைத்தனர்; பின்னர் அருகேயுள்ள ஓலைக்குடிசை அறைக்கு அழைத்து சென்று, ஏற்கனவே தயராக இருந்த மரப்பலகையில் உட்கார வைத்தனர்; அங்கிருந்து எங்கும் நகரக்கூடாது என்று அறிவுறுத்தினர்” என்கிறார் கலா.

கலாவுக்கு கொஞ்சம் உணவு, தண்ணீர் கொடுத்துவிட்டு தனிமையில் விட்டு சென்றது. அந்நேரம், அம்மாவை பார்ப்பதற்கு முந்தைய மாலைப்பொழுது.

“எனக்கு ஆறுதல் கூறி வீட்டுக்கு அழைத்து செல்வதற்கு பதில், என் அம்மா என்னிடம் வந்து நீ பெரிய பெண்ணாகிவிட்டாய்; இனி அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளோடு விளையாடக்கூடாது என்று அறிவுறுத்தினார்” என்று கலா தெரிவித்தார்.

கலாவின் கதையானது கிராமப்புற தமிழ்நாட்டில் விசித்திரமானதோ, அல்லது எங்கோ ஒன்று நடப்பதல்ல; தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப்பணிகள் உறுதுணை திட்டம் (TNUSSP), பெங்களூருவில் உள்ள மனிதவள தீர்வுகளுக்கான இந்திய நிறுவனத்தின் (IIHS) ஆதரவோடு, மாதவிடாய் சுகாதாரம் குறித்து மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. அறியாமை மற்றும் மூடநம்பிக்கையால் மாதவிடாய் சுகாதாரம் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பது, கோயம்புத்தூர் நகரின் அருகேயுள்ள பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில், பெண்கள் பூப்பெய்தும் பருவதுக்கு தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொள்ளாதது தெரிய வருகிறது. நேர்காணல் செய்யப்பட்ட இளம் பெண்களில் 84% தாங்களின் முதல் மாதவிடாயின் போது ஆச்சரியமடைந்ததாக தெரிவித்தனர்.

இனப்பெருக்க குழாய்களில் தொற்று உள்ள பெண்களில் 60% பேருக்கு, மாதவிடாய் சுகாதாரமின்மையே காரணமாக இருந்துள்ளது என, 2012 ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதி ஆய்வு தெரிவிக்கிறது. 15% பெண்கள் மட்டுமே வணிக ரீதியான சானிடர் நாப்கின் பயன்படுத்துகின்றனர்; எஞ்சிய 85% பேர், வீட்டு தயாரிப்புகளையே உபயோகிப்பதாக, மாதவிடாய் சுகாதார நடைமுறைகள் குறித்த 2015 ஆய்வு தெரிவிக்கிறது. இத்தகைய வீட்டு தயாரிப்பானது சாம்பல், உமி, சில நேரங்களில் மணல் போன்றவற்றை துணியில் சுற்றி தயாரிப்படுவது, ஆய்வு நேர்காணல்களில் வெளிப்படுகிறது.

துணி பேடுகளை கழுவி உலர்த்தாவிட்டால் தொற்று நோய் ஆபத்து

ஒரேயொரு மாதவிடாய்க்கான துணி பேடின் விலை ரூ.3ல் இருந்து ரூ.10 வரை இருப்பது, மாதவிடாய் சுகாதார முறைகளை நிர்ணயிக்கும் ஒரு காரணியாக உள்ளது. ஆனால் கடையில் வாங்கும் சானிடரி நாப்கின் பேடுகள் பற்றிய தவறான கருத்துகளும் உள்ளன. "என் மகளை ஒரு பேடை கூட பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன்," என்று, பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தா நகர் குடிசைப்பகுதியை சேர்ந்த 45 வயது இல்லத்தரசி லலிதா (அடையாளம் தெரியாமல் இருக்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார். “இது உடல் சூட்டை அதிகரிக்கிறது. துணி பேடு பாதுகாப்பானது. துணியை பயன்படுத்த வேண்டும் என்று என் தாய் சொல்லித்தந்ததை நான் என் மகளுக்கு கூறுவேன்” என்கிறார் அவர்.

இந்திய பெண்களில் 57.6% பேர் மட்டுமே -- கிராமங்களில் 48.5%, நகர்ப்புறங்களில் 77.5% பேர் சானிடரிநாப்கின் பயன்படுத்துகின்றனர் என்று, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-16 (NFHS-4) அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும் துணி பயன்பாட்டில் சுகாதாரம் காக்கப்படாவிட்டால், அதுவே சில பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடும். பெரும்பாலும் மாதவிடாய் துணிகளை துவைக்க, போதிய தண்ணீர் இல்லாதது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தண்ணீர் அதிகமுள்ள இடங்களில் கூட, மாதவிடாய் பற்றிய ரகசியம் காக்க வேண்டி, அந்த துணிகளை சுத்தம் செய்ய, உலர வைக்க பெண்கள் தயங்குகின்றனர். அவற்றை வெளியே உலர வைப்பதற்கு பதில், கழிப்பறைக்குள் சில நேரங்களில் தரை விரிப்புகளுக்கு அடியில் அதை உலர வைக்கின்றனர்.

“மாதவிடாயில் இருக்கிறோம் என்று ஒவ்வொருக்கும் தெரியப்படுத்துவது எப்படி” என்பது பொதுவானது

மாதவிடாய் காலங்களில் சானிடரி நாப்கின் பயன்படுத்துவோரை விட, துணிகளை பயன்படுத்துவோருக்கு கருப்பை குழாய், சிறுநீர் குழாயில் நோய் தொற்று இருமடங்கு அதிகம் இருப்பது, ஒடிசாவில் 486 பெண்களிடம் நடத்திய 2015 ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மாதவிடாய் சுழற்சி காலம் பெண்களுக்கு 5 நாள் சிறைவாசம்

தமிழ்நாட்டின் கோத்தகிரியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள, 49 மலைவாழ் குடும்பங்கள் வசிக்கும் பனகுடி கிராமத்திற்கு சென்றோம். நீலகிரி மலைவாழ் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில், 40 ஆண்டுகளுக்கு முன் அவர்கள், இப்பகுதிக்கு மாற்றப்பட்டனர். இங்கு மாதவிடாய் நடைமுறைகள் மூட நம்பிக்கையோடு தொடர்கின்றன.

“ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தொடங்கியதும், அவர் குடியிருப்பின் ஒதுக்குப்புறம் உள்ள ஓலை குடிசைக்கு அழைத்து செல்லப்படுகிறார்; அங்கு அவர் ஐந்து நாட்கள் இருந்தாக வேண்டும்” என்று, தனது முகத்தை புடவையால் மறைந்தபடி, 38 வயது புஷ்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். ”ஐந்து நாட்களுக்கு பின் குளித்த பிறகே அவள், எல்லோருடன் ஒன்றாக முடியும். நான் சிறுமியாக இருந்த போது, இதுபற்றி எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை; ஒன்றும் தெரியாத நிலையில் நானும் என் மகளுக்கு இதுபற்றி கூறவில்லை; அவளாகவே இதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

இத்தகைய 'பெரிய தகவல் இடைவெளி' என்பது மாதவிடாய் சுகாதாரம் பற்றிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற பருவ வயதுள்ள பெண்களிடையே பரவலாக உள்ளது என, 2014 ஆய்வு தெரிவிக்கிறது. நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நாங்கள் நடத்திய உடையாடலில், திருமணமான பெண்களுக்கும் கூட இதில் வேறுபாடு இல்லை என்பது தெரிய வந்தது. பாலவிநாயகர் நகர் குடிசைப்பகுதியை சேர்ந்த 26 வயது நாகவேணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மாதவிடாய் காலங்களில் தனது கணவரிடம் நாப்கின் வாங்கித்தருமாறு கேட்டதில்லை என்கிறார்.

அரசு தரும் சானிடரி நாப்கின்கள் தரமற்று உள்ளன

தமிழக அரசின் புதுயுகம் (புதிய சகாப்தம்) திட்டத்தின் கீழ், வளரிளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கும் பணி, மாதவிடாய் சுகாதார மேலாண் திட்டத்தின் கீழ், 2011ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. இதில், கிராமப்புற, நகரப்பகுதிகளில் உள்ள 11- 19 வயதுடைய வளரிளம் பெண்களுக்கு 20 சானிடரி நாப்கின் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை, 88,000 வளரிளம் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கப்பட்டுள்ளன; ஆனால், இதில் தரமற்றவையும் கலந்துள்ளது என்ற கருத்தும் உள்ளது.

தமிழக அரசின் புதுயுகம் திட்டத்தின்கீழ் வளரிளம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சானிடரி நாப்கின். இது தரமற்று இருப்பதாகவும், ஓரிரு மணி நேரங்களுக்கே பயன்படுவதாகவும், வளரிளம் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும் உள்ளூர் அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“கடைகளில் கிடைக்கும் நாப்கின் பேடுகளை பயன்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். எங்கள் தாய்க்கும் இதையே வழங்குகிறோம்” என்று தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப்பணிகள் உறுதுணை திட்ட (TNUSSP) ஆய்வில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர். இலவசமாக வழங்கப்படும் நாப்கின்கள் தரமற்று உள்ளன; சில மணி நேரங்களுக்கே பயன்படுத்த முடியும் என்று, வளரிளம் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும் உள்ளூர் அங்கன்வாடி பணியாளர்கள் கூறினர். "அரசு திட்டத்தின் கீழ் தரப்படும் நாப்கின் பேடுகளை மட்டுமே முழுமையாக நம்பியிருப்பவர்களுக்கு இது மிகவும் கடினம்," என்று நரசிம்மநாயக்கன்பாளையம் குடிசைப்பகுதியான ஓம்சக்தி நகரை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்தார்.

பிறப்புறுப்பு மற்றும் மகப்பேறியல் பராமரிப்பு, கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு, குடிசைப்பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில், கிராமிய சுகாதார ஊட்டச்சத்து நாள் (VHND) அனுசரிப்பு ஒவ்வொரு மாதமும் இம்மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தப்படவில்லை. "இத்தகைய நாள் என்பது மாதவிடாய் மற்றும் அதன் தூய்மை பற்றிய துல்லிய தகவல்களை பெண்கள் பெறக்கூடிய ஒரு நிகழ்வாக இருந்தது," என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் நம்மிடம் கூறினார்.

சரியாக அகற்றப்படாத பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள்

பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அகற்றுவது பற்றி விவாதிக்காமல், மாதவிடாய் சுகாதாரம் என்பது முழுமையடையாது. மாதவிடாய் என்றாலே அவமானம், ரகசியமானது என்ற தவறான மனப்பாங்கே, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை தவறாக அப்புறப்படுத்துவதற்கு காரணமாகிறது. துணி நாப்கின்களுக்கு பதிலாக பெரிய அளவில் பயன்படுத்தப்படும் பாலிமெரிக் நாப்கின்கள் மண்ணில் மக்காதவை; இவை நிலங்களில் குவியும் குப்பைகூளங்களால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

நரசிம்மநாயக்கன்பாளையம் போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள், பிற கழிவுகளுடன் போடப்பட்டு பேரூராட்சி எல்லையில் இருந்து 3 கி.மீ.க்கு தள்ளப்படுகிறது. “20 ஆண்டுகளாகவே இந்த நடைமுறை தான் பின்பற்ற படுகிறது” என்று அப்பகுதியில் உள்ள பெயர் கூற விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.

மாதவிடாய் அவமானமானது, ரகசியமானது என்ற எண்ணமே, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை தவறாக அப்புறப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. துணி நாப்கின்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பாலிமெரிக் நாப்கின்கள் மண்ணில் மக்காமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சானிடரி நாப்கின் வழங்குவதோடு மட்டுமின்றி இரும்பு மற்றும் போலிக் அமில மாத்திரைகள் பெண்கள், வளரிளம் பெண்களுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. ஆனால், பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய ரகசியம் காத்தல், அவமானமாக கருதுதல் இன்னமும் உள்ளது. இதை மாற்றியமைக்கும் ஒரே வழி, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வை குடும்பம், சமூகம் மற்றும் சமுதாய அளவில் தொடர்புபடுத்தாகும்.

இத்தகைய மனப்போக்கில் மாற்றங்களை ஆய்வில் உணர முடிந்தது. எனினும் இது குறைவாகவும், பெரும்பாலும் இளம் பெண்கள் மத்தியில் மட்டுமே உள்ளது. “எனக்கு என்ன நடந்ததோ, அது என் மகளுக்கு நடக்காமல் இருக்க வேண்டும்” என்று கவலையோடு கலா கூறுகிறார். “எனது அனுபவங்களே அவளுக்கும் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்கிறார் அவர்.

(இக்கட்டுரை, தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப்பணிகள் உறுதுணை திட்டம் (TNUSSP) உதவியுடன், பெங்களூரு மனிதவள தீர்வுகளுக்கான இந்திய நிறுவனம் (IIHS) பங்களிப்பு அடிப்படையில் எழுதப்பட்டது. தமிழகத்தில் சுகாதார சுழற்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் TNUSSP செயல்பட்டு வருகிறது).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News